Wednesday, September 14, 2016

எவன் கதையாவது ....

எனக்கொரு கதை வேண்டும்
எவன் கதையாக
இருந்தால் என்ன ..

அடுத்தவன் வீட்டில்
விறகெரிந்ததோ வயிறெரிந்ததோ
கதையாகக் கூறி விடுங்கள்
என் நேரம் சொரிவதற்கும்
மனம் ஒளிந்து களிப்பதற்கும்..
யார் கதையாக இருந்தால் என்ன

மரணத்துடன் அவன்
போராடிக் கொண்டாவது..
மௌனத்துடன் அவன்
மன்றாடிக் கொண்டாவது..
குடும்பச் சுமைகளில்
விழிபிதுங்கிக் கொண்டாவது
பணியிட இறுக்கத்தின்
பாவங்களைச் சுமந்தாவது
துரோகக் குறுவாள்களில்
குற்றுயிர் கேட்டாவது
சகோதரச் சிக்கல்களில்
சரிந்து விழுந்தாவது....
இன்னும் .. இன்னும் ..
ஏதாவது கதை வேண்டும்
எனக்கு

செவியினிக்க கேட்டு
'உச்'களில் இரக்கம் கழித்து
தனிமை விட்டுச் செல்லுமிடங்களில்
எனக்கு நானே சிரித்து...
ம்ம் ... கதை வேண்டும்
எனக்கு ..எவன் கதையாவது
என் வீட்டுக் கதைகள்
படிகள் தாண்டாவரை!


#முனியாண்டி_ராஜ்

No comments:

Post a Comment