Monday, November 14, 2016

தமிழன்பன் விருது


ஈரோடு தமிழன்பன் விருதுக்கு என்னை தேர்வு செய்த அமிர்த கணேசன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

இது_மரணமல்ல ...


#இது_மரணமல்ல ...
===•••===•••===•••
நம்பிக்கையின் கடைசித்துளியாய்
ஒட்டியிருக்கிறது
இன்னும் கொஞ்சம் உயிர்
ஓர் அடர்ந்த மழையின் எச்சங்களென
அவ்வளவு எளிதில்
நீங்கள் தூக்கி வீசவும் முடியாது
கதிரவனின் வன்கதிர்கள் தின்ற
மீதமெனவும்
நீங்கள் நிராகரிக்க முடியாது
ஒவ்வொரு மழைக்கும் பின்னும்
ஒவ்வொரு அதிகாலைக்குப் பின்னும்
இந்தக் கடைசித் துளிகள்
ஒரு மெல்லிய துணிச்சலை
எரிய விட்டுக் கொண்டே வருகிறது
எங்கள் உதிரங்களில்..
உதிர்ந்த விழுந்த துளிகள்
சிற்றிலைகள் தாங்கும் விருட்சங்களுக்கு
உரமாகவேதான் விழுகின்றன...
உயிரின் கடைசிப் பயணமல்ல
இந்தத் துளி!

#முனியாண்டி_ராஜ்.

நீ

எல்லோரும் என் கவிதைகளைக்
கடந்தே போகிறார்கள்
நீ மட்டும்தான்
அதில் நடந்து போகிறாய்..

#முனியாண்டி_ராஜ்.

Thursday, November 10, 2016

வருகை


அவள் எப்போதாவதுதான் வருவாள்
அதன் நேரமோ பொழுதோ
உறுதியற்ற நிலையிலேயே இருக்கும்
பெரும்பாலும்
ஏதோ ஒரு இறுக்கத்திலும் கனத்தலிலும்
மனம் எங்கேயாவது மௌனித்திருக்கும்..
அவசரகதிகளில் 
உடலின் அத்துணை அணுக்களிலிலும்
வன்மம் ஏதேனும் துளிர்க்கும் பொழுதுகளில்
வருடியாய் இருப்பதேயில்லை அவள்
அசதிகளில் சட்டெனச் சாய்ந்து
உறங்கங்களில் கரைந்துவிடும் நேரங்களிலும் 
சரி ...
நேரம் துரத்திய விடியலில் விழிக்கும்போதும் சரி .....
அவள் வருவதேயில்லை..
கட்டங்கட்டமாக மனிதரோடு மனிதராய்
தொலையும் தருணங்களில்
எங்கோ ஒரு பாறையின் உச்சியில்
இருப்பதுபோல்...
பார்வைகளைப் பதித்துவிட்டு
உதடறியா ஒரு சிறுபுன்னகையுடன்
மறைந்தே போகிறாள்!



உயிர்பெறும் வடுக்கள் ...


உயிர்பெறும் வடுக்கள் ...
===•••===•••===•••==
வழக்கம் போலவே
மண்டையில் கொட்டிவிட்டுச் செல்கிறது
இந்த ஐப்பசியின் ஒருநாள்
விசையுந்திலிருந்து
உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு
தள்ளிப்போய் நின்றது அந்தக் கனவுந்து
இரத்த வெள்ளத்தில் நீயும்
கண்ணீர் வெள்ளத்தில் நானும்!
திடீரென வறண்டுபோனது
தொண்டை மட்டுமல்ல..!!!
சிலைபோல் நின்றவனை
யாராவது உசுப்பி விட்டிருக்க வேண்டும்
சுற்றியிருந்த கூட்டத்தில்
வேற்றுக்கிரகவாசியாய் வேறான பிறகு
என்ன செய்ய..!!
சுற்றியிருந்த நாளிதழ்களால்
உன் முகத்தை மூடிவிட்டு
நீ
இறந்து விட்டதாய் உறுதி செய்திருந்தார்கள்
யாரோ.......
கவான்?* ... என்ற வார்த்தைகள்
உடலை மட்டுமல்ல
உயிரையும் உலுக்கிச் சென்றன...
அவசர ஊர்தியில்
நீ கொண்டு செல்லப்படும்போது
நான் மட்டும் அப்படியே..!
கூட்டம் கலைந்த பின்னும்
தனித்த ஒருவனாய்
அந்தப் பகலும்
இரவில் கரைந்து போகும்வரை......!!!

வழக்கம்போலவே
தலையில் கொட்டிவிட்டுப் போகிறது
இந்த ஐப்பசிகளில் ஒருநாள்
கையாலாகாதவனுக்காக....!!

(*கவான் - நண்பன்)

#முனியாண்டி_ராஜ்.

விருது


தூண்டில்

ஒவ்வொரு தூண்டிலிலும்
புழுவாய் நெளிந்து கொண்டிருந்தன அவை..
ஆசையில் பட்டெனக் கௌவும் மீனாய்
அவர்கள்தாம் வரித்து வைத்திருந்தார்கள்
என்னை ..
விற்பனை முகவர்களின் புழுக்களில்
நீந்திநழுவிச் செல்லும் போதும்
கைப்பேசிகளில் கழுத்தறுபட்டு
அழுகின்றன அழைப்புகள்..
நிராகரிக்கத் திணறும் தருணங்களில்
மூளையும் சலவை செய்யப்படும்
மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிவுடன் மன்னிக்கவும் என்று!

#முனியாண்டி_ராஜ்.

இருப்பில் இன்னும் கொஞ்சம்


இருப்பில் இன்னும் கொஞ்சம்
===•••===•••===•••===•••
என் தோட்டம் நோக்கி
மீண்டும் நடக்கிறேன்
செம்மண் மரித்து தாரணிந்த சாலைகள்
ஓர் அன்னியனாய் ....
துண்டாக்கப்பட்ட பிறகு
தோட்டப்புறம் நோக்கிச் செல்லும்
பாதை ஒவ்வொன்றும்
என் பாதைகளை
ஏற்க மறுத்தே செல்கின்றன..
கொச்சை வார்த்தைகளாயினும்
தமிழ் செழித்த லயங்கள்
வங்காளதேசிகளும் நேப்பாளிகளும்
இந்தோனேசியர்களுமாய்...
அனைத்துலக மொழியில் பேசுகின்றன
ஒரு தீபத்திற்காக
கோவில்கள் தவம் கிடக்கின்றன
கால் நீவும் காளிமுத்துத் தாத்தாவாவும்
மூலிகை சொல்லும் முனியம்மா பாட்டியும்
ஏதோ ஒரு மரத்தின்கீழ்
அமர்ந்திருப்பதாகவே உணர்கிறேன்..
பேயென்று பயமுறுத்திய ஆலமரமும்
பேடியென ஒண்டிப் போய் நிற்கிறது
திருவிழாக்களை எதிர்பார்த்து
என்னைப் போலவே
ஏங்கி நிற்கின்றன ஒவ்வொரு
விளக்குத் தூண்களும்..
சில்லாய் சிதறிய இளவட்ட நட்புகள்
இன்னும் மகிழ்ந்திருக்கின்றனர்
அவ்வப்போது துளிர்க்கும் ஓரிரு நினைவுகளுடன்
புலனக்குழுக்களில்
இன்னும் தோட்டப்புற நினைவுகள் ஏந்தி!

#முனியாண்டி_ராஜ்.

விதை001


அவள்
தொட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் 
என்னை
விட்டுச் செல்கிறாள்
கடந்து செல்லும் இடங்களிலோ
என்னைக் கடத்தியே செல்கிறாள்
தூவலிழந்த விரல்கள் போல்
இடம்தேடி அலைய விடுகிறாள்!



#இரயில்_சிநேகம்


#இரயில்_சிநேகம்
===•••===•••==
யாருமற்ற அந்தப்பெட்டியில்
நம்மோடு சேர்ந்தே வந்திருந்தன
அந்தப் புத்தகங்கள்..
மார்போடு அணைத்து எடுத்துப் படித்து..
ஒவ்வொரு அசைவிலும் நான்
தாள்களை மட்டுமே புரட்டிக் கொண்டிருந்தேன்..
புத்தகங்கள் உனக்குக் கொஞ்சம்
வலியைக் கொடுத்திருக்கலாம்
சிறுபுன்னகையோடு என் விலாசம்
நாடி வந்தாய்
அறிமுகங்களுக்குள் விரல்கள் மாறின...
புத்தகங்கள் ஓர் ஓரமாய் அமர்ந்து
நம்மையே கவனிக்கலாயின..
பிறப்பு இறப்பு வேலை வெட்டி
தோட்டம் பள்ளி கல்லூரி
நண்பர்கள் எதிரிகள் ஏமாளிகள்
ஏமாற்றியது ஏமாந்தது..
ம்ம்ம்.. இன்னும் இன்னும்
பயணம் முடியாத ஒரு தூரத்தில்
நீயும் இறங்கிக் கொண்டாய்..
ஒரு இரயில் சிநேகத்தின்
பொருளைக் கற்பித்துவிட்டு!

#முனியாண்டி_ராஜ்.

ஒப்பீட்டில் நீ இல்லாமல்.


ஒப்பீட்டில் நீ இல்லாமல்..
===•••===•••===•••==
இத்துடன் என் தேடலை
நிறுத்தலாம் என நினைக்கிறேன்
ஒரு மழையில் காணாமல் போன
உன் விரல்களின் பதிவைத் தேடி
எத்தனை மழைகளில் நான் நனைவது
பாவமோ பரிதாபமோ
என் நனைதலின் கரிசனைக்கு
நீட்டப்படும் குடைகள் ஒவ்வொன்றையும்
நிராகரித்தே செல்கிறேன்
அதன் நிறம்
.....மஞ்சளோ சிவப்போ கறுப்போ
எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்
வெறும் கம்பிகளாய் சிதைந்திருக்கும்
இந்தக் குடைக்குள் ஒளிந்திருக்கும்
காதலின் ஒப்பீட்டில் ..
இன்னும் நிராதரவாய்!

#முனியாண்டி_ராஜ்.

தமிழன்பன் விருது


சொல்லாமல் போனவை


சொல்லாமல் போனவை
===•••===•••===•••==
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்..

கார்கால மாலை ஒன்றில்
ஒரு குடையில் செல்லவேண்டிய கனவில்
உன் குடை களவு போனது
பின்
மழை பொய்த்தது வேறு
என் நகங்களில் நானே காயமுற்று
உன் கைக்குட்டைகளில் நனைந்தது...
மெதுவோட்டங்களில்
சாளர விழிகளில் பதுங்கி வந்து
காணாமல் போன கவிதைகளை
உன் கண்களில் தேடி அலைந்தது..
திரைகட்டிய திருவிழா சினிமாவில்
இடம் தேடித்தேடி நொந்ததுபோல்
ஈரப்புல்லில் பிட்டம் நனைந்து அமர்ந்தது
உன் வாசல் வரும்போதெல்லாம்
காற்றிழந்த மிதிவண்டியை வைவதுபோல்
உன்னை வரித்துக் கொண்டே போனது
அறிந்த பாடத்தையும் அறியாதவனாய்
அப்பாவியாய் உன் கதவு தட்டியது
தாமதமெனத் தெரிந்தும் தெரியாமல்
வகுப்பறை நுழைந்து
உன் கவனம் திருடத் துணிந்தது..
இதுபோல் இன்னும்..
இறுதியாய்
நீ கல்யாணச்செய்தி சொல்லியும்
என்னை நானே மாய்த்துக் கொண்டு
துணிவற்றுச் சரிந்தது....

இப்படி
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்....
இன்னும் நீ
என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பது!

#முனியாண்டி_ராஜ்.

குறட்டை


அவன்
மோசமான ஓட்டுநர்
பழங்காலத் தொடரி தொடங்கி
இக்காலச் சுழலூர்தி வரை
பிரமாதமாக ஓட்டக்கூடியவன்..
சில சமயங்களில்
காட்டு விலங்குகளையும்
அவற்றின் குரல் தெறிக்க
ஓட்டி வருபவன்..
நம்பாவிட்டால்...
என்னைப் போல்
தூக்கம் கலைந்தவர்களைக்
கேட்டுப் பாருங்கள்..

#முனியாண்டி_ராஜ்.
8/7/2016



முழுமை பெறாமலேயே...
===•••===•••===•••===
முழுமை பெறாத ஏதோவொன்று
இந்தத் திருகு வெட்டுப்புதிரில்
விடுபட்டது போலவே உள்ளது
பல சாலை வளைவுகளிலும்
முக்கோண நாற்கோணச் சந்திப்புகளிலும்
கடந்து போகும் எந்த முகமும்
இதில்
பொருந்தாமலேயே கனவைக் கொல்கிறது
ஒரு முதல் தொடுதலில்
சட்டென விரலிழுத்ததில்
கண்ணின் ஓரம்வழிந்த
அந்த ஒருதுளி நாணத்தின் சாரலா
கவிதையென நாலுவரிக் கிறுக்கலில்
உன் மௌனத்தை ஒளித்த
அந்தக் கடைசி வினாடிகளின் சலனங்களா
ஒரு கடிதம் கொடுக்கவும்
விரல்முதல் விழிவரை வியர்த்திருந்த
அந்தத் துளிகளில் ஏதேனும் ஒன்றா..
அவசர அவசரமாக எதையோ கூற
ஓடிவந்து...
படிக்கட்டுகளில் பதுங்கிக் கொண்டாயே..
பிறந்த நாள் வாழ்த்துகள் எனும்
சொற்கள்கூட பாதியில் மறைந்தே அதுவா..
அதில் ஏதேனும்..
உன் விழிகளோரம் ஓடியோடி அலைந்த
எனது நிழல்களின் எச்சங்களாக கூட..
உன் முகவரி தேடி களைத்தாகிவிட்டது
கூகுளும் அலசி ஓய்ந்து விட்டது
அந்த ஒரு வெட்டுத்துண்டுக்காக
என் திருகுவெட்டுப் புதிர்
இன்னும்
பூர்த்தியாகாமலேயே போகிறது...

#முனியாண்டி_ராஜ்.

தலைப்பில்லாத தலைகள்


Wednesday, October 19, 2016

நானும் உனக்கான கவிதையும்..



நானும் உனக்கான கவிதையும்..
===•••===•••===•••===•••
மின்விசிறியின் சீற்றத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் பறந்திருந்த
காகிதங்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கத் தொடங்கினேன்..
சில எழுத்துகளிலும்
சில சொற்களிலும்
சில வரிகளிலும்
முடங்கிப் போய் அமர்ந்திருந்தன
உன்னைப்பற்றி கேட்காமல் எழுதிய
கவிதைகளைவிட...
நீ கேட்ட போது எழுதத் தொடங்கியவை
இன்னும் தவழ்ந்து கொண்டே..
நீ மட்டும்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்
இமைக்கம்பிகளைப் பிடித்தவாறே
விழிகளோரத்தில்!

#முனியாண்டி_ராஜ்.

தண்டவாளங்கள் ...


தண்டவாளங்கள் ...
===•••===•••===••
எந்தவித இரைச்சலுமின்றி
தண்டவாளங்களுக்குள் ஊர்ந்துசென்று
காணாமல் போனது அது...
உன்
ஒரு கையசைவுக்காக காத்திருந்து
விரல்கள் தானாகவே ஒடுங்கின
சுற்றிச் சுழன்ற பார்வைகளில்
அசைத்த கைகளை
இன்னும் இறக்காமலும்
முகத்தின் புன்னகைகளைக் கழற்றாமலும்
ஒவ்வொருவராக
நிலையத்திலிருந்து நழுவிக்கொண்டிருந்தனர்
பிரிந்து கொண்டே இரயிலை நகர்த்திய
தண்டவாளங்கள்
ஒரு பிரிவின் விளிம்புகளைக்
கூறியபடியே நீண்டு கொண்டிருந்தன
வெப்பத்தோடு நுழைந்த நிலா
எதையோ கூறவரும் நேரம்..
நீள்இருக்கைகளைத் தவிர
காலியாக இருந்தது இரயில் நிலையம்!

#முனியாண்டி_ராஜ்.

தலைப்பில்லாத் தலைகள்...




தலைப்பில்லாத் தலைகள்...
===•••===•••===•••===••
எனக்கான உருவங்களை
அவர்களே வரைந்திருந்தார்கள்..
விரும்பிய வண்ணங்களில்
என்ன அழகுப்படுத்தி ஆரவாரித்திருந்தார்கள்
தங்கள் வண்ணங்களை
இன்னொருவர் மேல் பூசிவிட்ட பூரிப்பில்
எக்காளச் சிரிப்புகளைத்
தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்
ஒவ்வொரு மனதிலும் நாறிய குப்பைகளை
மற்றொருவர்மேல் ஏற்றிவிட்ட ஆணவம்
நடைகளில் நாடகமாடியது
விரல்மாற்றியோ கைமாற்றியோ
எழுதி ஏமாற்றியதில்
தங்கள் கெட்டிக்காரத்தனத்தைத்
தாங்களாகவே புகழ்ந்து கொண்டார்கள்
மனதின் வக்கிரங்களில்
மிருகங்கள் தாராளமாகவே வெளியேறின
பெயர் மறைத்து
ஏதோ ஒரு பொய்ம்மைக்குள் ஒளிந்து
முகமின்றி உலாவிய அதை
அவ்வளவு சீக்கரம்
நிராகரிக்க முடியவில்லை..
மொட்டைக் கடிதமென்று!

#முனியாண்டி_ராஜ்.

பிரிவுகளுக்கு முன்...


பிரிவுகளுக்கு முன்...
===•••===•••===•••
உறக்கத்தில் தள்ளிவிட முயன்ற
இரவின் நீண்ட முயற்சிகளில்
நீ இழுபறியாகவே இருக்கிறாய்
இமைகளுக்குள் அமர்ந்துகொண்டு!
ஒரு பெரும் மழைக்குப் பின்
ஓய்ந்ததுபோல் தலையணைக்கருகில்
கைப்பேசி....
தகவல் பரிமாற்றத்தில்
உன் விரல்கள் சற்று ஓய்ந்திருக்கலாம்
குரல்பதிவு தகவல்களில்
நீ ஆர்வம் குன்றியும் போயிருக்கலாம்
வடிவேல்களிலும் விவேக்குகளிலும்
நீ தாக்கியப் படத்தகவல்களில்
கொஞ்சம் உருக்குலைந்துதான் போயிருக்கிறேன்..
கைப்பேசியை முடக்கிவிட முயலும்
ஒவ்வொரு கணங்களிலும்
நீ புன்னகையோடு விரல்களோரம்
நடை பயில்கிறாய்....
உன் கோபங்களைக் கொட்டித்தீர்த்த
களைப்பில்
உன் திறன்பேசி உறங்கியிருப்பதை
அழைப்புகளின் நிராகரிப்புகள் அறிவிக்கின்றன..
சுற்றியிருக்கும் சுற்றங்களில்
உன் மூளை சலவை செய்யப்பட்டு
அழுக்காகாதவரை...
இது அப்படியொன்றும் புதிய கதையல்ல
விசனப்பட!!

#முனியாண்டி_ராஜ்.

குறிஞ்சி


கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்


கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்
===•••===•••===•••==•••===•••===••
சுடுமணலில் பாதம் கொப்புளிக்க
நாவறண்டு நீர்தேடிய விழிகளில்
கானல்நீராய் கடந்தபோன மணல்திட்டுகள்போல்
கதிரின் கொடுமையில் கால்கள் அல்லாட
நிழல்நாடும் ஒரு நெடும்பயணத்தில்
மேகநிழல்களில் தொலைந்த
களைத்த ஓர்வழிபோக்கன்போல்
மௌனவில்லொடிக்க இராமனாய்
உன் வாசல்வரும் போதெல்லாம்
கானல்நீராய் போகிறேன்
நீ வீசும் அலட்சிப்பார்வைகளில்
சாளரங்களில் திடீரென
கடந்துநகரும் உன்நிழல்களில்
நானும் கொஞ்சம் களைப்பாற முயல்கையில்
படாரென அறைந்துமூடும்
வல்லோசையில் அதிர்ந்து களைகின்றன
நான் சுமந்துவந்த அத்துணைக் கவிதைகளும்
கொஞ்சம் கனவுகளும்..
இன்னும்
பல பாலைகளைக் கடக்க வேண்டுமெனில்
மீண்டும் மீண்டும் நான் அவதரிப்பேன்
உன் சாளர ஓரங்களில்
கொஞ்சம் கவிதைகளுடனும்..
நிறைய கற்பனைகளுடனும்!

#முனியாண்டி_ராஜ்.

போரின் மெல்லிய இடைவெளிகளில் ...



போரின் மெல்லிய இடைவெளிகளில் ...
===•••===•••===•••==•••===•••==
கொழுத்த அரபுக்குதிரையின் முதுகில்
பிட்டம் அழுத்தி 
திசையெங்கும் மேய்ந்தன அவன்விழிகள்
கனத்தஅவன் மௌனத்தின்
பொருள்புரியாது விழித்துக் கொண்டிருந்தது
அப்புரவி
தடித்த அவன் கட்டளைக்காக
காத்துக்கிடந்தன வேட்டைப் படைகள்
குருதிக்கரை இன்னும் மறையாத
வாளினை ஒருகணம் உருவி
மீண்டும் உறையில் செலுத்தினான்
விழிகள் வீசிய தூரங்களில்
எதிராளி யாருமிருப்பதாய் தெரியவில்லை
தனக்குள் தவிர..
ஒருதடவை மேலும்கீழும்
தன்னையே பார்த்துக் கொண்டான்
வீசிய வாளால்
வாழைத்தண்டாய் சரிந்த அவள்தேகம்
ஒருமுறை கண்முன் வந்துமறைய
தன்படைகளை நோக்கினான்
குருதிசுமந்த வாள்களின் வாடையில்
சடாரெனத் திரும்பிக் கொண்டான்
ஒருபெருத்த மௌனத்தை
அரபுக்குதிரை கர்ஜித்துக் கலைத்தது
மீண்டும் அவளே கண்முன் வந்தாள்
ஏதோ ஒன்றை நோக்கி
...அவள்கரங்கள் நகர்வதுபோல்
...அவள்கால்கள் மணலைக்கிழிப்பதுபோல்
...பார்வை யாரையோ வேண்டுவதுபோல்
...சில வார்த்தைகளை அவள்உதடுகள்
மீண்டும் மீண்டும் உச்சரிக்க .......
படைகள் சிலையாய்ச் சமைய
விர்ரெனத் திரும்பிய அந்த அரபுப்புரவி
ஒரு பாலைவனப்புயலை எழுப்பிவிட்டுப்
பறக்கத் தொடங்கியது..

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 05


நீண்டு கொண்டே
நகரும் இரவு
இமைகளில் அவள்




படைப்பு


1234



கிளைகள் அனைத்தும்
வெட்டி வீசப்பட்ட பின்னும்
வேர்கள் ஒவ்வொன்றிலும் விஷமிட்டும்
உயிர் உருவெடுத்துக் கொண்டே வருகிறது..
அவ்வப்போது துளிர்க்கும் 
கணுக்கல்களில் நீ!

#முனியாண்டி_ராஜ்.

ஓசையில்லா குரைப்பில்

அதன் மொழியில்
எனக்குப் பேசத் தெரியவில்லை..
இருகால்தூக்கி வாலாட்டி
நாவால் நக்கி
ஓசையில்லா குரைப்பில்
ஏதோ சொல்லும் தருணம்..
அதன்மொழி புரியாமல்
ஒருபுன்னகையில் தடவிவிட்டு மட்டுமே
செல்ல முடிகிறது..
வாசலில் படுத்துருண்டு
இரவெல்லாம் பாதைகள் பார்த்து
திடீரென எழும் அரவங்களில்
இறுக்க உணர்வுகளில் விரைகையில்
'நானிருக்கிறேன் போய்ப்படு' என்பதுபோல்
வாலாட்டிக் கூறுகையில்...
மனிதர்களின் மொழி மரித்தே போகிறது
பல சமயங்களில்!




திருவிழா வேண்டி



திருவிழா வேண்டி ....
===•••===•••===••
நீண்டுவிரிந்த நெடுஞ்சாலைகளிலும்
கைகுலுக்கிக் கொள்ளும் கட்டடங்களிலும்
சற்று ஒதுங்கிநின்ற அந்தஊர்
கொஞ்சம் செத்தே போயிருந்தது
நோயுற்றுப்போன அந்தச் சாலையின் வளைவில்
அந்த ஊரின்கீழ் 2 km என இருப்பதைப்
புதர்கள் விளக்கினால் படிக்கலாம்
சிறிய கடைத்தெரு என்றோ
சின்ன பட்டணம் என்றோ
பெரிய கிராமம் என்றோ
எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள்
அந்த மைல்கல் பார்த்தே பசிநிறைத்த
காலமெல்லாம் உண்டு
தூரத்தின் வாசனையில்
கடைத்தெரு உணவுகள் நாசிக்குள்
நுழைவதெல்லாம் இருந்த காலம்
நெடுஞ்சாலை விலக்கிப் போகையில்
இன்றும் அக்கல் கண்ணில்..
ஒருமஞ்சள்துணி சுற்றப்பட்டு
சிவப்புப் பொட்டிட்டு
ஓரிரு வாழைப்பழ ஊதுபத்தியுடனும்!
தயாராகவே இருங்கள்...
.... இன்னும் சிலநாள்களில்
யாராவது வசூலூக்கு வரலாம்
தங்களுக்கான கோவில்களுக்கு!

#முனியாண்டி_ராஜ்

பேரவைக் கதைகள்


மலாயா பல்கலைக்கழகத்தின் பேரவைக் 
கதைகள் 30 இல் என்னுடைய சிறுகதை ஆறுதல் பரிசு RM 300 பெற்றது.
#குறிப்பு
#இது_நான்_எழுதிய_முதல்_சிறுகதை_என்பது_குறிப்பிடத்தக்கது,

கவிதைகள் பக்கம் மட்டுமே விரிந்த என் சிறகுகள் முதன்முறை சிறுகதை பக்கம் பறந்திருக்கிறது

#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..


#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..
===•••===•••===•••===•••===••
அரக்கர்படைசூழ மிடுக்குடன்
நடந்து வந்தான் நரகன்
வழியெங்கும் அவன் கடித்துத் துப்பிய
எலும்புத்துண்டங்களின் வீச்சத்தில்
உயிர்தவிக்கும் மனிதங்களும்
சற்று மூச்சடக்கிக் கொண்டன
ஓடிஓடி ஒளிந்த நரன்களை
தேடித்தேடியெடுத்து விருந்தாக்கினான்
தேவர்களின் அலறலிலும்
நரர்களின் நடுக்கத் தேம்பல்களிலும்
சட்டென கண்விழித்த கடவுள்
புதிய பரிணாமத்தில் பழிதீர்க்க...
--------------
ஒருமரணத்தின் கொண்டாட்டதில்
வன்முறைகள் மீண்டும் கலந்தன
மதுபான ஆடம்பரங்களில்
நரகன்கள் பலர்தோன்ற..
இன்னொரு அவதாரம் கேட்டு
நரகாசுவரன் மீண்டுமொருமுறை
பிறந்து வரலாம்!
தேவர்களும் நரர்களும்
வதைபடலம் வேண்டி
திரும்பவும் ஒருதவம் மேற்கொள்ளலாம்!!

#முனியாண்டி_ராஜ்.

காத்திருக்கும் தேவை

அவர்கள் வீட்டில்
எப்பொழுதாவதுதான் மழைபெய்யும்
தேவையான நாள்களுக்கு 
பாத்திரங்களும் 
பொறுக்கியெடுத்த சாய டின்களும்
தங்கள் வயிறுகளை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கும் தேவைகளுக்கு
குழாய்களே இல்லா இடங்களில்
மழை
அவர்கள் காத்திருக்கும் தேவதைகள்!
கனவுகாணும் இரவுகளில்
அவர்களின் குழந்தைகள்
நட்சத்திரங்கள் எண்ணியே
கணிதம் கற்றார்கள் படுத்த படியே..
கொஞ்சம் மழைக்காகவும்
நிறைய நட்சத்திரங்களுக்காகவும்
அவர்களும்
எப்போதாவது கொஞ்சம்
கனவு காண்பதெல்லாம் உண்டு..
திடீரென உரசும் வெயில்களில்
சட்டென தீப்பிடிக்கும் போதெல்லாம்
சேகரித்த மழைநீர்
அவர்களைக் காப்பாற்றுவதே இல்லை..
நட்சத்திரங்கள் மட்டும்
வழக்கம் போலவே அவர்களுக்கு
கணக்கிட உதவும்..
மீதமுள்ள நாள்கள் கழிப்பதற்கு!



கல்லறை


அவனும் இங்கு வாழ்ந்ததாய்தான்
கூறுகிறார்கள்..
உன்போல் என்போல்
உண்டு உடுத்தி
குடும்பம் நடத்தி
படித்துக் கிழித்து...
வாழ்ந்ததாய்தான் கூறுகிறார்கள்
சான்றுகளும் காட்டுகிறார்கள்
வரிசை வீடுகள்..
மண்சுமந்த நிலவிரிப்புகள்..
கல்லாலும் மண்ணாலும் ஆன
ஓரிரு கட்டடங்கள்
அப்பனென உரிமையேற்க
ம்ம்ம்... பிள்ளைகள்..
இத்யாதி .... இத்யாதி..
கடைசியாய் கோட்டைபோல்
ஒரு கல்லறை..
அவனும் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்
பூமியில் மட்டும்!

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 04



தேர்தல் சங்கொலியில்
சோம்பல் முறித்து எழுந்தன
சாதிச் சங்கங்கள்

#முனியாண்டி_ராஜ்.

நானும் உனக்கான கவிதையும்..



நானும் உனக்கான கவிதையும்..
===•••===•••===•••===•••=======

மின்விசிறியின் சீற்றத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் பறந்திருந்த
காகிதங்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கத் தொடங்கினேன்..............

சில எழுத்துகளிலும்
சில சொற்களிலும்
சில வரிகளிலும்
முடங்கிப் போய் அமர்ந்திருந்தன...............

உன்னைப்பற்றி கேட்காமல் எழுதிய
கவிதைகளைவிட...
நீ கேட்ட போது எழுதத் தொடங்கியவை
இன்னும் தவழ்ந்து கொண்டே...............

நீ மட்டும்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்
இமைக்கம்பிகளைப் பிடித்தவாறே
விழிகளோரத்தில்......!!!!

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 03

புத்தக வெளியீடு
இருக்கைகள் நிறைந்திருந்தன
பறவைகளின் எச்சம்

ஹைக்கூ 02



நீண்டிருந்த சாலை நெரிசலில் 
மனம் இலயித்திருந்தது
கையில் புத்தகம்

*********************
வழிகள் கனத்தும்
இறக்கி வைக்க முடியவில்லை
உன் நினைவுகளை

*********************
திருமண வீடெங்கும்
களை கட்டியிருந்தது மௌனம்
கைப்பேசியில் விருந்தினர்கள்

********************************
#முனியாண்டி_ராஜ்.

உன்னோடு_சில_நாள்....


வருடங்களின் மடித்து வைத்த
நினைவுகள் புரட்டப்படும் போதெல்லாம்
ஓரிரு துளிகள் விழிகளிலிருந்து
நழுவுவதைத்
தவிர்க்கப்பட முடியவில்லைதான் பெரும்பாலும்
நிறம் மாறிப்போன
ஒரு புகைப்படத்தில் மட்டுமே
நீ இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாய்..

ஆளில்லா நீள்இருக்கையில்
உன் பிம்பத்தோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
முதலில் பாவத்தோடு பார்த்தவர்கள்
இப்போது
பைத்தியமாய்ப் பார்க்கிறார்கள்
அதைத் தவிர வேறில்லை.....
எதையாவது பேச வேண்டுமென்று
நெருங்குபவர்களும்
புதிரான பார்வைவை மட்டும்
விட்டுச் செல்கிறார்கள் சோகமாக!

வழக்கமாக நடக்கும் ஒற்றையடிப்பாதையும்
நெடுஞ்சாலைகள் அபகரிப்பால்
பேயாட்டம் போடுகின்றன
கால்நனைக்கும் அந்த ஆறும்
ஓடையாகி ஒண்டிப்போய் நிற்கிறது
நிழல்மரங்கள் ...நிஜமரங்கள் என்ற
கோட்பாடுகளைத் தாண்டிப் போய்விட்டன
இப்படி நிறைய..
உன் நினைவுகளை என்னிடமிருந்து
பிரிப்பதற்காக..

பழகிப்போனவர்களுக்கு
உன் முகம் மறந்திருக்கலாம்
இன்னும் எவ்வளவு நாள்களுக்கு
எனக் கேட்டவர்கள்..
நாக்கைக் கடித்துக் கொண்டு
நாசுக்காக நகர்ந்து போகிறார்கள்
உதடுகளுக்குள் சிரித்துக்கொண்டு
அவர்கள் மொழியில் ஏதேனும்
பெயரும் வைத்திருக்கலாம் எனக்காக

ஒரு வேறுபாட்டைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்..
முன்பெல்லாம் கவிதைகளை
எடுத்தாண்டு பெருமித்தேன்..
உனக்காக..
இப்போதெல்லாம் எழுத்தாளினும்
பெருமிப்பதேயில்லை...
நீயின்றி!

#முனியாண்டி_ராஜ்.