Wednesday, September 14, 2016

எதிர்பாரா மழைகளும்..


படிப்படியாய்ச் சூழும் கருமேகங்களுக்குள்
எங்கேயோ ஒளிந்திருக்கிறது
மழை..

இன்னும் சில நேரங்களில்
இடியுடனோ மின்னலுடனோ
எச்சரிக்கை எழுப்பிவிட்டு
தன் தாபத்தை கொட்டிவிடலாம்
அது...

பக்கம் பக்கமாய்
எழுத்துகள் பூத்த
வெள்ளைத்தாள்களின் முன்
வார்த்தைகளை பூட்டிவிட்டு
மௌனமாய் அமர்ந்திருக்கிறோம்
இருவரும்...
புரிந்தோ புரியாதலோ ஒன்று
இந்தக் காகிதக் கட்டுகளிலும்
கருமேகம் குடித்த
பெருமழையாய் அமர்ந்திருக்கிறது..

வார்த்தைகளுக்குள் எழுதிமுடிக்க
மறந்த.. மறக்கப்பட்ட பேச்சுகள்
இந்தக் காகிதங்களில்
வாக்கியங்களாக பேசுகிறது...
நிமிடங்களைத் தின்று கொண்டே
மணிகள் வேகமாக கடக்கும்
நேரங்களில்...

மழை ..
கூறிவிட்டு வருவதில்லை
எதிர்பார்த்த தருணங்களில்!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment