Tuesday, February 23, 2016

இன்னும் நீ...


ஒரு போர்வீரனின் வாக்குமூலம் .. பாகம் 01



விழிகளிலிருந்து
ஒவ்வொரு மனிதராய் நழுவ...
வெளிச்சம் மெல்ல மெல்ல
இமைகளுக்கு வெளியே!
இந்த இரவு
மீள முடியாத்தாக இருக்கலாம்!
நாளைய வெளிச்சம்
எனக்கு மட்டும்
கிட்டாமல் போகலாம்!

அதோ
என் பாதங்களின்
ஒவ்வொரு சுவடுகளிலும்
வெளிச்சத்தின் எச்சங்கள்
தீக்குழந்தைகளாய்!
எனது விரல்களின் நுனிகளால்
இன்னும் இருக்கின்றன...
கவிதைகளாய்
நாளைய தேசிய கீதங்கள்!

அதிகாரங்களும் ஆயுதங்களும்
என் உடலை எரிக்கலாம்..
எரியும் தீ நாக்குகளில்
பேசப்படாத பிரகடனங்கள்
எந்தச் செவியிலும்
விழாமல் போகலாம்...
இந்தப் பிரகடனங்கள் நாளைக்கே
புதிய தேசத்தின்
திக்கெங்கும் ஒலிக்கலாம்!

பூமியில் புதைக்கப்படும்
ஒவ்வொரு கவிதையும்
பூகம்பமாய் வெளியேறும் போது
புரிய
.....வரும்.............
ஒரு
வரலாற்றின் தொடக்கம்!

--முனியாண்டி ராஜ்............

ஒரு போர்வீரனின் இறுதி வாக்குமூலம்

தலைப்பு : ஒரு போர்வீரனின் இறுதி வாக்குமூலம்
இம்மடல் உன் கை சேருமா
என அறியேன்
போர் முரசு கொட்டிக் களம் செல்ல

இது மனிதர் காலமல்ல...
இரவின் நிசப்தங்களைக் கிழித்துக் கொண்டு
ஏதாவது எறிபடைகள்
எங்கள் உடலைக் கிழித்தெறியலாம்...
அதற்குள்
உனக்கொரு மடல் வரைந்துவிட வேண்டும்

இரவின் எஞ்சிய வெளிச்சங்களிலும்
காவலுக்குக் காத்திருக்கும்
மிஞ்சிய நேரங்களிலும்
அவசர அவசரமாக எழுதும் வரிகளில்
பிழைகளைப் பார்க்காதே..
திருத்தப்படாத சில பிழைகளைத் திருத்த
இதுவே அதிகம்தான்....
விழிகளை படரவிட்டுக் கொண்டிருப்பதால்
பல வார்த்தைகள் தடம் மாறியிருக்கலாம்..
பொறுத்துக்கொள்....
கருத்து கொஞ்சமேனும் வழி மாறியிருக்காது
கூறப்படாத என் காதலின்
கடைசிப் பக்கங்களாக இவை இருக்கலாம்
என எண்ணிக்கொள்...

உன்னுடன் கழிந்த ஒவ்வொரு பொழுதும்
கண்முன் விரிந்து கொண்டே வருகிறது
கோபங்களில் நீ சுருண்ட
கணங்களாகட்டும்...
நான் கழன்ற பொழுதுகளாகட்டும்
கண்ணீர்விட நேரமில்லை..
நீயும் விடக்கூடாது என்பதற்காக..

இதோ
எங்களுக்கான கட்டளை பிறந்து விட்டது
களத்தில் நுழையும் முன்
இந்தக் கடிதம்
என் இதயத்தின் ஓரம் இருக்கும்
கிடைத்தால் படித்துப் பார்...

ஒரு புதிய சூரியனுக்கான
வேள்வி இது...
என்னையே நெய்யாக விடுவதில்
துளியும் வருந்தவில்லை..
இதோ... இதோ ...

( ஒரு போர் வீரனின் இறுதி வாக்குமூலம் )
என்ற கவிதையின் முதல் பாகம் ..

- முனியாண்டி ராஜ்

Friday, February 5, 2016

ஒரு கீறலின் வடு



வார்த்தைகளை எண்ணி எண்ணி
உதிர்த்துக் கொண்டே வருகின்றன
என் உதடுகள்…
எதற்கும் பதில் சொல்லாமல்..
சலனமுமில்லாமல்
மௌனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாய்
நீ!
இமைகளில் பாதுகாப்பில்
உன் விழிகள்….
இன்னும் பத்திரமாகவே இருக்கின்றன..
இறுக்கமாக!!
ஊமையாகவே!!!!!
-------முனியாண்டி ராஜ்.

இன்னும் களவாகாத சாரல்கள்


கொட்டிவிட்டுப் போன மேகங்களைத் தேடி
இன்னுமோர் மழை வரலாம்…
கதிரவனின் காதலில்
கடலுக்குள் நுழைந்து நீரை உறிஞ்சி
வேறொரு மேகங்களுக்குள் செலுத்தி
கருமையாக்கிக் காத்திருக்கும் நிலையில்
இன்னுமோர் மழை வரலாம்..
உதிர்ந்து திரியும் மழைத்திட்டுக்களிலோ
இன்னும்
கவரப்படாமல் இருக்கும்
ஏதாவதொரு தொட்டியிலோ
அந்த மழைகளின் எச்சம் மீந்திருக்கலாம்….
வெள்ளமாய் பாய்ந்து
ஏதோ ஒரு நதியிலோ … ஓடையிலோ
கலந்து போயிருக்கும் ஒரு சில 
துளிகளைத் தேடியும்
அந்த மழை மீண்டும் வரலாம்…
விட்டுப் போன அந்த மழையைத் 
தேடி…..
கண்ணாடிச் சாளர ஓரங்களில்
மௌனமாகவே அமர்ந்திருக்கிறேன்…
என் சாரல்கள் களவுபடாத வரை
எந்த மழையும் கறையற்றதே!
--- முனியாண்டி ராஜ்.


எந்த வட்டத்தில் வாழ்வது



எந்த வட்டத்தில் வாழ்வது

வஞ்சக வார்த்தைகளில்
வாள் வீச்சாய் உயிரைச் சரிக்கும்
கருப்பிதய வட்டத்திலா…..
நன்னெறி வரிசையின் இரவலில்
நன்றி என்ற வார்த்தைகளில்
மீண்டும் மீண்டும் ஆதாயம் தேடும்
சுயநல மனிதர்களின் நிழலிலா….

மன்னிப்பு என்ற வார்த்தைகளில்
மறைந்து கொண்டு
மனதை மிதிக்கும் மயக்க விற்பன்னர்
தோட்டத்திலா…
உதடுகளில் இனிப்பையும்
உள்ளத்தில் இறுக்கமும் பூண்டு வாழும்
இதயமில்லா மாந்தரின்
இருள் உலகத்திலா…

எந்த வட்டத்தில் வாழ்வது ?

                                   **முனியாண்டி ராஜ்**

மழை அழகே..


கண்ணாடிகளை அறைந்து
சிதைந்து விழும் மழைத்துளிகள் மேல்
கொஞ்சம் கருணை எட்டிப் பார்க்கிறது….
சாலைகளில் சறுக்கிச் செல்லும்
வாகன வட்டயங்களிலிருந்து
பூவாய் விரிந்தெதெழுகிறது
வீழ்ந்துவிட்ட ஒரு மழையின் எச்சங்கள்

தடதடவென அறையும்
மழையின் ஓசையிலிருந்து
அவ்வளவு சீக்கரம் மனதை நகர்த்த முடியவில்லை..
அழகான மழையின் வார்ப்பில்
வாகன நெரிசலும் ஓர் அழகே!

ஒரு முதியோர் இல்லத்திலிருந்து ....


தலைப்பு : ஒரு முதியோர் இல்லத்திலிருந்து …….

என் நாள்குறிப்பின்
கடைசிப் பக்கங்கள் எழுதும் சிரமம்
உனக்கு வேண்டாம்…..
அவற்றை நானே எழுதும் ஆற்றல் தீரும்போது
உன்னிலிருந்து வெகுதூரம் சென்றிருப்பேன்
இதுவரை நடந்த வந்த களைப்பில்
கால்கள் அயரும்போது..
சிறகுகள் முளைத்து
எங்கேயாவது பறந்திருப்பேன்….

உன் புறக்கணிப்புகளிலும் சுடுசொற்களிலும்
நான் வெந்து மடிவதைவிட
தனியனாய் பயணம் செய்வது ஏனோ
எனக்குப் பிடித்திருக்கிறது…
என்னை அணைத்துச் செல்ல வேண்டுமென்ற
ஒரு பொய் நாகரீகத்தில் நீயும்
சிக்கிக் கொள்ளாதே..
உனக்குப் பாதையையும் பயணத்தையும் காட்டியது
என் கடமையென நான் நினைக்கவில்லை
வாழ்வின் பூரணம் எனவே உணர்கிறேன்!
அந்த வாய்ப்பு உனக்குக் கிட்டும்போது
நீயும் அதை உணர்வாய்…

பாவங்களில் சிக்குவாய் என்றோ
பலர் வாயில் விழுவாய் என்றோ
பதைபதைத்து என்னை அழைக்க வராதே..
சொல்…அவர்களிடம் சொல்
இப்பாதை என் தேர்வென்று!
என் உரிமைகளைக் கிழித்தெறிய
எத்துணைத் துணிவு கொண்டாயோ
அத்துணிவுடனே சொல்… அஞ்சாதே..
என்னைத் தூக்கியெறிந்த அத்துணிச்சல்
உன் பலமெனக் கொள்!

என்னைப் போல் வாழ்க்கை கிழிந்தவர்
இங்கே ஏராளம்
கிழம் என ஒதுக்கப்பட்ட
எங்களுக்குள் ஒத்தடம் கொடுக்க வாய்ப்பளித்த
உனக்கு…
நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்!


-       முனியாண்டி ராஜ்.