Wednesday, September 14, 2016

என் குருதியின் எச்சங்களுக்கு மட்டும் =====•••••=====••••=====••••


என் தட்டில்
கைவைக்காத வரை
அனைத்தும் நலமே..

என் வேட்டிக் கறைகளைப் பற்றி
நீ கவலைப்படாத வரை
உன் கிழிசல்களை
நான் பேசப்போவதில்லை..
என் குடைகளுக்குள்
நீ ஒதுங்காதவரை
எவர் நனைதலைப் பற்றியும்
நான் விசனப்படப் போவதில்லை
என் கண்முன்
குருதி மழையை நீ
இறக்கிக் காட்டலாம்
வாழைத் தண்டாய் என்முன்
யார் வேண்டுமானாலும் சாயலாம்
என்னை
அவை உசுப்பப் போவதில்லை
என் பாதைகளில்
குழிவிழா வரை
அவனவன் பாதைகளும் நன்றே

சாட்சிக் கூண்டுக்குள் ஏறி
நான்
சிக்கிக் கொள்வதிலேயோ
குரலெழுப்பி என் குரல்களைக்
கிழித்துக் கொள்வதிலேயே
நான் உடன்படுவதில்லை ..
எனக்குள்ளும் கருணை உண்டு
ஓர் இரக்கப் பார்வை வரை ..
என் உறவுக்குருதிகள்
என்மேல் தெறித்து விழும்வரை

யார் எப்படிப் போனால்
எனக்கென்ன...


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment