Wednesday, September 14, 2016

தன்னலக் கூக்குரல்களும் தகிப்புகளும்



என்னோடுதான்
அவர்களும் வந்திருந்தார்கள்
குரல்களில் வழிந்த இரசாயனங்களில்

என் உதிரத்தையும்
நிரப்பி வெப்பமாக்கியிருந்தார்கள்..
முன்னிலைப்படுத்தி தலைவனென்றார்கள்
கூக்குரல்களிலும் ஆவேசங்களிலும்
என் குரலை உயர்த்தியிருந்தார்கள்..
மங்கலான உரிமை வேண்டல்களில்
மனம் மட்டும் சாய்க்கப்பட்டிருந்தது..
தலைவனென்ற பூச்சுகளில்
வன்மை கைகோர்த்துக் கொண்டது..
கூட்ட சுகத்தின் தள்ளல்களில்
குரலோடு உயர்ந்தன கைகளும்
கண்களின் மேய்ச்சலில்
பதாகைகளின் ஊர்வலத்தில்
துணிச்சல் முகமெங்கும் முகாமிட்டிருந்தது
பொறுமையின் பூட்டுகள்
ஒவ்வொன்றாய் சிதற
முதலாளித்துவத்தை முழுவதுமாக மோத

பரப்பப்பட்ட ஒப்பந்தங்களில்
கண்கள் உலர்ந்து திரும்புகையில்
தரையெங்கும் சிதறிக்கிடந்தன
பதாகைகளும்
உடைந்துபோன குரல்களும்
தனிமையின் உறுத்தல்களில்
துணிச்சல் பம்ம இடமின்றி
கண்களோரம் அமர்ந்தது
கூனிக்குறுகி!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment