Friday, March 25, 2016

முறிவுகள்






மனங்கள் முறிந்த பிறகு
மணங்கள் உடைந்து விட்டன....
அட்சதை தூவி ஆசிர்வதித்தது அரைநாளில் அஸ்தமனமாய்..... 
ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம் ஆலமரமாய் வாழவேண்டுமென
விவாகத்தை இரத்தாக்கிவிட்டன வெறும்
கறுப்பு ஆடைகள்!

பிரிதலில் உனக்கு விருப்பமோ இல்லையோ
அரைமனதோடு போட்ட கையெழுத்து தலையெழுத்தாய் ஏற்றுக் கொள்ள மறுதலிக்கிறது மனம்...இன்னும்!
மூளைக்குள் முட்களைச் செருகியவர்கள் முணுமுணுக்கிறார்கள்
இப்போது வாழாவெட்டியாம்!
உன் பாதை என் பாதையென பிரித்துக் கொண்ட பிறகு அடிக்கடி நடக்கின்றன விபத்துகள்
ரணங்கள் மருந்தைத் தெரியாமல் இதயமெங்கும்!!
தனிமையின் சதுக்கத்தில் தண்ணீரெல்லாம் சுடுகிறது இரவில்...
உண்மைதான்
நீ சொன்னது இன்னும் செவிகளை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது..
நமது பாதைகள் என்று பிரித்த பிறகு
நாலாந்தர வார்த்தைகள் எல்லாம்
வாசல் வரைதான் என்றாயே
வரவேற்பறை வரைக்கும் அழைத்து வந்தது தவறா....தப்பா.. கேட்டிருக்கலாம்..
நீயாவது.. மீண்டும் சொல்லியிருக்கலாம்
தாமரை இலை மேல் தெறித்து விழும் நீராய்.....
எப்போதாவாது சந்தித்துக் கொள்ளும் நமது புன்னகைகள் கூட ஒட்டாமல் போகின்றன..
இமைக்க மட்டுமல்ல
இம்சிக்கவும் தெரியும் விழிகளுக்கு

ஒவ்வொரு ஞாயிறும் வாசலை எதிர்பார்த்து
சனி இரவே விடிந்து விடுகிறது
என் விழிகள்
குழந்தைகள் விட வரும் உன்னிடம்
மனம் திறந்து பேச மன்றாடுகிறது

காருக்குள் இருந்தே கையசைக்கிறாய் குழந்தைகளிடம்!
ஓரிரு விரல்கள் மட்டும்
உயிரை உரசி விட்டுப் போகின்றன..
நீ உள்ளுக்குள் வந்தாலும்
ஒளிந்து கிடக்கும் வார்த்தைகள்
உதட்டை உடைக்கப் போவதில்லை

வார்த்தைகள்
இரும்புத் திரையாய் இறங்கியிருப்பதாய் இருவருமே நினைத்துக் கொள்கிறோம் குழந்தைகள் புரியாமல் கேட்கின்றன
அடுத்த ஞாயிறு நீ வருவாயா அம்மா...
அப்பா கேட்கச் சொன்னார்..
சிரித்துக் கொண்டே சிலிர்க்கிறேன்

உன் அப்பாவின் 'உம்'......
கூறமுடியவில்லை!!!

<முனியாண்டி ராஜ் >

Tuesday, March 22, 2016

வனமழிப்பு

வேர்கள் விரிந்த
ஒரு வனாந்திரத்தின் வயிற்றுப்படுகையில்
எழுந்து வருகிறது
என் எச்சம் ..
பச்சையங்கள் மடிந்த இந்த
வறட்டு நிலங்களில்
கற்பழிக்கப்பட்ட என் சகமரங்கள்
விறகாகமலேயே எரிக்கப்பட்டு விட்டன..
நாளை
கட்டடமாகவோ..
நெடுஞ்சாலைகளாகவோ..
புகை க்க்கும் தொழிற்பேட்டைகளாகவோ
இந்த வனங்களை மறக்கடிக்கலாம்..
அதற்குள்
காய்ந்த எங்கள் மரணங்களில்
கொஞ்சமேனும் நம்பிக்கை தருகிறேன்...
வா .. கண்ணே!

€€ முனியாண்டி ராஜ்.€€


நீரின்றி அமையாது உலகம்


















ஒற்றைக் கொம்பில் சிறகுகள் மடிந்து 

பார்வையைக் கரைத்துக் கொண்டிருந்தது
அந்த வண்ண உயிர்..
கதிரவனின் சினம்
வனமெங்கும் விரிந்திருந்தது..
முகம் வெடித்த கால்வாய்கள்
நீரின்றி நிர்வாணம் காத்தன..
பச்சை வெளுத்த புல்வெளிகள்
ஆங்காங்கே வானம் பார்த்த படி..

பறந்து பறந்து அலைந்த
களைப்பாக இருக்கலாம்..
ஒற்றைக் கொம்பின் அசைவுகளில்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருந்தது
அது..
விழிகளின் ஓரம்
மௌனம் காத்தது மிரட்சி..
கனிம நீரின் மூடியில்
நீரூற்றிச் சற்று நகர்ந்தேன்..
இறக்கைகள் விரிய சர்ரென
இறங்கியது...

நீரின்றி அமையாது உலகம்..

#முனியாண்டி ராஜ்.#


ஒரு இரயில் பயணம்

ஒரு தொடர்ப்பயணத்தின்
இடைப்பயணியாய் நுழைந்தவள்..
இறங்கிவிட்ட உன்னை எண்ணி
இறங்க முடியாமல் தவிக்கிறது 
இதயம் ..
ஒவ்வொரு பயணங்களிலும் கடந்தோடும்
மரங்களாகட்டும்..
மௌனங்களாகட்டும்
சட்டென சறுக்கி விழுகிறது
உன் நினைவுகளோரம்!