Wednesday, April 26, 2017

நிறங்கள் மங்கிய ஓவியங்களில்..



வருடங்கள் மறந்த
ஒரு பேருந்து பயணத்தில்
சில கவிதைகளுடன் நீ
அருகருகே இருக்கைகளில் ஏதோ ஒன்றை
முணுமுணுத்தபடி நெஞ்சில் சாய்ந்து
அண்ணாந்து பார்க்கிறாய்
கண்களுக்குள் நுழைந்து
இதயம் விதானங்களில்
ஓவியங்கள் வரைந்தவாறே...
என்னைக் கடந்து ஓடும் இருள்கவிழ்ந்த மரங்களிலும் செடிகளிலும்
முடிவு பெறாத தேடல்களில்
மனம் மௌனித்துப் பயணிக்கிறது
இருள்கவிழ்ந்து கிடக்கிறது
உள்ளும் புறமும்!

குளிரை ஆவேசமாய்த் துப்பும்
பேருந்தின் சீற்றத்தில்
பக்கத்திருக்கை அரமற்று கிடக்கிறது
சில வார்த்தைகளை உதிர்க்க முயன்று
உதடுகளுக்குள் ஒளித்துக் கிடக்கிறேன்
நீ முணுமுணுத்த வார்த்தைகளைப்
இருக்கைகள் எங்கும் தேடுகிறேன்
இன்றும் கடந்தோடுகின்றன
இரவுகள் அணிந்த மலைகளும் மரங்களும்
என் பார்வைகள் பொருட்டன்றி!

நிறம் மங்கினும்
நீ வரைந்த ஓவியங்கள் மட்டும்
இதய விதானங்களில்..
எதையோ கூற முயன்று!

Monday, April 17, 2017

புத்தாண்டு பலன்

குரு மூன்றாம் வீடும்
சனி ஏழாம் வீடும்
கேது எட்டாம் வீடும்
மாறியதில்
திருமணம் தள்ளிப்போனது இவ்வாண்டும்!
அதற்கென்ன
வருடத்தில் நான்குமுறை வரும்
புத்தாண்டுகளில்....
போனவர்கள்
திரும்பி வராமலா போவார்கள்!

சூரியன் மேயும் சமவெளிகள்

சூரியன் மேயும் சமவெளிகள்
===•••===•••===•••===
சூரியன் மேயும்
இந்தச் சமவெளிகளுள்
எதிர்காலங்களைக் கேள்விக்குறியாக்கவே
வந்து ஜனித்தாயோ மகளே
என் இறந்த காலங்களை
வருடங்கள் மீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகளில்
நீ எப்படி விழுந்தாய்..
என் வழிகள் யாவும் அடைக்கப்பட்ட பின்னும்
எவ்வழியில் உன்னை நான்
கரையேற்றுவது..

எனது பாவங்களின் சாபமா
அல்ல
உன் சாபங்களின் கண்ணீரா இது..
எதுவெனத் தெரியாமலேயே
இருள் அடர்ந்த ஒரு வெளியில்
புதைந்து கொண்டே வருகிறேன்
உன்னையும் சுமந்து கொண்டே..
எந்த இறைவனும் கண்ணுக்குத் தெரியா
மனிதம் அற்ற முகங்களில்
உனக்காவது ஒருவனைத் தேடுகிறேன்..
என் சுமையல்ல கண்ணே நீ
உன் சுமையாகவே நான் !!!!

என்னைக் கிழித்தெறிந்த பாதைகளில்
உன்னை எப்படி நடக்க விடுவது
மடி கனத்தும் மனம் மறுதலிக்கிறது..
உன்னை இறக்க..
நானும் இறக்க!
சூரியன் சுட்டு கருத்ததல்ல
நம் தேகம்...
வறுமையின் இன்னொரு பக்கம் இது!
உன் பாதம் பட்டு
பூமியாவது எரியாமலிருக்கட்டும்...

பசி போக்க வெள்ளை மனதுகள்
வரும் வரை ...
கன்னம் கிழிக்கும்
என் கண்ணீரைப் பருகிக் கொள்..
இதையன்றி வேறெதுவுமில்லை
என்னிடம்

அது குருதியாகவே இருந்தாலும்!

#முனியாண்டி_ராஜ்.

Wednesday, April 5, 2017

வீ


கைப்பேசியின் நினைவகங்களை 
நிறைத்திருக்கும்
காலை மாலை வணக்கங்கள் போல்
உன் நினவுகளால் 
நிறைத்திருக்கிறாய் என்னை!


மௌன விடுதலைகளில்...


அவன் பேசிய கடைசி வார்த்தை
அவனுக்கு மறந்து போயிருக்கும்
இந்நேரம்!
அவன் நினைவுக் கதவுகள்
தட்டியோ
ஞாபகச் சன்னல்களில் ஒட்டி உரசியோ
உங்கள் முயற்சிகளில்
சறுக்கிக் கொண்டே வருகிறீர்கள்

அவன் தொண்டைக்குழியின்
கடைசிச் சொற்களும்
உதடுகளோரம் ஒட்டியிருந்த
இறுதி எழுத்தும்
இழுத்து வீசப்பட்ட பிறகு
அவன் மௌனியாகி விட்டான்
அவன் தெருக்களில் நகரும்
வாக்கியங்கள்கூட
முக்காடிட்டுப் போவதாகவே
பேசிக் கொள்கிறார்கள்

ஏதோ ஒரு நிறத்திற்குள்
அவன் குரல்வளை நெறிக்கப்பட்டதாக
உடனிருந்தவர்கள் கூறுகிறார்கள்
ஊடகப் பந்தயங்களில்
அவன் குரல்கள் மேய்க்கப்படுகின்றன
வாசல்முன் குவிந்தொழுகும்
ஒலிகளும் ஒளிகளும்
அவன் தனிமையைச் சிதைப்பதாகவே
அவன் கருதுகிறான்

கறுப்புக் கொடிகளிலும்
சிவப்புக் கொடிகளிலும்
வார்த்தை வெடிகள் வீசியவன்
வெள்ளைக் கொடிகளில் மருண்டதெப்படியென
வாக்கு வாதம் நடத்துகின்றன
கொடியற்ற கம்பங்கள்

புரட்சிகள் புதைக்கப்பட்ட
வரலாறு அறிந்தவர் மட்டும்
மௌனியாகிக் கொண்டே வருகிறார்கள்

அவனைப் போலவே!

Sunday, April 2, 2017




மௌன அடவிகளில் மனம்

மௌன அடவிகளில் மனம்
===••===••===••===••===
உனக்கான கணங்கள்
உயிர்ப்புடன் இன்னும் இருக்கின்றன
மௌனம் தரித்த வனங்களின் ஊடே 
எதையோ தேடி விரைகிறது
சத்தமற்ற ஒரு பொழுது

இரைச்சல் நிறைந்த சாலைகளூடே
கவனம் பதிந்தே இருக்கிறது
அடிக்கடி பக்கத்து இருக்கைகளில்
விழிகள் விழுந்தெழுந்து
மீண்டும் ஓர் ஏக்கப் பெருமூச்சில்
சாலைகளில் போய் விழுகின்றன

அடவிகளின் ஆர்ப்பரிப்பற்ற மடிகளில்
மனம் அமர்ந்து தியானிக்கும் பொழுது
திடீர் உறக்கம் கலைப்பவன்போல்
சடாரென நினைவுகளால்
அறைந்து போகிறாய்
எங்கிருந்தோ பாறை மோதிவிழும்
அருவிகளின் ஓசைகளில்
என்னைச் சேர விடாமலேயே விரட்டுகிறாய்

செவியறையும் வாகன ஒலியெழுப்புகளில்
அடிக்கடி நிஜத்திற்கு வருகிறேன்
திடீரென ஏதும் வாகனம் நிற்கலாம்
தடுப்பம் மீறி சிறு விபத்தும் வரலாம்
எச்சரிக்கைகளில் மனம் விழிக்கிறது
வளசைகளில் இறுகிய கரங்கள்
வரவை மெய்ப்பித்தே நகர்கின்றன

ஒரு வாகன நெரிசலை
மனம் வேண்டிக் கொண்டே வரைகிறது
அடர்ந்த அந்தக் காடுகள் நோக்கி
அது விரைய!

#முனியாண்டி_ராஜ்.


துளிப்பா 006

அனைவரும் விலகியே செல்ல
இன்னும் கேட்பாரற்றே கிடக்கிறது
தெருவில் கல்
*********************************
உணவுகளைத் தருவித்து விட்டு
மேஜைக்குள் காலியாகியிருந்தது உறவு
கைப்பேசிகளில் மனம்

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்
===•••===•••===•••===•••===••
கவிதை ஒன்று ஆரவாரமேதுமின்றி
காரின் கண்ணாடி வழியே
மெல்லமாய் இறங்கிக் கொண்டிருந்தது
சிவப்பு ஒளிகளைப் பாய்ச்சிக் கொண்டே
வரிசைப் பிடித்திருந்த வாகனங்களின் பின்
நானும்..
இன்றேனோ இந்த நெரிசல்
மிகவும் பிடித்திருந்தது
முன் கண்ணாடி வழி இறங்கிய
கவிதை வரிகளையோ
பக்கவாட்டுகளில் துளித்துளியாய்
உதிர்ந்த சொற்களையோ
விழிகள் விலக மறுத்து அமர்ந்திருந்தன

தரை விழும் துளிகள் மண்கலந்து
நிறம் மாறி நழுவி போயிருக்கலாம்
வழியில் எங்கேனும் விழுந்து
முடமாயிருக்கலாம்
விதைகள் ஏதேகிலும் பாய்ந்து
விருட்சங்களுக்குள் பதுங்கியிருக்கலாம்
அங்கீகரிக்கப்படாத கவிதைகள் போல்
காலம் அவற்றின் சாரை உறிஞ்சி
வீசியும் போட்டிருக்கலாம்

எப்படியோ..

இக்கணம் வழியும் துளிகளை மட்டும்
படித்துக் கொண்டே வருகிறேன்

#முனியாண்டி_ராஜ்.

துளி

ஒரு மழைக்குளிரின்
சில்லென்ற இரவுப் பயணத்தில்
சட்டென அறுந்து விழுகின்றன
கண்களின் எச்சத் துளிகள்
கரும் உருவங்களாய்
சீறி மறையும் மரங்களிலும் பாறைகளிலும்
கவனம் அவ்வப்போது பாயும்போதும்
முகங்களில் அறையும் எதிர்வரிசைகளில்..
உன் எச்சரிக்கைகளின் எதிரொலிகளில்
விழிகள் விரிந்து கொண்டே
தூக்கத்தைக் கடக்கும் இரவுகள்

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ004

மழை விட்டும்
தூவானம் மட்டும் தூறியபடியே
சன்னல் சாளரத்தில்
-—-----------------------------------
இரவுக்குள் நுழைந்தும்
நிலா மட்டும் ஒளிந்திருக்கிறது
மேகத்திற்குள்
---------------------------------------
கரையைத் தழுவிய அலைகளில்
கரையாமலேயே இருந்தது
காலடிச் சுவடு
-----------------------------------------
புத்தகப் பையைச் சுமந்தபடியே
மாணவன் கேட்கிறான்
கல்வி அவ்வளவு பாரமா
-----------------------------------------

காலம் தோற்ற நுட்பம்

காலம் தோற்ற நுட்பம்
===••===•••===••=
நான் கூற மறந்தவற்றையும்
எழுதும் போது
வார்த்தை நழுவியவைகளையும்தான்
அவள் எதிரொலியாய் அறைந்து போனாள்
அவசரங்களில் இடைமறித்த
அவள் கனவுகளின் வரிசைகளில்
நான் நிதானமிழந்தவற்றைக் கோடிட்டும்
தவறிப் போன நினைவுத் திகதிகளில்
என்னைத் தாழிட்டும்
சிரிக்க மறந்த துணுக்குகளில் சிறையிட்டும்
என்னைச் சிக்க வைத்த வெற்றியில்
சிறையிட்டும் போனாள்
அமைதியில் ஆழ்ந்திருந்த கைப்பேசிகளில்
அவள் அழைப்புகள் உறங்கிப் போனதில்
அப்படியொரு கோபம் அவளுக்கு..
தவறிய அழைப்புகளில்
வருந்திய பொழுதுகளைப் படிக்கவும்
அவள் தயாரில்லை
சுருங்கிய மொழிகளில் சுணங்கிய என்னையும்
அவள் சுருக்கி விட்டாள்

கைப்பேசிகளும்
காலம் தோற்ற நுட்பங்களும் கடந்து
களம் புகுந்தால்
நிலைக்கும் ஓர் உறவில்
நானும் நீடித்திருக்கலாம்..

#முனியாண்டி_ராஜ்.


ஓர் அழிவின் முடிவு

உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும்
ஓர் எரிமலை
அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
மௌனங்களுக்குள் நான் சிறைபட்டிருப்பதாய்
பேசிக் கொண்டார்கள்
எனது ஒவ்வொரு பின்வாங்கலுக்கும்
கோழையெனச் சிட்டை ஒட்டித்
தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்
அவர்களின் அகராதியில்
நீரற்றத் தாவரமாகவே
என்னைப் புரட்டிப் புரட்டிப் படித்தார்கள்
ஈரமான விறகு எப்படி எரியுமென
எகத்தாளமாய் சிரித்தார்கள்
வாளற்ற வீரனை ஈட்டியால் செருகியே
வீரத்தை வார்த்தைகளால் பொறித்தார்கள்
ஆழிப் பேரலைகள் அடங்கியிருப்பது
ஓர் ஆழிக்குள்தான் எனத் தெரியும்போது
அவர்களுக்கான பயணம்
தூரங்கள் பல கடந்திருக்கலாம்

படைப்பு


விரல்களிலிருந்து விரிந்து பறக்கும்
அந்தப் பட்டாம் பூச்சிகளைத்தான்
அவள் கவிதைகளென்கிறாள்
அந்த இளம் சிறகுகளின் படபடப்பில்
அத்துணை ஆர்வம் அவளுக்கு
அவள் இமைகளின் நகல்கள்
அவை என அறியாமல்
விழிகளை நகர்த்தவே மறந்திருப்பாள்
அதெப்படி
உங்கள் விரல்களிலிருந்து மட்டும்
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன என
வியப்போடு கேட்கிறாள்

போடி பைத்தியக்காரி..
உன் கண்களைக் கண்ணாடியில்
பார்த்ததே இல்லையா என
எப்படிக் கேட்பேன்

#முனியாண்டி_ராஜ்.

இசையற்ற வரிகளாய்...

இசையற்ற வரிகளாய்...
===•••===•••===•••===
ஒரு செந்தூராவின் துணையுடன்
தனியனாய் ஒரு
இரவு நேர தூரப் பயணத்தில்
நாழிகை கடக்கும் பயணங்களில்
திடீரென அலை மாறிய செந்தூரன்

ஜன்னல் விலகிய திரைச்சீலைகளின்
கொடையில்
தூரத்து வெளிச்சத்தின் நிழலில்
மௌனங்கள் கடந்து செல்கிறாய்
கனங்களை என்னுள் இறக்கிவிட்டு

எஞ்சிய காப்பியின் காய்ந்த சாயல்களில்
எதையோ வரைந்து வைத்தது போல்
ஒழுகலும் ஓவியமாய் தெரிய..
நீ
வரைந்திருக்க நியாயமில்லை என
உள்மனதோரம் முனகும் குரல்

ஒவ்வொரு அலையாய் தாவியும்
எதிலும் இருப்புக் கொள்ளாமல்
தூரங்களில் வீசியெறியப்படும் தொலையியக்கியாய்
வண்ணம் தொலைத்த ஓவியம் போல்தான்
மனமும்

கனவை விலக்கி வைத்து விட்டு
கதவைத் திறக்கையில்
விரிந்து கிடக்கும் செவ்வானத்தில்
செந்தூரா மீண்டும் மிதந்து வருகிறது
இசையாய்!

#முனியாண்டி_ராஜ்.

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது
===•••===•••===•••===•••===•••===
கொஞ்சம் வானமும்
மீதமிருந்த உடைந்த நிலாவின்
ஒரு பாகமும் மீதமிருந்ததாய்
சொன்னார்கள்

நிலங்களெல்லாம் கூறுபோட்டு
விற்றுத் தீர்த்த பின்னும்
ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும்
முள்வேலிகள் அமைத்த பின்னும்
மலைகளுக்கும் மடுக்களுக்கும்
உரிமை மாற்றிய பின்னும்
கடலின் சில பாகங்கள் மட்டும்
விலைக்கு இருப்பதாக
அவர்கள்தான் சொன்னார்கள்

பாதைகளில் வரிகள் கட்டிவிட்டு
கடலுக்குள் இறங்க நினைத்தவர்களுக்கு
அலைகளின் விலைகள்கூட
கொஞ்சம் அநியாயமாய்தான் பட்டது
கரையில் கால்வைத்து
கட்டணம் மறந்தவர்கள் கழுத்துக்கும்
கயிறு தயாராகவே இருந்தது

நசுங்கிக் கடந்த பொதுவுடமையின்
முதுகில்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது
முதலாளித்துவம்....
கண்கள் மறைக்கப்பட்ட மனிதம்
மட்டும்...
தடுமாறி... தடுமாறி...

சே..
எச்சரிக்கைப் பலகையைப்
பார்த்து விட்டாவது உள்நுழைந்திருக்கலாம்!

#முனியாண்டி_ராஜ்.

உடையும்_நிஜங்கள்

===•••===•••===••
யார் யாரோ கைகுலுக்கிக் செல்வதுபோல்
இருக்கிறது
ஓர் இளைத்த பார்வையில்
தோளில் தட்டியும் செல்கின்றனர் பலர்
இதயம் தொடா முறுவல்களில்
முகம் காட்டி மறைகின்றனர்
இடைவெளியற்ற தூரம் நின்று
துக்கங்களைக் காற்றில் அனுப்புகிறார்கள்
கட்டியணைத்து ஆறுதல் வீசிவிட்டு
கூட்டங்களில் கலந்து
கதைகளில் கரைந்து போகும் நபர்களில்
எதையோ தேடி ஓடுகிறது நிஜம்

ஒரு மரணத்தின் விசாரணையில்
மனிதர்கள் பல வேறான கூண்டுகளில்
தங்கள் உணர்ச்சிகளில்
நின்றுகொண்டே மௌனியாகிறார்கள்
காற்றில் கலக்கா உயிரொன்று
இன்னும் ஒவ்வோர் இடைவெளிக்குள்ளும்
நுழைந்து
மனிதர்களை எடை போட்டுக் கொண்டே
நகர்ந்து செல்கிறது
கடைசித்துளி ... கண்ணீரோடு!

#முனியாண்டி_ராஜ்.


நீரின்றி அமையாது உலகம்..

#இரக்கம்
==••==••
ஒற்றைக் கொம்பில் சிறகுகள் மடிந்து 
பார்வையைக் கரைத்துக் கொண்டிருந்தது
அந்த வண்ண உயிர்..
கதிரவனின் சினம்
வனமெங்கும் விரிந்திருந்தது..
முகம் வெடித்த கால்வாய்கள்
நீரின்றி நிர்வாணம் காத்தன..
பச்சை வெளுத்த புல்வெளிகள்
ஆங்காங்கே வானம் பார்த்தபடி..

பறந்து பறந்து அலைந்த
களைப்பாக இருக்கலாம்..
ஒற்றைக் கொம்பின் அசைவுகளில்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருந்தது
அது..
விழிகளின் ஓரம்
மௌனம் காத்தது மிரட்சி..
கனிம நீரின் மூடியில்
நீரூற்றிச் சற்று நகர்ந்தேன்..
இறக்கைகள் விரிய சர்ரென
இறங்கியது...

நீரின்றி அமையாது உலகம்..

#முனியாண்டி_ராஜ்.#

#இருக்கைகள்_அற்ற_கணங்கள்

#இருக்கைகள்_அற்ற_கணங்கள்
===•••===•••===•••===•••
எனக்குப் போதுமான உணவு கிடைக்கிறது
என் தட்டில் உணவு பத்திரமாக இருக்கிறது
அவ்வப்போது எனக்கு
இறைச்சித் துண்டுகள் வீசப்படுகின்றன
என் தட்டில் வீழும் மீன்கள்
புதியதாக இருக்கின்றன

மற்றவர் சுவைகளுக்காக
என் நா மரிக்க வேண்டியதில்லை
மற்றவரின் பழைய சாதங்களுக்காக
என் அரிசிகள் உதிரத்
தேவையில்லை
அவர்களின் தாகங்களுக்கு
என் கனிம நீர் புட்டிகள்
ஆடை களையத் தேவையில்லை
ஆற்றுநீரும் குளத்து நீரும்
போதும் அவர்களுக்கு

மற்றவர் உலைகளில் கொதிக்கும்
குழும்புகளில்
என் மனம் திரும்புவதில்லை
தற்சமயம்
என் நாற்காலியின் நான்கு கால்களும்
பெயரின் ஒவ்வொரு எழுத்துகளும்
உறுதியாகவே இருக்கின்றன
ஆட்டம் காணும் நிலைகளில்
அவைகளை வைத்திருக்கப் போவதில்லை
அவசியங்களற்ற பொழுதுகளில்
ஆடைகள் களையப் போவதுமில்லை
அதற்கு நீங்களாகவே
எனக்கொரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள்

அரசியலற்ற ஒரு விடியலில்
நானும்
உங்கள் வாசல் வரலாம்

#முனியாண்டி_ராஜ்.

துரோகம்


சட்டென முகம் இழுத்து
முதலையின் வாயிலிருந்து விடுபட்டேன்
காட்டு விலங்குகள் கொடூரமாய் பாய
ஆபத்தின் சிக்கல்களை அறிவு
மீட்டெடுத்தது.....
குழிக்குள் விழப்போன காலை
விழிகள் அன்பாய் காப்பாற்றின....
வாழ்த்து சொன்ன நண்பன்
தோளில் கை போட்டான்...
மெல்ல மெல்ல கழுத்து இறுக்கப்பட்டும்
மனம் மட்டும் ஏனோ...
உயிர் போகும் தருணம் எச்சரித்தது
காலம் கடந்து!!!

**முனியாண்டி ராஜ்.**

உன் இதயத்தில்


பைய பைய மடியும்
ஓர் இதயத்தின் கண்ணீர் என
எண்ணாதே....
உனக்காக சேர்த்த கனவுகளின் 
இறுதி யாத்திரையாகவும் இது இருக்கலாம்..
எனக்காக நீ எழுப்பிய
சொற்மாடங்களின் சிதைவுகளாகவும்
அமையலாம் ...
நீயே ...
வழக்கம் போலவே தெரிவு
உன் வசமே இருப்பதால் !!!

இரக்கம்


ஒடுங்கிய வயிறும் ஒடிந்த உருவமுமாய்
வீதியோரம் வீற்றிருந்தது அந்த உருவம் 
கிழிசல் ஆடைகளும்
முகம் கிழித்த மயிர்களும்
வறுமைக்கு விலாசம் கொடுத்தன..
காலொன்று இல்லாமையைத்
தாங்குக் கட்டையும்
கையொன்று கழன்றதைத்
தொங்கிய சட்டையும் !

ஐயா........
உதடுகள் காய்ந்த குரலில்
யாசகம் கெஞ்சலாய் வழிந்தது..
தகரக்குவளையின் சிணுங்கிய சத்தங்கள்
சில்லறைகள் ஓரிரண்டைக் கூறின..
அலட்சியப் பார்வையில் அவனை வெறித்து
சாலையைக் கடந்தேன்..

குளுகுளு காரில் வெயில் மறந்து
வீடு அடைந்தும்...
காதோரம் கேட்டுக் கொண்டே வந்தது
அந்தச்
சில்லறைச் சத்தங்கள் !!!

**முனியாண்டி ராஜ்.**

என் முடிவல்ல நீ


என் முடிவல்ல நீ ...
===•••===•••===••
என் இறுதிக் கோரிக்கையை
உன்முன் வைக்கும்வரை
நேரங்களைச் சிதைத்துச் சிந்தித்தேன்
உயில் எழுத
உயிரைத் தவிர வேறெதுவுமில்லை ..
எழுத முயன்று
கசங்கி எறிந்த காகிதங்களும்
முனை உடைந்து அழுத
பென்சில்களும்
தொட முடியாத ஒரு துவக்கத்தின்
சிதறல்களே..

வயதினை அணுஅணுவாக உறிஞ்சிய
வருடங்களில்
நீ வளர்ந்து விட்டாய்..
நான் முடங்கி விட்டேன்..
அகவையை ஆண்ட காலம் போய்
அகவைகள் என்னை ஆளும் நேரம்
நான் வறண்டிருப்பேன்..
ஒடுங்கிப் போன நோவுகள்
ஓடிவந்து ஒட்டலாம் ..
ஒட்டிய உறவுகள்
சற்று ஒதுங்கி நடக்கலாம்..

என் முடிவல்ல நீ
ஒரு தொடக்கத்தின் சுணக்கமே
எனக்கான பாதைகளை வரைய முடியா
வயதென்று புறந்தள்ள முயல்கையில்
விரல்களால் நடை பழகும் நேரம்
விழிகளில் விழும் பள்ளங்களில்
மீந்தே இருக்கின்றன
நான் சேகரித்த புன்னகைகளும்
கொஞ்சம் நட்புகளும்

பிரித்தெடுக்க முடியா ஒரு
வலையினில்
இன்னும் சிக்கியிருப்பதை உணர்கிறேன்
உதறிச் செல்ல உயிரன்று
அது உறவு ...
ஏக்கங்களில் கொஞ்சமாய் ஒட்டியிருக்கின்றது
உன் பிறவி அழுகை
என் அழுகையின் தொடக்கத்திற்கு

சரி..
வயோதிக காரணத்தில்
என் வழிகளை இழுத்து மூடி விடாதே..
தனித்து நிற்க தென்னையாய் அல்ல..
நாராய் நலிவுற்றிருப்பேன்
கொடியாய் துவண்டிருப்பேன்..
படர்வதற்கு ஒரு கொம்பாவது..
கொடுத்து விடு..
அது
எதுவாக இருப்பினும் !!!

#முனியாண்டி_ராஜ்.

ஒரு கவிதையின் தொடக்கம்


ஒரு கவிதை வார்த்தைகளைத் தேடி 
அங்கும் இங்கும் அலைந்தவாறே..
சொல் என்கிறாய்
இருளுக்குள் ஒளிந்த வெளிச்சம்போல்
வார்த்தைகளை விழிகளுக்குள் ஒளித்துக் கொண்டு!

நீயென்றேன்..
புருவங்களில் ஒளிந்திருந்த
ஒரு வரி ...
சிலிர்த்த ஒரு முறுவலுடன்
அப்படியே இறங்கி நடக்கத் தொடங்கியது
என்னைக் கடந்து !!

#முனியாண்டி_ராஜ்.

இரவின் கவிதை ஒன்று


திடீரென தூக்கத்தை உலுப்பி எடுத்து
எழுப்பியிருந்தது அந்த நிலா..
விலகிய ஜன்னல் சீலைகளில்
மழை நின்று மேகங்கள் விலகியிருப்பது தெரிந்தது
கொஞ்சமாய் எட்டிப் பார்த்த
என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது
களவு போன உறக்கங்களைத் தேடி
மீண்டும் உறங்க முயன்றும்
வைத்த கண் வாங்காமல்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த
மழையில் நனைந்த நிலா….
துவட்டிவிட கைகள் இருந்தும்
மனம் மறந்த இடங்களைத் தேடி
போர்வைக்குள் ஒளிந்து
தூக்கங்களை ஏமாற்றிக் கொண்டே ….

இரவும் அப்படியே கழிந்தது
இருண்ட அந்த நிலவுக்காக!!!


**முனியாண்டி ராஜ்.**