2019


======================================================

அடர்ந்த வனங்களின் கிளைகளின் ஊடாக
இறங்கிக் கொண்டிருக்கும் நிழல்களில்
இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்
வேர்களில் விரவிக் கிடக்கும் மூலங்களிலோ
நுனிகளில் நீண்டிருக்கும் தளிர்களிலோ
என்னால் நுழைந்திருக்க முடியாது
ஒரு தேடுதலின் பயணம் என்பது
நிழல்களின் அடிச்சுவடு தொடுவதென்பது
அரசியலற்ற ஒரு நாடோடியின் கனவு
வனங்களின் அத்துணை வார்த்தைகளையும்
எடுத்துப் பார்ப்பதென்பது வானம் தொடுவதாய்
எல்லையற்ற ஒரு நடை
எங்கேயாவது நான் தேடும் நிழலென்பது
நிஜமேதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்
அது மலையிலிருந்து விழும் அருவியாக கூட!
=======================================================
 =========================================================
 ===============================================================


==========================================================

==••==••==••==••
மதம் கலைக்கப்பட்டவனின்
உடலை ஏதோ ஒரு மயானம்
உள்வாங்கியிருந்தது
உடலற்று கல்லறை விட்டகன்று
கருவறை நோக்கித் திரும்பிய பயணத்தில்
வழிபாடுகளின் இடுக்குகளில்
எங்கோ ஒரு மூலையில் அவன் ஒட்டப்பட்டிருந்தான் பெயரற்று
மலையிலிருந்து பிரிந்த அருவிகள் சீற்றமெடுத்து
நதியாய் நடந்து நடந்து
ஆறாய் அமைதியாய் கடலோடு கலந்த
ஒரு பயணத்தின் முடிவில்
ஆண்டவனின் காலடியில் அவன் கலந்ததாய்
ஊருக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள்
பாவம்..
உங்களையும் என்னையும்
அவன் கடந்து போய்க் கொண்டேயிருக்கிறான்
கண்டங்களை மட்டுமா பிரித்திருக்கிறது
கடலென!
==============================================================

===•••===•••===•••==
மௌனங்களின் மொழி விரிந்து கிடக்கும்
பனிச்சாலைகளில் மனம் நடக்க
மரங்களோடும் செடிகளோடும் உரையாட
கொஞ்சம் நேரம்
இரைச்சல் இல்லாத ஓர் இரவு
இதயத்தில் நங்கூரமிடுகிறது
வாகனங்களின் கதறல்களிலும் கண்ணாமூச்சியிலிருந்தும்
விடுபட்டோடுகிறேன்
யாரோ துரத்தி வருகிறார்கள்
வசைமொழியில் சட்டென கடந்தோடுகிறார்கள்
செவிகளில் தங்கியிருக்கும் எச்சமென துடைத்தெறிகிறேன்
இலைகளிலிருந்து மெதுவாகத் தூவுகிறது பனி
அதிரா காற்றொன்று குளிரைப் போர்த்திவிட்டுச் செல்கிறது
மொழியற்ற ஒரு மௌனத்தோடு பயணிக்க
வழிகளற்ற பயணம் ஒரு வரம்

============================================================





==========================================================

===•••===•••===•••==
ஒரு புத்தாண்டின் விளிம்பில்தான்
அவன் தன்னைச் சொல்லியிருந்தான்
வண்ண வெடிப்புகளில் வானம் குளிக்கப்போகும் நேரத்தில்
ஒரு வண்ண வானத்தை
எனக்குள் வடிவமைத்துக் கொண்டிருந்தான்
வார்த்தைகளுக்குள் நுழைய முற்பட்ட வாக்கியங்களை
நாக்கின் நுனியில் நிறுத்தியவாறே
பார்வை ஒன்றின் மேய்ச்சலில் என்னை ஈர்த்தவாறே
புத்தாண்டு பிறந்து கொண்டிருக்க
வான வேடிக்கைகளைப் பார்த்தவாறே
கோப்பைகளில் மூழ்கிக் கொண்டிருந்தவனிடமிருந்து
பொருள் பொதிந்த புன்னகையுடன்
விலகி நடந்து கொண்டிருந்த புத்தாண்டு சபதங்களுடன்
நானும் நடக்கத் தொடங்கியிருந்தேன்
மேகங்களுக்குள் மறைந்திருந்த நிலவு
கடலில் விழ அவசரமாக நகர்ந்து கொண்டிருந்தது


====================================================================
தோல்வியின் விளிம்பில்
தொங்க விடப்பட்டிருக்கும் போராட்டங்கள்
அடக்குமுறைகளிலும் அதிகாரப் பிரம்புகளினாலும்
கழுத்துவரை வன்முறை செலுத்தப்படுகிறது
இரத்தம் சார்ந்த அச்சுறுத்தல்களில்
அசுரன்கள் ஏவப்படுகிறார்கள்
பெரும்பான்மைகளின் எக்காளச் சிரிப்பில்
சிறுபான்மைகளின் உரிமைகள் சிதைக்கப்படுகின்றன
இனங்களைத் தேடி
மதப்பாம்புகள் வேகமாக ஊர்ந்து நுழைகின்றன
உள்ளத்தைக் கழற்றும் நேரங்களில்
உறவுகள் ஊனப்படும் தருணங்கள் அருகில்தான்
29122019
===============================================================


=======================================================


===========================================================

அழுது ஓய்ந்த ஒரு மழைக்குப் பின்
ஈரம் கசியும் தரையின் பிம்பங்களில்
நிழலைத் தேடியபடி
ஒரு பயணத்திற்காக அமர்ந்திருப்பதைப்
பார்த்திருப்பாய்…
தண்டவாளங்களையே வெறித்தபடி
ஒரு வெளிறிய பார்வையில்!
வரப்போகும் மழைக்காகவோ
வந்து விழுந்து துளிகளுக்காகவோ
எதற்கேனும்
என் கைகள் ஏந்தியிருக்கும் குடையினில்
நீ என்னைக் காண முடியாது..
என்றோ வந்து போன
ஓர் இரயிலுக்காக அமர்ந்திருக்கிறேன் என்றால்
……. உனக்காக
தொடர்ந்து கொஞ்சம் நனையலாம்..
==============================================================


==••==••==••==•
உறக்கம் உதறி எழுகிறேன்
உடல்மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது
உறக்கம் களையா ஒரு நாகம்
அருவருப்பின் எச்சங்களில்
வெளிச்சங்களை அள்ளித் தெளித்த இரவுகளிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக என்னை மீட்கிறேன்

ஒற்றை இலையில் ஒட்டிக் கொண்டிருக்கும்
ஓரிரு துளிகளுக்காக சுற்றிக் கொண்டிருக்கிறது ஒரு தேன்சிட்டு

ஓர் இரவை யாசித்தபடி
நகர்ந்து கொண்டிருக்கும் நகரங்களில்
தொலைந்தபடி ஓடத் துவங்குகிறேன்
எந்தச் சந்திலும்
நாகமேதேனும் இரைக்காகக் காத்திருக்கலாம்
இங்கே யாரும் யாருக்காகக் காத்திருப்பதில்லையென
எனக்கு முன்னும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்

இயன்ற ஒரு துளியை மட்டும் பருகிவிட்டு
பறக்கத் தொடங்குகிறது தேன்சிட்டு

#முனியாண்டி_ராஜ்.
22022019

====================================================
காதலெனப்படுவது இதுவெனில்....
===•••===•••===•••===•••===
விழித்தெழும் வேளையில்
இரவுகனாக்களின் சில எச்சங்கள்..
சாலை நிறுத்தங்களில்
வண்ணம் மாறும் சமிக்ஞைகளின்
இடைவெளிகளில்
கடந்துசெல்லும் சுடிதார்களிளெல்லாம்
உன் முகம்..
எழுதுகோல் விரல்களில் வழிகையில்
உன் பெயரின் நர்த்தனம்
கவிதை என்ற பெயர்களில்..
மாலைத் தேநீருடன்
உன் ஒற்றைவிழிப் பார்வை பிம்பம்..
மௌன மழைகளில்
லேசான சாரலின் நனைதல்..
கனத்த மாரிகளின் மிரட்டல்களில்
குடை பிழைத்த
உடலுரசும் அந்த வெப்பங்கள்..
சினிமா கதாநாயகிகளில்
அவ்வப்போது மாறும் உன்முகம்..
ஏதோ ஒரு நினைவில்
திடீரென சுவர்மோதும் போது
'என்னடா கனவா' என்ற சொற்களில்
இடறிவிடும் உன் பாங்கு....
உறங்கும்முன்
ஏதோ ஒரு சினிமா பாடலில் நீ...
ம்ம்ம் ....
இவையனைத்தும்தான் காதலென்றால்
நீயும்
அப்படியே இருந்துவிட்டுப் போய்விடு
என்னைக் கொல்வதைத் தவிர!
====================================================================
=======================================================


==============================================================

===•••===•••===•••===•••=
சிதறிப் போயிருக்கும் கண்ணாடிச் சில்லுகளுக்குள்
உடைந்து போயிருக்கிறது முகம்
ஒட்டி ஒட்டிப் பார்க்க
ஒவ்வொரு கண்ணாடிச் சில்லும்
ஒவ்வோர் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது
சூரியனைக் குறை கூறிக்கொண்டே
இரவுகளின் மேல் வசை எறிகிறார்கள் ஏதிலிகள்
நேற்று இரவுகூட இதே நிலவுதான்
கொஞ்சம் உடைந்து போயிருந்தது
குறை கூறியதில் கோபித்திருக்கலாம்
வேதங்களின் மேல் நடந்து களைத்துப் போன
மனதையும்
கொஞ்சம் காய வைத்திருக்கிறார்களாம்
இப்போது பிரச்சினை அதுவல்ல
சிதறிய போயிருக்கும் முகங்களை
எங்கே அடக்கம் செய்வதென்ற வாதத்தில்
இன்னும்
துகள்களாக ஆகிக் கொண்டிருக்கிறது
நம்பிக்கை ...
சவாரி செய்யக் கிடைத்து விட்டது
இன்னோர் மனிதனின் முதுகு!
11022019
==============================================================

===========================================================

=========================================================






அறைகளுக்குள் சிறைகள்
===•••===•••===•••===
அறையின் மூலையில் கட்டி முடிக்கப்படாத
ஒரு சிலந்தி வலையினுள்
அடர்ந்த ஒரு வனம் சிக்கிக் கிடக்கிறது
ஒவ்வொரு முறையும் வலைபின்னும் அந்தச் சிலந்தி
வனங்களின் அடர்த்திகளில் இழைகளைத்
தொலைத்துவிட்டதாய்த் தேடிக் கொண்டிருக்கிறது
வனங்களுக்குள் பதுங்கியிருக்கும் ஏதாவது ஒரு புலியிடம் தன்னிழைகள் சிக்கியிருப்பதாக
இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது சிலந்தி
வலைகளுக்குள் புகுந்து வரும் பூச்சிகளைத்
தின்பதற்குத் துணிச்சலின்றி
சுவர்களில் நகர்ந்து கொண்டிருக்கும் பல்லிகளைத் துரத்தியவாறே
கடும்பசியில் நாளையே இறந்து போகலாம் அது
பல்லிகளுக்குச் சிலந்தி இரையாகுமா என
என்னைக் கேட்காதீர்கள்
எறும்புகள்கூட யானைகளைத் தின்னலாம்
யார் கண்டது
============================================================


தற்காலிகங்கள்...
===•••===•••===•••===
அது தற்காலிமாகத்தான் இருந்தது
நானில்லா இடத்தில்
இன்னொருவரை நிறுத்துவதென்பதுபோல்
பேருந்து இருக்கையில்
ஒரு கைக்குட்டை வெட்டரிவாள்போல்
அமர்ந்திருப்பதிலிருந்து..
காத்திருப்பு என்ற இடங்களில்
ஒரு புன்னகையை வைப்பதுவரை
தற்காலிமாகத்தான் இருந்தது
பட்டங்களுக்கும் பதவிகளுக்கும்
கால்கள் சிறைபட்டிருப்பதும்
ஏதோவொரு விரக்தியில்
கலையொன்றைப் பிடித்துப் பயணிப்பதும்
தற்காலிமாகத்தான் இருந்தது....
சிங்கத்தலைவன் உதிக்கும்வரை
சிறுநரி தலைமகுடம் சூடுவதுகூட
தற்காலிகமென்றே அறையப்பட்டிருந்தது
அவனுக்கான அவர்களின் கூக்குரலும்
தற்காலிகமென அறிய அவர்களுக்கும்
நேரம் தேவைப்பட்டது ..
நாலாறு சதுர அடிகளுக்குள்
உடலின் இடம் தற்காலிகமெனத் தெரிந்தும்
தற்காலிகங்களுக்குள் அனைத்தையும்
அடைக்கபட்ட முற்பட்ட போதும்..
தற்காலிகமென்ற சிறுபயணத்தில்
வாழ்க்கை மறக்கப்பட்டிருப்பதை
நிரந்தரமென்றே நினைக்கத் தோன்றுகிறது
நிஜங்களை மறந்தவர்களுக்கு!
============================================================


=============================================================

கனத்த மௌனத்தில் உறங்கியிருக்கும் இரவு
பனியில் நனைந்தும் தலை துவட்டாமல்
அறைக்குள் நுழையும் காற்று
தலையணைகீழ் தூக்கம் தேடும் விழிகள்
எட்டும் தூரத்தில் விசைகள் இருந்தும்
அணைக்க அஞ்சும் விரல்கள்
மூன்றாம் பக்கத்தோடு நின்றுபோன
கவிதை புத்தகத்தின் ஏடு
அரைக்கோப்பையோடு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் குளம்பி
திசைகளெட்டும் அலைந்து திரிந்தும்
ஏக்கங்களைச் சுமந்திருக்கும் மனது
கழுத்துவரை போர்த்தப்பட்டும்
உச்சந்தலைவரை வியர்க்க வைக்கும் போர்வை
நான்கு சட்டங்களுக்குள் சிரித்துக் கொண்டு
இருக்கும் உன் நிழல்படம்
பூக்களெல்லாம் உதிர்ந்து போய்
வெறும் கயிறோடு மட்டும் நிற்கிறது
மாற்றலாமா வேண்டாமா என்ற சிந்தனையோடு
நகர்ந்து கொண்டே வருகிறேன்
16122019

===============================================================

துருத்திக் கொண்டு வரும்
இருள் அடர்ந்த கைகளிலிருந்து
என்னை விலக்கிக் கொண்டு நகர்கிறேன்
சற்றுமுன் மரித்த
வெளிச்சங்களின் எச்சங்கள் சில
விழிகளின் பின்னால் விழித்திருக்கின்றன
உன் தடங்கள் காட்டியபடி!
10122019
=============================================================


=============================================================



==============================================================


===•••===•••===•••===•••===••
பரந்திருக்கும் புல்வெளியில்
எனக்கான ஆடுகள் மேய்கின்றன
மந்தைக் கூட்டங்களின் மேய்ச்சலில்
ஆடுகளை யாரும் நிறம் பிரிப்பதில்லை
பசுமை நிறைந்த இன்னொரு காட்சிதனில்
அவற்றின் மேய்ச்சல் நிலம் மாறலாம்
மறையாதிருக்கும் நிலையிலேயே
அவற்றின் வேட்டைகள் முடிவாகின்றன
வேட்டைக்கான கூட்டணியில்
எனக்கும் அனைத்துண்ணி ஒன்று அமையலாம்
நரியோ..
என் போல் புலியோ...
ஏதோவென்று இத்தடவை
என்னுடன் கைகோர்த்து வரலாம்
மேய்ச்சல் நிலம் மீறப்படுங்கால்
அவற்றின் தேவை
ஒரு புல்கட்டும் கொஞ்சம் நீரும்
இல்லாதொரு பசுமையைக் காட்டி
அவற்றைக் கூண்டோடும் வேட்டையாடலாம்
ஆடோடு ஆடாக அவற்றின் மீதான
வேட்டை தொடர்ந்தே வரும்
நான் அணிந்திருக்கும் ஆட்டுத்தோல்
அகற்றப்படும் வரை
=============================================================


மனிதமற்ற நிர்வாணம்
==••==••==••==••=
இதுதான் வீரமென்கிறாய் நீ
ஒரு பெருங்கூட்டத்துள்
மதமோ இனமோ மொழியோ
ஏதோவொரு முகமூடியணிந்து
கூட்டத்தோடு அதற்கேற்ப சட்டைகளுடன்
அமைதிப் பேரணியென
ஆரவாரிப்பதோடு சில மணி நேரங்களில்
அடங்கிப் போகிறாய்
கூட்டங்களுக்கு வெளியே நிற்பவர்கள்
உனக்குக் கோழைகளாய்த் தெரிகிறார்கள்
உனக்குச் சூடேற்ற
காதுகளில் வீசப்படும் உரைகளில்
உறைகளில் பதுங்கியிருக்கும் வன்மங்களைத் தேடுகிறாய்
உன் மூளையை நன்றாகவே வண்ணப்படுத்தியிருக்கின்றன
நீ ஏந்தியிருக்கும் கொடிகள்
ஒரு தனி மனித ஆணவத்தின்
கொம்புகளில் தொங்கவிடப் பட்டிருக்கின்றன
உன் கோவணத் துணிகள்
நிர்வாணமென்பது ஆடைகளின்றி இருப்பது மட்டுமல்ல
#08122018
============================================================



==••==••==••==••==••==••==

மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச

காதலோடு வந்திருந்தாள் இன்று

கனத்த மழையினூடே

சற்று இடைவெளிவிட்ட நிமிடங்களில்

கொஞ்சம் உரையாடல் தேவையற்றதாகியிருந்தது

மொழிகளைவிட மௌளனங்களில் கரைந்து கொண்டிருந்தது வானம்

காலின் கணுக்கால்வரை ஏறிய நீர்

ஒரு தயக்கத்துடன் இறங்கத் தொடங்கியிருந்தது

குடைகளுக்குள் அடைக்கலமானவர்கள்

குடைகளுக்குள்ளேயே சிறைபட்டிருந்தனர்

மழையின் மீதான நம்பிக்கை
பெரும்பாலும் குறைந்தேதான் இருக்கிறது பலருக்கும்
மீண்டும் சொட்டுச் சொட்டாக இறங்கிய
மழையின் எச்சரிக்கை ஒலியில்
இப்போது
மௌனங்களைக் களைந்து
தன் மொழியில் உரக்கப் பேசத் தொடங்கியது வானம்
மிஞ்சிய சில காதலையும் கழுவிக் கொண்டே!




07122019


 ==========================================================================


========================================================================


நஞ்சு_மரங்கள்
++++++++++++++
வார்த்தைகளில் மறைந்திருக்கும் விஷம்
கொஞ்சமாகவோ நிறைவாகவோ தூவுகையில்
பற்றி எரிகிறது இனம்
நாகரீகம் என்பது படிமுறை வளர்ச்சியென்று
கூறியவனை
வரலாற்றேடுகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொருவன் மண்டை உச்சியிலும்
அவனவன் மதம் வேரூன்றி விருட்சமாகியிருக்கிறது
கிளைகளிலெல்லாம் வெறுப்பின் மிச்சங்கள்
சாணைத் தீட்டுகின்றன
கனிக்காக காத்திருப்போர் கைகளில்
வெம்பிப் போய் விழுகின்றன போதனைகள்
தெருக்களில் போகும் கடவுள்களில்
மனிதர்களை மட்டும் தேடுபவர்களுக்கு
மதங்கள் அவ்வளவாகப் புலப்படாதுதான்
கற்ற அறிவு கொஞ்சம் தூக்கலாக
உள்ளதில்
வேற்றுமைகள் விரிந்து கொண்டேதான்
உயிர்கள் பலவற்றைத் தின்று கொண்டே!
மலேசியா
05122019
===========================================================


சாமிக்கு நேர்ந்து விட்டதாய்
கூறிக் கொண்டார்கள்
மரத்தின் உச்சிக் கிளைகளில் ஏறி
வானத்திற்குத் தாவ முயற்சித்துக் கொண்டிருந்தது சேவல்
அக்கம் பக்கம் கோழிகளுக்கு
அப்படியோர் காட்டம்
முனியாண்டி கோவில் திருவிழாவிற்குக்
காவு கொடுக்க பேரம் பேசக் கொண்டிருந்ததை அறியாமல்
வானத்திற்குத் தாவிக் கொண்டிருந்த சேவல்
தொப்பென்று தரையில் விழுந்து
சிலிப்பிக் கொண்டது ஒருமுறை
ஒரே முறை

===========================================================
நவரச நாயகியுடன்
இனிதாய் ஒரு விருந்தும்
அழகாய் ஒரு தம்படமும்
கோவில் கோவிலாக ஏறி இறங்கியதில்
சாமிக்கும் கால் வலித்தது
சுற்றிப் பார்த்த இடங்களிலெல்லாம்
மின்கலம் தீர்ந்து அழுதது கைப்பேசி
பேருக்கு
ஓர் இலக்கியக் கருத்தரங்கு
கையில் திணிக்கப்பட்ட புத்தகக் கட்டுகள்
பைச்சுமையை உயர்த்தி விடுமோ
என்ற பதைபதைப்பு
விமான நிலையம் வரை
பணப்பையைத் தட்டிக் கொண்டே வந்தது
எப்படியோ
கடைசியாக நானும் போய் வந்தேன்
ஓர் இலக்கியச் சுற்றுலா
04122019
===============================================================


கோவில் வளாகத்தில்
சில்லறைகளை கொத்திக் கொண்டிருந்த
காக்கைகள்
ச்சூ என்ற துரத்தலில்
சிதறிப் பறந்தன
உண்டியல்களில் நிறைந்து கொண்டிருந்த
தானியங்களில்தான்
கடவுளும் விழித்துக் கொண்டிருந்தார்
03122019
===========================================================


-===============================================================


=============================================================


============================================================
முடியைத் திருத்திய பின்னும்
கொஞ்சமும் குறையவில்லை
தலைகனம்
===========================================================


==================================================================


இன்னும் விலகாத
ஒரு இறுக்கத்துள் இருந்தபடியே
மெதுவாக கையசைக்கிறாய்
வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே
வேகமாய் நகர்கிறது இரவு
கரைகளில் கரைந்து போகிறேன் நான்
26112019
============================================================

#அறிவாளிகள்_தினம்
==••==••==••==••==••
ஒளிகளின் வண்ணங்களில் நிறைந்திருக்கிறது அரங்கம்
நீண்டு கொண்டே போகும்
விருது பெறுவோர் பட்டியலில்
கண் சிமிட்டாமல் விழித்திருக்கும் விளக்குகள்

தவணை முறையில் கைதட்ட
நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் உடல்கள்
கொடுக்கப்பட்டதைச் சரியாகவே படிக்கும்
நெறியாளர்
அவ்வப்போது எழுத்துப் பிழைகளை மட்டும்
சரி செய்து கொள்கிறார்

அறிவாளிகளைத் தேடித் தேடி
அரங்கமெங்கும் அலசுகிறது விருது
நூலக திசையெதையும் அறியாதவன் தோளில்
சலிப்புடன் அமர்கிறது
சிறந்த வாசிப்பாளன் விருது
ஓரிரண்டு கவிதை வாசித்தவனின்
கைகளில் கௌரமாக அமர்கிறது
கவியுடன் அடையொன்றைச் சுமந்த விருது
மொழியறியா ஒருவனின் கரத்தில்
இலக்கியச் செம்மல் விருது பொருமுகிறது
அறிவாளிகளென அடையாளங் காணப்பட்டவர்களின்
முகங்களெங்கும் விருதுகள் ஒட்டப்படுகின்றன

அரங்க வாயிலை அலங்கரிக்கும்
அறிவாளிகள் தினம் பதாகையில்
ஆங்காங்கே வழிந்து கொண்டிருக்கிறது
கொஞ்ச நஞ்ச அறிவு

#முனியாண்டி_ராஜ்.
26112019
=========================================================

#பறக்கும்_மின்மினிகள்
==••==••==••==••==••==
வகுப்பறைகளுக்கு வெளியே கொட்டிக்கிடக்கும்
கிளிஞ்சல்களை
ஓடியோடிப் பொறுக்குகின்ற பட்டாம் பூச்சிகள்
கவனித்து கண்டிக்கும் அத்தனை கண்களிலும்
அடுக்கப்பட்டிருக்கின்றன ஆயிரமாயிரம் மந்திர ஓலைகள்
ஓத வேண்டிய நேரங்கள் கடக்க
இறகுகள் முடக்கப்பட்ட பட்டாம் பூச்சிகள்
கூண்டுக்குள் சரிய
இறக்கைகளின் ஒவ்வொரு பக்கத்திலும்
புத்தகங்கள் பதியப்பட்ட எந்திரர்களாய்
பறக்கத் தொடங்குகின்றன மின்மினிப் பூச்சிகள்

#முனியாண்டி_ராஜ்.

=============================================================


=============================================================


==••==••==••==••==••==••
உறக்கங்களை வைத்துக் கொண்டு
தடுமாறுகிறேன்
அது
வெயில் காலத்தைவிடக் கொடுமையானது
ஒரு
குளிர்காலத்தைவிட வன்மையானது
மழைக்காலப் புயல் போல் சீற்றமானது
பகலில் நுழையும் எந்தக் கதிரும்
தெரிவதில்லை அப்போது
அடர்வனத்தின் ஆதிக்கத்தில் அடங்கியிருக்கும் அத்தனையும்
கழுத்தை நெரிக்கும் ஒரு வலியில்
நால்புறமும் தெறிக்கும் இரணங்கள்
ஒரு
போர்க்கால பயத்தைவிட வலியது
அச்சத்தைப் போர்த்தியிருக்கும் இருள்
கண்களை வளைத்து வைத்திருக்கும்
வெற்றுப் பாதைகளாயினும்
பயணம் அவ்வளவு எளிதல்ல
முதுகுக்குப் பின்னால் நெளிந்து இறங்கும்
ஓர் அரவத்தின் சீற்ற ஒலியில்
பகல் வெகு தூரத்தில் பதுங்கியிருக்கும்
21112019
=========================================================


என் அறையெங்கும் வியாபித்திருக்கிறது
அவள் வெப்பம்
சுவரில் ஓடிய பல்லியொன்று
ஓசையிட்டுப் போகிறது
பார்த்தீங்களா .. நான் சொன்னேன்ல என
விதானமெங்கும் புன்னகைகளை
ஓட விட்டிருப்பாய் இந்நேரம்
குளிரூட்டியில் சிறிது சிறிதாக
கரைந்து கொண்டிருக்கும் வெப்பம்போல
குளிர்விக்க முடியாமல்
சிதறுகிறது அறையெங்கும் ஒரு வெறுமை
விழிகளை விட்டுத் துழாவுகிறேன்
எங்கேயாவது ஒரு மூலைக்குள்
நீ ஆழ்ந்திருக்க வேண்டும்
19112019
===========================================================

தற்காலிகங்கள்
==••==••==••==••=
ஒரு தற்காலிகத்தில் தொடங்கியது
என் பயணம்
தூரம் என்னவோ கண்கள் எட்டும் எல்லைதான்
செயற்கைப் புன்னகைகளில்
அது நீண்டு கொண்டே போனது
கொஞ்ச நேரம் பார்த்துக்குங்க எனக் கூறிவிட்டு
ஒரு மாந்தர் கூட்டத்தில் மறைந்து எழுந்தாய்
என் நிரந்தரங்களை மறந்து விட்டு
ஒரு தற்காலிகத்தில் மிதந்திருந்தேன்
நன்றி எனச் சொல்லிவிட்டு
நீ நகரத் தொடங்கி விட்டாய்
உன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்
நிரந்தரத்தை
நீ அறியவேயில்லை இப்போதும்!
18112019
==========================================================


============================================================


=============================================================

#கைகளுக்குள் வராத உறக்கம்
==••==••==••==••==••==••==••==••
இப்போது நீ வரலாம்
இரவு என்னை
ஒரு விளிம்போரம் நிறுத்தியிருக்கிறது
வருவோர் போவோரைக் கவனிப்பதே
பெரும் வேலையாய் இருக்கிறது
இறந்து போனவர்கள் பலர்
பழங்கதைகளைப் பேசிச் செல்கின்றனர்
நிகழ்கால மனிதர்களில் சிலர்
மரணத்தின் பக்கம் நகர்த்துகின்றனர்
எழுந்து கொஞ்சம் வெளியே நடக்கிறேன்
செடிகளில் உள்ள இலைகளை
ஒவ்வொன்றாக எண்ணுகிறேன்
இரவு என்னை உள்ளிழுக்கும்வரை
எதையாவது செய்து கொண்டே இருக்கத் தோணுகிறது
கைகால்களை நீட்டி
வெறுமைக்குள் திணிக்க முயல்கிறேன்
ம்...ஹூம்
விளிம்போரம் நின்று அழைத்துக் கொண்டே இருக்கிறேன்
மாலையில் மறைந்த கோபம்
நின்று பார்த்து முறைக்கிறது
நல்ல வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும்
சரிவிகிதத்தில் முளைத்து முளைத்துக் கொல்கின்றன
நீ மட்டும்
வராமல் மிதந்து கொண்டே இருக்கிறாய்
15112019
==============================================================
கவிதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன்
விருப்பக் குறியீடுகளுடன் வந்து கொண்டிருந்த
ஒவ்வொருவர் கையிலும்
ஒரு தூவலும்
சில ஏடுகளும் இருந்தன
தூரத்தில் சிலர்
வட்டங்களுக்கு வெளியே கருத்துகளோடு
நடந்து கொண்டிருந்தனர்
ஓர் ஏட்டுடனும் தூவலுடனும்
அவர்களைத் துரத்தத் தொடங்குகிறேன்
15112019
=============================================================


==========================================================


============================================================


#மொழி
==••==•
உங்கள் மொழிகளில்
நாங்கள் உரையாட முடியவில்லையென
அன்பாக வருத்தப்படுகிறீர்கள்
ஆடு நனைவதில்
ஓநாய் அழுவதில் வியப்பில்லைதான்
எங்கள் மொழிப் பள்ளிகளுக்காக
நீங்கள் அழுவது!

ஒற்றுமைகளின் மொத்த முடிச்சுகளையும்
இடுப்பில் செருகிக் கொண்டு
ஒரு முனை உங்களை உறுத்துவதாக பதறுகிறீர்கள்
எங்கள் மொழியின் பெருமை
உங்கள்
ஆசன வாய்கள் வரை குடைவதறிவோம்

இன வேற்றுமைகளை
குருத்திலேயே வளர்த்துக் கொண்டு
பற்றுகள் பற்றி பல் இளிக்கிறீர்கள்
தன்மான மாநாடுகள் நடத்தி
அடுத்தவன் உலையில் பசி பார்க்கிறீர்கள்
குறுகிய வட்டத்துக்குள்
இரண்டாம் சான்றுகளில்
உங்கள் வரலாறுகளில் சுகம் காண
எங்கள் வரலாற்றைச் சுரண்டுகிறீர்கள்

பாவம் ..
எங்களுக்காக நீங்கள் அழ வேண்டாம்
சிரிக்கவாவது முயலுங்கள்
திறந்த இல்ல உபசரிப்புக்களிலாவது!

#முனியாண்டி_ராஜ்.
13112019
===============================================================

==••==••==••==••==
ஓர் உறைவாளின் நுனியில்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது பதில்
அவ்வளவு எளிதில் நகர்த்த முடியாமல்..
கைப்பிடியில் பதிக்கப்பட்டிருக்கும்
பார்வைகள் விலகும்வரை காத்திருக்கிறேன்
=============================================================

#தெரியாத தேவதைகளும் தெரிந்த பேய்களும்..
==••==••==••==••==••==••==••==••==
உறக்கங்களில்கூட
எங்கள் விழிகளில் குத்திக் கொண்டிருந்தன
பேய்கள்
சாமி குத்தம் .. கண்ணைக் குத்துமென்ற
மந்திர வார்த்தைகளிலேயே
எங்கள் மூளைகள் மழிக்கப்பட்டு கொண்டே இருந்தன
மேகங்களுக்குள் முகங்காட்டி மறையும்
தேவதைகள் மீது ஏனோ
அவ்வளவு காதல் எங்களுக்கு
தேவதைகள் கொஞ்சம் கொஞ்சமாக
கனவுகளை ஆக்கிரமிக்க
இரவுகளெங்கும்
தேவதைகளாகவே விரியத் தொடங்கின
பேய்களை துரத்திவிட்டு
தேவதைகளை அணைக்கத் தொடங்கினோம்
விடியற்காலையில் விழித்த போது
பகல் தூக்கங்களில்கூட
தேவதைகள் பேயாய் மாறியிருந்தன
இப்போதும்கூட ...
சனியன் குத்தம்
கண்ணைக் குத்திக் கொண்டே இருக்கிறது
08112019
============================================================

==============================================================


==============================================================


சாமிகளும் பூசாரிகளும்
===•••===•••===•••===
சாமிகள் பாவம்
சிலையாகத்தான் அமர்ந்திருக்கின்றன
அப்படியே
பூசாரிகள் மணியடித்து எழுப்பும்வரை
ஏதாவதொரு கோப்பில்
மனம் தொலைத்திருக்கின்றன
அவ்வப்போது தெளிக்கப்படும் பன்னீரிலும்
தூவப்படும் பூக்களிலும்
பூசப்படும் மஞ்சள்களிலும்
திடீரென
சாமி வந்துவிடுகிறது சாமிகளுக்கும்
அதிர்ந்து ஆரவாரித்து அடங்கிப்போய்
பதுங்கி விடுகின்றன மற்றொரு கோப்புக்குள்
வரவு செலவு பார்ப்பதே
சாமிகள் பலருக்குப் பொழுதாகிவிட்டது
திடீரெனத் தூண்டப்படும் திரிகளால்
திகுதிகுவென எரிந்து முடித்து
ஓய்ந்து விடுகின்றன
சாமிகள் பல
நகர்வலமும் வருவதேயில்லை
பூசாரிகள்
கடைபிடித்து இழுத்துவரும் வரை!
சாமிகள் பலரின்
ஒப்பனைகூட பூசாரிகளால்தான் செய்யப்படுகிறது
சாமிகளும் பாவம்தான்
பூசாரிகளின் கைப்பிடிக்குள்தான்
அவர்கள் கால அட்டவணையும் தயாராகிறது
மூவேளை பூசைகளும்
பூசாரிகளின் கையெழுத்தில் இருக்கும்போது!
கோவில் வலங்களில்
பூசாரிகளின் தலையசைத்தலில்
அமிழ்ந்து விடுகின்றன சாமிகளும்
சாமிகளாகத் துடிக்கும் பூசாரிகளின்
வரைவுகளில்
ஒவ்வொன்றும் பத்திரப்படுத்தப்படுகின்றது
பாவம்
பூசாரிகளும்தான் என்ன செய்யும்
பக்தர் கூட்டம் காணிக்கைகளால்
அவர்களை நிறைக்கும்போது!
#091117
===============================================================


சக்கையெனப் பிழியப்பட்டிருக்கும் யாக்கையை
எக்காளத்துடன் பார்த்துச் செல்கின்றன
உறிஞ்சிய அட்டைகள்
புன்னகைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒரு மரணத்துக்குப் பின்
அவை தேவைப்படலாம்
08112019
==========================================================


==========================================================


============================================================


=========================================================

===•••===•••===•••===
வருடங்களின் மடித்து வைத்த
நினைவுகள் புரட்டப்படும் போதெல்லாம்
ஓரிரு துளிகள் விழிகளிலிருந்து
நழுவுவதைத்
தவிர்க்கப்பட முடியவில்லைதான் பெரும்பாலும்
நிறம் மாறிப்போன
ஒரு புகைப்படத்தில் மட்டுமே
நீ இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாய்..
ஆளில்லா நீள்இருக்கையில்
உன் பிம்பத்தோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
முதலில் பாவத்தோடு பார்த்தவர்கள்
இப்போது
பைத்தியமாய்ப் பார்க்கிறார்கள்
அதைத் தவிர வேறில்லை.....
எதையாவது பேச வேண்டுமென்று
நெருங்குபவர்களும்
புதிரான பார்வைவை மட்டும்
விட்டுச் செல்கிறார்கள் சோகமாக!
வழக்கமாக நடக்கும் ஒற்றையடிப்பாதையும்
நெடுஞ்சாலைகள் அபகரிப்பால்
பேயாட்டம் போடுகின்றன
கால்நனைக்கும் அந்த ஆறும்
ஓடையாகி ஒண்டிப்போய் நிற்கிறது
நிழல்மரங்கள் ...நிஜமரங்கள் என்ற
கோட்பாடுகளைத் தாண்டிப் போய்விட்டன
இப்படி நிறைய..
உன் நினைவுகளை என்னிடமிருந்து
பிரிப்பதற்காக..
பழகிப்போனவர்களுக்கு
உன் முகம் மறந்திருக்கலாம்
இன்னும் எவ்வளவு நாள்களுக்கு
எனக் கேட்டவர்கள்..
நாக்கைக் கடித்துக் கொண்டு
நாசுக்காக நகர்ந்து போகிறார்கள்
உதடுகளுக்குள் சிரித்துக்கொண்டு
அவர்கள் மொழியில் ஏதேனும்
பெயரும் வைத்திருக்கலாம் எனக்காக
ஒரு வேறுபாட்டைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்..
முன்பெல்லாம் கவிதைகளை
எடுத்தாண்டு பெருமித்தேன்..
உனக்காக..
இப்போதெல்லாம் எழுத்தாளினும்
பெருமிப்பதேயில்லை...
நீயின்றி!
==============================================================


=============================================================


============================================================

=========================================================


========================================================


============================================================

=============================================================

இப்பொழுதுதான்
மழை பெய்து ஓய்ந்திருக்கிறது
கண்ணுக்கு முன் ஓர் ஓடை
பொங்கிச் சிரித்தபடி பாய்கிறது
குட்டை ஒன்று
வெடித்திருக்கும் மண் மடங்களுக்குள்
அவசர அவசரமாக நீரைச் சேமிக்கத் தொடங்குகிறது
எழுந்து சிரிக்கத் தொடங்கும் புல்வெளிகளின்
புன்னகைகளைச் சிதைத்தவாறு
மிதித்து நகர்ந்துவரும் அசுரக் காலணிகள்
கைகளில் சுமந்திருக்கும் கழிவு மூட்டைகளைப்
பார்த்தபடியே ஒரு கண்ணீருடன் கலைகின்றன
தரை மேகங்கள்

#முனியாண்டி_ராஜ்.
06102019 
=============================================================


==••==••==••==••==••==••==••==•
வண்ணக் கலவைகளுடனும்
கூந்தலென நீளும் தூரிகையுடனும்
ஓவியப் பலகைமுன் நிறுத்தியிருக்கிறாய்
கசக்கி எறியப்பட்ட தாள்களில்
என் இயலாமை தெரிகிறது
கருமையேறிய வெண்சுருட்டுத் துண்டுகளில்
என் விரக்தி கசிகிறது
ஆறிப்போன காப்பிக் கோப்பைகளில்
நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை
வண்ணங்களில் குழைத்து எழுதுகிறேன்
இன்னும் சில நிமிடங்களில்
தரையின் ஒரு மூலையில் இது கிடக்கலாம்
அருகிலுள்ள சாய்வு நாற்காலியில்
என்னைக் கிடத்தி விழிகள் மூடுகிறேன்
தொடர்ந்து என்னைத் தேய்த்தெடுக்கும்
வார்த்தைகளில் செவிகள் அடைக்கிறேன்
விழிகளுக்குள் விழும் வார்த்தைகளில்
நம்பிக்கை இன்னும் உடைபடுகிறது
வெண்மையைக் கருமையாக்கும் மைகளைத்
தூரத் தள்ளி விடுகிறேன்
உனக்கான தேடுதலை முடிக்கும் நேரத்தில்
எனது இந்த ஓவியமும்
முழுமை பெற்று விடலாம்
ஏன் ... நானும்கூட!

01102019
============================================================


============================================================


மீறல்
==••
மண்ணை மீறித் திமிறிக்
கொண்டு வருகிறது வேர்
கிளைகள் மீறிய விழுதுகளில்
பூமிக்குள் ஆழ இறங்குகிறது ஆலம்
திசைகளற்ற இரவுகளில்
பெருமூச்சுகளை விழுங்கத் துடிக்குது மனம்
தூக்கி வீசிய விதையொன்று
திருட்டுத்தனமாய் முளைத்து வருவதுபோல்
எங்கோ ஒரு மூலையில்
துளிர்விட முனைகிறாய்
மேகங்களைப் போர்த்திக் கொண்டு
கருமைகளைக் கடினமாக்குகிறது வானம்
இறங்கிவர மறுக்கும்
ஒரு வறட்டுப் பிடிவாதத்தின் முனையில்
என்னைத் தொங்க விட்டிருக்கிறாய்
எல்லைகளின் கோடுகளில்
பாம்பென மெதுவாய் ஊர்கிறது மீறல்
30092019

=============================================================


=============================================================


==••==••==••==••==••==••=
வெட்டி முறிப்பதற்கும் விசனப்படுவதற்கும்
அப்படி எதுவும் இல்லை
புகைமூட்டங்களுக்குள் மூழ்கிப் போயிருக்கிறது பூமி
சிவந்த முகத்துடன் சினத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது மேகங்கள் மறந்த சூரியன்
விடுமுறை களிப்பில் காலைத் தூக்கம்
கொஞ்சம் நீள்கிறது
குழந்தை கைகளுக்கு மாறிய
தொலையியக்கிகள் அடுத்த கேலிச் சித்திரத்துக்குக் காத்திருக்கின்றன
எவனோ வைத்த தீயில்
எங்கோ கருகும் காடுகளுக்காக
சாம்பல் நிறங்களில்
இங்கே மூக்கினுள் வெப்பம் நுழைகிறது
கண்களை அடிக்கடி கசக்கிக் கொண்டே
தூசுகளை வைது கொண்டிருக்கிறேன்
மூக்குக் கவசங்களின் அவசியங்களை
காற்றில் தவழ விட்டுக் கொண்டிருக்கிறான்
எவனோ ஒருவன் வானொலியில்
நாளைக்கும் பள்ளி இருக்குமாவென
கைப்பேசிகளுக்குள் ஜாதகம் தேடுகிறவர்களின் வரிசை
நீல வானமாய் நீண்டு கொண்டே போகிறது
எரிந்து கொண்டிருக்கும் காடுகளின் ஜூவாலைகளில்
ஏதாவது ஒரு மிருகம் அழிந்து கொண்டிருக்கும்
பச்சைகள் கருகி கருமை பூண்டிருக்கும்
நமக்கென்ன....
மூக்குக்கவசங்களுக்குள்
நம் நிறங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வோம்
அடுத்த பரம்பரைகளுக்காக!
23092019
==============================================================


==••==••==••==••==
ஒரு நிறுத்தத்தின் முன்
பேருந்து நிற்கிறது
அதுவரை அமைதியாக இருந்த மேகங்கள்
கொஞ்சம் துளிகளைச் சிந்த விட்டுப் பார்க்கின்றன
மரங்கள் கிளைகள் கைகோர்த்து
ஒரு குடையினை உருவாக்குகின்றன
அவசர அவசரமாக இறங்கி வருகிறாய்
தலையில் போர்த்தியிருந்த துணியை உருவி விட்டவாறே
காற்று உரக்கச் சிரிக்கிறது
மரமொன்றில் அமர்ந்தவாறே......
ஒரு கைக்குட்டைக்குள் ஒளிய முயன்று
தோற்றுப் போகிறேன்
பேருந்து ஒருமுறை பொருமிவிட்டு நகர்கிறது
கைக்குட்டையோடு நானும் நனையத் தொடங்குகிறேன்
உன் பின்னாலேயே
ஓடத் தொடங்கும் மழையோடு
23092019
===========================================================

#இடைவெளிகள்
==••==••==••==
ஓர் இடைவெளி
உன்னையும் என்னையும் இறுக்கிப் பிடித்து
வைத்திருக்கிறது
அறையின் மூலையில்
வலமும் இடமும் ஆடும்
திரியின் மீதே உன் பார்வைகள்
மனம் கொந்தளிப்பதைப்
பெருமூச்சுகள் காட்டிக் கொடுக்கின்றன
நகர்ந்து நகர்ந்து உன்னைத் தொட முயலும்
விரல்களைச் சட்டென இழுத்துக் கொள்கிறேன்
விசைகள் தட்டப்படாததால்
மின்விளக்குகள் விழி மூடி கிடக்கின்றன
பார்வையைத் திரிகளின் பக்கம் நகர்த்துகிறேன்
அசைவு என்னைவிட அதிவேகமாகிறது
ஓர் இருள்
உன்னையும் என்னையும் கடந்து
வேகமாய் செல்வதுபோல் உணர்கிறேன்
இறைந்து கிடக்கும் வார்த்தைகளை அள்ளிக்கொண்டு
ஜன்னல் இடுக்குகளில் மறைகிறாய் நீ!

#முனியாண்டி_ராஜ்.
22092019 
=========================================================

============================================================

==========================================================

#’O’_இன_இரத்தம்
==••==••==••==
அவனை எத்தனை ஆண்டுகள் தெரியும்
எனத் தெரியாது
கணக்கிலெடுக்க முடியா ஆண்டுகளென
கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்
என் வீட்டு ஐந்தடிதான் அவனுக்கும்
பேதங்கள் நுழையாக் காலமது
அறிமுகக் கல்விகள் முடிந்தபின்
எங்கள் கல்விச் சாலைகளும் பிரிந்தன
அவனைவிட சிறந்த தேர்வுதான் எனக்கு
என்ன செய்ய
தோலின் நிறத்தில் அவன் தேர்ந்திருந்தான்
கணக்கெடுக்க முடிந்த ஆண்டுகள் கழித்து
அவனைப் பார்க்க நேர்ந்தது
அரசியல் கூட்டமொன்றில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்
இனங்களின் பேதமையிலும்
மதங்களின் மயக்கத்திலும்
அவன் மனம் முழுக்க நனைத்திருந்தது
உரைகளின் இறுதியில் இறுக்கியணைத்தான்
ஐந்தடி உறக்கங்களை நினைவு கூர்ந்தான்
நட்பென்னவே கொஞ்சம் விலகியே இருந்தது
புறக்கணிப்பொன்றே சமயங்களைக் காக்குமென்றான்
தீண்டாமை மட்டும்தான் இனங்களின் அரணென்றான்
சிறுவயதுகளில் இல்ல பேதமன்றி
உணவுண்டதை நினைவில் செலுத்தினேன்
பாவங்களைத் தற்போது கழுவிக் கொண்டிருப்பதாய்க் கூறினான்
ஒற்றை உணர்வினில் உளரிக் கொண்டிருந்தான்
அவனின் முருங்கை மரத்தின் உச்சிக் கொம்பில்
மதம் அரியணையிட்டு அமர்ந்திருந்தது
காலம் கரைத்த ஆண்டொன்றில்
படுக்கையொன்றில் பார்க்க நேர்ந்திருந்தது அவனை
தன்னிலையற்றவனின் உடலுக்கு யாருடைய குருதியோ
ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது
குருதிப் பையின் சாரம் ஆய்ந்தேன்
‘O’ என்று மட்டும் எழதப்பட்டிருந்தது
நினைவு தெளிந்தவுடன்தான் கேட்க வேண்டும்
16092019
==============================================================

============================================================

ஒற்றைத் துளியின் மீது
அமர்த்தியிருக்கிறாய் என்னை
இருதலைக் கொள்ளி எறும்பாய்
என்னை வாசிக்கத் தொடங்குகிறேன்
உடைந்து விழுவதைக் காண
கண்கள் குளமெங்கும் மொய்த்திருக்கின்றன
ஊசிமுனை வார்த்தைகளை
பூதல்களுக்குள் செருகிப் பார்க்கிறார்கள்
ஒரு வார்த்தையின் வறட்டுப் பிடிவாதம் வேண்டி
கரைகளுக்குள் நிற்கின்றன உன் விரல்கள்
யார் யாரோ எழுதிவிட்டுப் போன
முடிவுரைகள்தாம் என்று
கூட்டம் கலையத் தொடங்குகிறது
நீர்க்குமிழி உடைய மறுத்து
இன்னொரு குமிழியில் இணைய விரைகிறது
13082019
========================================================


==••==••==
சாலையோரமாகக் கேட்பாரற்றுக் கிடந்தது
அந்தச் சொல்
வருடங்கள் மேய்ந்த விரக்தி
அதன் முகங்களில்
கோடுகளை வரைந்திருந்தது
புயலுக்கும் மழைக்கும் சிக்கிய புதராய்
நரைகளிலும் குறைகளிலும் சிதிலமடைந்திருந்தது
நடந்து வந்த களைப்பினில்
கால்கள் வலுவிழந்து சூம்பியிருந்தன
ஒரு கவிதையின் எச்சமாகவோ
காவியத்தின் மிச்சமாகவோகூட
அது இருந்திருக்கலாம்
அதன் மௌனம் இப்போதும் தீண்டப்பட்டுதான்
வருகிறது
சோகங்களின் சாரங்களில்
எவனோ வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
எவளோவாககூட இருக்கலாம்
வார்த்தைகளைப் பார்த்து வீசுங்கள்
நீங்களோ நானோ வீசிய
சொல்லாகவும் இருக்கலாம் அது
12092019
=============================================================
உச்சந் தலையில்
சொட்டுச் சொட்டாய் இறங்குகிறது
மழை
நாக்குகளைப் பிடுங்கிவிட்டு
பேசச் சொல்லி அழைக்கிறீர்கள்
இதுதான்
எங்கள் மழையென சிரித்துக்கொண்டே கூறுகிறீர்கள்
உங்கள் சிரிப்புக்கெல்லாம்
நாங்கள் மறுசிரிப்பு சிரித்தாக வேண்டும்
உங்கள் மொழிகளில்
எங்கள் மொழிகளை ஓதிக் கொள்கிறீர்கள்
ஐக்கியமென அழகாகத்தான் கூறுகிறீர்கள்
01092019
===============================================================

===============================================================

=============================================================


கனவுகளுடன்_ஒரு_பயணம்
==••==••==••==••==••==
என் கனவு கொஞ்சம் வேறுபட்டது
நீங்கள்
மேகங்களுக்குள் கைகள் விட்டுத் துழாவும் வேளை
நான் மேகங்களைக் கலைத்துப் போட்டுச் சிரிப்பேன்
வானவில்லை பல துண்டுகளாக ஒடித்து
மேகங்களுக்குக் கொம்பு வைத்து விடுவேன்
நீங்கள் இரு கைகள் உயர்த்தி
மழையை இரசிக்கும் வேளை
நான் மழையோடு மழையாக
மண்ணில் பரவ முயற்சித்துக் கொண்டிருப்பேன்
நதியேதும் ஒன்றில்
உங்களுக்குத் தெரியாமல் மிதந்திருப்பேன்
இதைக் கனவென்றே சொல்லுங்கள்
நீங்கள்
தோல்களுக்குள் நிறங்கள் பிரிக்கும் வேளை
நான்
நிறமற்ற ஒரு வனத்தில் மிதந்திருப்பேன்
எரிந்து கொண்டிருக்கும் பொய்கையொன்றில்
என் கண்ணீரை இறைத்துக் கொண்டிருப்பேன்
பார்ப்பதையெல்லாம் பணமாக்கத் துடிக்கையில்
துடுப்பில்லா ஒரு தோணியில்
நீண்ட தூரம் சென்று கொண்டிருப்பேன்
முகமூடியற்ற முகவரிகள் தேடி!
27082019
=============================================================

========================================================

சரிவுகளில் விழுந்தெழுந்து
தப்பித்து வருகிறது ஒவ்வொரு தடவையும்
கால்களை வாருவதற்கு
பள்ளங்களில் பதுங்கியிருக்கின்றன துரோகங்கள்
தன்முனைப்பு வாசகங்களில்
சலவை செய்யப்பட்டே வந்தாலும்
அதிர்வுகளில் விழித்தெழுகிறது மனம்
கைகொடுக்கும் மனிதர்களின் நகக்கணுக்கல்களில்
ஒளிந்திருக்கின்றன கண்ணுக்குத் தெரியாத
நாகங்கள்
எழ முடிந்த தூரத்திலிருந்தும்
அச்சங்களுக்குள் சிக்கியிருக்கின்றன தலைகள்
26082019
=============================================================


=============================================================

 ===============================================================
 ========================================================
 =========================================================

==============================================================
==••==••==
என் முகம்
பல சமயங்களில் பிறதாக்கப்படுகிறது
கண்ணாடிகளில் பார்க்கும் போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
என்னை ஏமாற்றிக் கொண்டே வருகிறது
என் முகத்துக்கு
பலர் வெள்ளையடிக்கிறார்கள்
மகிழ்ச்சியில் மிதந்து போகிறேன் கண்ணாடிமுன்
சிலர் கருமைகளைப் பூசிச் செல்கிறார்கள்
சில்லுகளாய்த் தெறித்து விழுகிறது கண்ணாடி
என்னை நான் ஆழ ஊடுருவும் நேரம்
ஒரு பொய்மையில் சிரிக்கிறது
பொய்கள் பல கூறி
என்னைத் திருப்திப்படுத்த முயல்கிறது
கண்ணாடிகளைக் கையோடு வைத்து அலைவோர்முன்
என் கண்ணாடி பகடியாக்கப்படுகிறது
பார்ப்போரின் பார்வையை வைத்தே
நான் தீர்மானிக்கப்படுவதாக
கண்ணாடி புன்முறுவலுடன் கூறுகிறது
என்னை நான் பார்த்தே அதிர்ச்சியாகிறேன்
வார்த்தைகளால் சரம் தொடுக்கும் பலரை
சட்டென வீசி எறிகிறது அது
பொய்மையிலிருந்து வலுக்கட்டாயமாகப்
பிரித்தெடுக்கும் முயற்சியில் தப்பிக்க
இருள்களில் ஓடி ஒளிகிறேன்
கண்ணாடிகளில் இருந்து விடுபட
விளக்கை அணைக்கிறேன்
சுற்றியுள்ள மனிதர்களை மாற்ற இயலாது
எப்படியாவது
கண்ணாடியையாவது மாற்ற வேண்டும்
19082019
============================================================

இன்று
அனைத்துலக புகைப்பட தினமாமே
எதைப் பதிவது...
தூசுதட்டிய பழைய நினைவுகளில்
ஒவ்வொன்றாய் எடுத்து
புரட்டிக் கொண்டே வருகிறேன்
... புல்வெளியில் மடிசாய்ந்தபடி
... ஒற்றைக் குடைக்குள் ஒடுங்கியபடி
... முதல் வேட்டியில் நான் வெட்கி
... சேலையில் நீ சிலிர்த்து
... பொங்கலில் விரலும் படாபடி
... முதல் சினிமா மறந்தபடி
... தங்க கடற்கரையில் பாதம்மறந்து
... இத்யாதி இத்யாதி
எதுவும் மனம் வழுக்கியே
செல்கிறது....
ஒருசில கண்ணீருடன்
நீ பிரிந்த
அந்தக் கடைசி படத்தோடு!
========================================================

 ============================================================


==========================================================

==••==••==••==••==••==••=
அதற்கு ஏதாவது பெயர் வைத்திருக்கலாம்
யாராவது
ஒவ்வொரு கல்லாலும் எறியப்பட்டு
காயங்கள் விரிந்துகொண்டே இருந்தன
வார்த்தைகளால் மருந்து தடவியவர்கள்
புன்னகையால் கனிகள் பறித்தனர்
கல்லடிகள் என்னவோ
வேர்கள்வரை விழ ஆரம்பித்தன
இப்போது
அவ்வப்போது சிலர்
மரத்தின் குச்சிகளில் முதுகு சொரிந்து
இளைப்பாற குட்டித் தூக்கம் போட்டனர்
மரத்தினடியில்
கல்லடிபட்ட மரம்
பாலமாய் ஆற்றின் மடிக்கு விழுந்த பின்னும்
கற்களைச் சுமந்தோர்
வேறொரு மரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
============================================================
 ========================================================

===============================================================
அவன் மரித்துதான் விட்டான்
===•••===•••===•••===
அவன் மரித்து விட்டதாய்தான்
வந்து சொன்னார்கள் ..
சாரை பிடித்து நின்ற கூட்டமும்
சாலை மறித்த வாகனங்களும்
அவன் வாழ்க்கையை
எடுத்துக்கூற முயன்றன..
கூட்டம் விலக்கி முகம்பார்க்கும்
கூட்டம் என்னையும் இணைத்தது..
பூக்களுக்குள் அவன் முகம்
காணாமல் போயிருந்தது ....
அவனைப் போலவே!
'அண்ணன் எப்படி இருந்தாரு'
துக்கமின்றிச் சிரித்த கூட்டம்
மதுபாட்டில்களில்
மனம் தொலைந்திருந்தது..
'வாணவெடி தெரிக்கனும்ல...'
எக்காளச் சிரிப்புடன்
எதையோ தேடித்தேடிப் பார்த்து
மீண்டும் மூழ்கியது ..
மாலைகள் போட இடமின்றி
இன்னும் கொஞ்சம் ஒதுங்கியது
சவப்பெட்டி...
'போடலனா பெரிய குத்தமா போயிடும்'
கிசுகிசுத்த பெரிசின் வாய்
சட்டென மூடப்பட்டது....
பிணங்கூட வாள் எடுக்கும்
பார்த்து....
வன்முறை வாடையுடன்
நாளைக்கே பிணம் புறப்பட்டுவிடும்
இன்னொரு விதை விதைத்து!!
===============================================================

============================================================
==========================================================
==••==••==••==••==••==••==
தோல்களின் நிறங்களில்தான்
அவை தரம் பார்க்கப்படுகின்றன
தொடக்கக் கோடுகளிலும்
முடிவின் விளிம்புகளிலும்
நிறங்கள் பூசப்பட்டே
வெற்றிகள் பரிமாறப்படுகின்றன
இறுதிக் கோட்டைத் தொட்டவன்
நிறமற்றவனாகவே பிரிக்கப்படுகிறான்
நிறமாறிய தோல்களின் அந்நியத்தில்
டக்கென மூடிக்கொள்ளும் கதவுகளிலும்
படாரெனத் திறக்கும் வாசல்களிலும்
நிறமெங்கெங்கும் வகுக்கப்படுகிறது
எழுதப்படாத சட்டங்களில்!
கதவுகளைத் தட்டித்தட்டிப் பார்த்து
நிறமொன்று வெளிறித் திரும்புகையில்
இன்னொரு நிறம்
தொலையியக்கியால் திறக்கப்படுகிறது
விண்ணப்பங்கள் சுமக்கும் சிறகுகள்
நிறம் பார்த்து முறிக்கப்படுகின்றன
அவர்கள் வெண்புறாவைச்
சமாதானச் சின்னமாகவே வைத்திருப்பர்
கோட்டைத் தாண்டும் புறாக்கள்
நிறமாறித் துப்பப்படும் வெளியில்
நிறங்களேற்றுப் பறக்க முடியா தருணங்களில்
கருணைக் கொலைகளிலும் புறாக்கள்
நிறமற்று வாழ்வதாய் நீங்கள்
பயணம் போகையில்
ஓர் எல்லைக் கோட்டில் அதிர்ச்சியாகிறீர்கள்
வானம் நீலம்தான்
அதைத் தூர நோக்கும் வரையில் ..
நிறம்தான் எல்லாமென ஏற்பின்
உங்கள் பணங்களால்
வேறு தேசங்களில் நிறம் மாறுகிறீர்கள்
இன்றும்
வார்த்தைகளில் நிறம் பூசிய
முகம் மறந்த தலைவர்கள்
அலறிக் கொண்டேதான் இருக்கிறார்கள்
இந்தச் சந்தைகளில்
நிறங்கள் விற்கப்படவில்லை என!
=========================================================
 =======================================================
==========================================================

===============================================================

கொலைகளத்தில் சில உண்மைகள்..
===•••===•••===•••===•••===•
பெரும்பாலும் எல்லோரும்
அப்படித்தான் இருந்தார்கள்
முகநூல்களின் பதிவுகளிலும்
புலனங்களின் பிதற்றல்களிலும்
மனதைக் குருடாக்கி
விழிகளையும் செவிடாக்கியிருந்தார்கள்..
பத்திரிக்கைகள் பணங்களைப்போர்த்தியே
பொய்களை நடமாட விட்டிருந்தன..
அலைபேசிகளின் அதட்டல்களில்
நன்றாகவே வணிகம் ஆயிருந்தனர்
கண்தெரிந்த குருடர்கள்
குரல்களில் தேன்ஊற்றி
செவிகளை நக்கிக் கொண்டிருந்தவர்களிடம்
மனிதங்கள் நன்றாகவே
விலை போயிருந்தன....
இரக்கங்களில் சுரந்த பால்களில்
சப்புக்கொட்டியே நாக்கில்
சுகமேற்றிக் கொண்டிருந்தனர் சிலர்
நுனிநாக்கு வியாபாரிகள்
வார்த்தை வியாபாரங்களில்
அத்தனை பேரையும் வாங்கியிருந்தனர்
மூளையை மலடாக்கி விட்டு..!!
நேர்வழி நியாயங்கள்
நிர்ப்பந்தமாய் இழுக்கப்பட்டும்...
ஏதோவொரு இடுக்குகளில்
வெளியேற முயன்ற உண்மைகள்
குரல்வளை நெறிக்கப்பட்டு
குற்றுயிராய் கிடக்கின்றன..
==========================================================

==••==••==••
காத்திருத்தல் ஒரு வரம்
உனக்கான காத்திருத்தலில்
புல்வெளிகளில் கொஞ்சம் நடந்தேன்
காலணியின்றி
சிறுவயதினில் நடந்த ஓர் உணர்வு
உடலெங்கும் நடந்து சென்றது
பாதங்களில் படிந்த ஈரங்கள் சிறிதில்
உனக்கும் எனக்குமான வாதங்களின்
தேவையற்ற வார்த்தைகள்
மனதை இரணப்படுத்திச் சென்றது
காத்திருத்தல் பாவமன்று
சில வார்த்தைகளை
உனக்காக எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தேன்
ஒப்புவிக்கும் பயிற்சியை
ஒவ்வொரு மரத்திடமும் கேட்டுக் கொண்டிருந்தேன்
இலைகள் அசைவினில்
சில கவிதைகள் கற்றேன்
வேரின் வீம்புகளில்
கொஞ்சம் துணிச்சலைப் பார்த்தேன்
காத்திருத்தல் கொலையன்று
கொள்கைகளற்ற ஒரு பொழுதை
எனக்கது போதித்துக் கொண்டிருந்தது
வாதங்களின் தோல்விகளைக்
காற்றோடு சுவாசித்துக் கொண்டிருந்தேன்
விடாப்பிடிகளின் வீரியங்களை
அஃது என்னில் கலைத்துப் போட்டது
காத்திருத்தல் கொடூரமன்று
அது ஒரு வரமாக
என்னுள் ஊன்றப்பட்டது
உனது சிரிப்பின் அசைவுகள் ஒவ்வொன்றையும்
மெல்ல அசை போட்டுக் கொண்டிருந்தேன்
உன் புன்னகைகள்
என்னோடு நெருங்கிப் பேசின
உன் உதடுகளின் சிலிர்ப்பனைத்தும்
நான் கிரகித்துக் கொண்டிருந்தேன்
காத்திருத்தல் ஒரு சுகம்
உனக்கான காத்திருப்பில்
உலகத்தோடு நானும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
திரும்பவும் வராத உன் நிஜத்திற்காக!
05082019
==========================================================
 =============================================================
இன்றும்
ஒரு வார்த்தையை ஒளித்திருந்தாய்
நேரங்களைவிட வேகமாகத் துடித்த
உன் இமைகளில்
அகராதிகளைத் தேடி நுழைந்த போது
வழக்கம் போலவே
கொஞ்சம் நாணத்தோடும்
நிறைந்த திமிரோடும்
விடை பெறுகிறாய்

==============================================================

 ========================================================

============================================================
 ===============================================================
சன்னல்களுக்குள்ளேயிருந்தே
எட்டிப் பார்க்கும் உங்களிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ளத்தான்
ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது
01072019
============================================================
இரவு
தன் வெளிச்சங்களையெல்லாம்
அணைத்த பின்
ஒற்றை மெழுகுவர்த்தியில்
உன்னை நான் தேட வேண்டும்
01082019
===============================================================


=============================================================
சில வார்த்தைகளைக்
கையில் வைத்திருக்கிறேன்
சில வார்த்தைகளை
மனதில் வைத்திருக்கிறேன்
கையில் உள்ள வார்த்தைகளை
அள்ளியள்ளிக் கொடுக்கும் போதெல்லாம்
வெட்கப்படும் வார்த்தைகளை
மனதிலேயே முடங்கிக் கொள்கின்றன
31072019
=============================================================

==••==••==••==••==••==
ஒவ்வொரு முறை கரையை மோதும்போதும்
என்னை வேண்டிச் செல்வதாகவே நினைக்கிறேன்
உனது திரும்பல்கள்ஒவ்வொன்றிலும்
ஆரத்தழுவி பிரியுங்கால்
அலைகளாய் உனது கரங்களின் தழுவல்களில்
மெல்லத் தேய்கிறேன் நீ உணராமலேயே..
பாறைகளுக்கேது உணர்ச்சியென முணுமுணுப்புடன்
என்னை விட்டுத் தூரச் செல்வதாய்
நுரைகளுடன் பேசுவதாகவே
கழிந்து விடுகிறது என் பொழுது
30072019
=======================================================

=====================================================



••==••===••==••==••==••
முறிந்து விழும் கிளைகளிலும்
வலிந்து நுழையும் வளிகளிலும்
விழிகள் விபத்துக்குள்ளாவதைத்
தடுக்க இயலவில்லை இமைகளால்
கோரப் பிசாசுகள் விழியோரங்களில்
அமர்ந்து நகர மறுக்கின்றன
நெஞ்சுயர்த்தி நடப்பினும்
சிரந்தாழ்த்தி நடப்பினும்
எப்படியோ நிகழ்ந்து விடும் விபத்துகள்
சிரசுக்குப் பின்னால்
குருதிகள் நனைந்த குறுவாளோடும்
நாக்குத் தடவிய விடங்களோடும்
நகர்ந்து சென்று நகைக்கிறார்கள்
தோண்டியெடுத்தும் வெற்றுக் கிண்ணங்களில்
அறிவினைச் சுமந்தவர்கள்
வெற்றிக் கிண்ணங்களில்
சுடுமூச்சைச் சொரிந்து கொள்கிறார்கள்
ஏந்தும் கைகளை குறுவாளில் நனைக்க
நாக்கினால் தடவுகிறார்கள்
எப்படியோ நடந்து விடுகின்றன
அவர்கள் எதிர்பார்த்த விபத்துகள்
உயிரை உரச முடியாதவர்கள்
உணர்வுகளில் பேரலைகளை எழுப்பிவிட்டு
உதடுகளை உலர வைத்துக் கொள்கிறார்கள்
ஒரு குலுக்கலில் அதிர்ந்துவிட்டு
மீண்டும் துடிக்கத் தொடங்குகிறது
இதயம்....
==========================================================
==================================================

 ===========================================================
=============================================================
==••==••==••==••==
ஒரு நள்ளிரவின் ஈரமது
பச்சை விளக்கு மாறியும்
ஒரு சிவப்பு விளக்குக்காய் காத்திருந்தேன்
பரபரப்பான வாகனங்களைக் கழுவிய சாலை
ஒரு வியப்புடன் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது
இங்கேயே இறங்கிக் கொள்கிறேன் என்றாய்
இருட்டில் நீ மறையும்வரை
என் பார்வைகள் மரணித்துப் போயிருந்தன
நீ உதிர்க்க வேண்டிய ஓரிரு வார்த்தைகள்
இருக்கையில் உதிர்ந்திருந்தது போல்....
உன்
உதடுகள் உதிர்க்காமல் விட்ட
வார்த்தைகளில்தான்
நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்
இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறேன்
24072019
===============================================================

••==••==••==
மறுபக்கங்கள் என்பவை பல சமயங்களில்
மர்மக் கதைகள் போல
அவ்வளவு எளிதாக யாருக்கும்
புரிந்துவிடப் போவதில்லை
மேகங்களுக்குள்ளிலிருந்து எட்டிப்பார்க்கும்
நிலவுக்கதிர்கள் போலவோ
மறைந்தும் இளம் வெப்பத்தில்
வியர்க்க வைக்கும் சூரியக்கதிர்கள்
போலவோ தன்மையற்றுப் போவதில்லை
உங்கள் முன் ஒரு புன்னகையை
அது மிதக்க விட்டே செல்லும்
கானல் நீரென கால் வைக்கையில்
களவு போகலாம் அத்தனை நம்பிக்கைகளும்
மறுபக்கங்கள் என்பவை
எதிர்பாரா நேரங்களில்
திடீர் தாக்குதலை நிகழ்த்திவிட்டு
உங்களை நிலைகுலையச் செய்யும்
கோரப் பற்களால் கழுத்துகளின்
தடங்களில் தாகம் தணிக்கும்
வாளின் நுனியில் உங்கள் இதயமும்
கழட்டி எடுக்கப்படும்
அதிர்ச்சியில் உங்களை உறைய வைத்து
அகங்காரங்களில் சிரிக்கும்
மறுபக்கங்கள் தொடரும் பாதைகளில்
மனங்களைப் பழக்கின்
ஏமாற்றங்கள் சிலுவைகளில்
அறையப் போவதில்லை
நொறுங்கும் நம்பிக்கைகளைச் சேர்க்கும்
சிரமங்கள் அண்டப் போவதில்லை
வெளிச்சமற்ற இரவுகளுக்குள்
விழிகளைப் பழக்கப்படுத்திக் கொள்வதுபோல்
எதிர்பார்ப்புகள் அகன்ற வெளிகளில்
வெறுமைகளில் நடப்பதெனில்
நீங்களும்
கொஞ்சம் பிழைத்துக் கொள்ளலாம்
ஒரு மாபெரும் அதிர்விலிருந்து!
========================================================
===•••===•••===•••==•••===••
கிணறுகளுக்குள் எட்டியெட்டிப் பார்க்கிறேன்
நீர் பஞ்சமாம் ....
இதயம் வரையா வறண்டிருக்கிறது
கண்ணீர் ?
இஃதெனக்கு எத்தனையாவது நடை ..
காலடி விரல்களை ஒவ்வொன்றாகக் கணக்கெடுக்கிறேன்
நீண்டு கொண்டு போகிறது
கறுப்பும் வெள்ளையுமாய் ஒரு பாதை
இஃதெனக்கு எத்தனையாவது முறை
வாசலில் வீசியெறிந்த தாள்கள்
கசங்கியபடி நனையாமல் இருக்கின்றன
இன்னும் எழுதியபடியே
நீண்டு கொண்டே போகிறது ஒரு வரி
இஃதெனக்கு எத்தனையாவது கவிதை
ஆடைகள் ஒவ்வொன்றாக
மாறிக் கொண்டே வருகின்றன
இன்னும் மாற்றப்படாத ஒரு கோமாளியின்
உடையில் ... உடைகளில் .... உடைந்த படி
இஃதெனக்கு எத்தனையாவது மரணம்
18072019


============================================================

===============================================================


 கறுப்பு வெள்ளைகளுக்குள்
நம் புகைப்படங்களைத் தேடிய போது
திடீரென
வண்ணமயங்களில் அவை
இறக்கை விரிக்கத் தொடங்கியிருந்தன
நாள்குறிப்பின் எஞ்சிய ஓரிரு பக்கங்களில்
வரிகள் சிலவற்றை
அவசர அவசரமாக அலசத் துவங்கியதில்
நனவான வண்ணங்களைவிட
கறுப்பு வெள்ளைகளின் நிஜங்களில்
நம் நாள்கள் அழகாக நகர்ந்து கொண்டிருந்தன
16072019
============================================================
#கானல்_உறவுகள் ==••==••==••==• இன்று வித்தியாசமாக கொஞ்சம் வெயிலுடன் பேசிக்கொண்டிருந்தேன் மேகத்துக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்த மழைத்துளிகளுக்கு அப்படியொரு நகைப்பு உச்சிவரை இறங்கிய மேகம் ஒரு வானவில்லை வரையத் தொடங்கிய போது தூறாத ஒரு மழைக்குள் முற்றிலுமாக நனைந்திருப்பதை உணர்கிறேன் எனக்கும் வெயிலுக்குமான உறவு அப்படியேதான் இருக்கிறது #முனியாண்டி_ராஜ். 13072019
========================================================
==========================================================

=============================================================
 ===============================================================

======================================================================

=====================================================================

==================================================================

===•••===••
இத்தோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்றாய்
உயரமாக பறந்து கொண்டிருந்த பட்டம் ஒன்று
மரக்கிளையில் மாட்டியிருக்க வேண்டும்
ஒவ்வொரு மரமாக அண்ணாந்து தேடுகிறேன்
புலப்படுமளவுக்கு அவை கண்களுக்குச் சிக்கவில்லை
மீண்டும் உன் வாசல் திரும்புகிறேன்
காரணங்களில் நம்பிக்கையில்லை என்கிறாய்
நீ
காதலில் நம்பிக்கையுண்டு என்கிறேன்
நான்
ஒரு வறட்டுப் புன்னகையில்
உதடுகளின் மடிப்பில் ஒளிகிறாய்
பேசாத ஒரு பட்டாம்பூச்சி
சட்டென நழுவுகிறது காற்றை விட்டு
தலைக்கு மேல் பட்டம் மட்டும் பறக்கிறது
கயிறு எங்கேனும் அறுந்திருக்க வேண்டும்
03072019
========================================================
==========================================================

======================================================


=======================================================
==••==••==••==••=••=
அவனை இன்னும் படிக்கவே முடியவில்லை
என்னால்
சில சமயம் மாடாய் தெரிகிறான்
சில சமயம் தேவனாய் மாறுகிறான்
நாயாய்கூட பார்த்திருக்கிறேன்
நாகரீகமறிந்த மாந்தனாகவும் வந்திருக்கிறான்
மிதிவண்டியில் அவன் வீட்டைக் கடக்கும்போதெல்லாம்
என்னுள் நுழைய முயன்றவனைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்
அவனுள் என்னைச் செலுத்தி வாசிக்கும் போதெல்லாம்
வகுப்பறை தாண்டியதும் கழண்டு கொள்ளும் பாடங்கள்போல்
மறந்தே போகிறது அன்றைய நாள்
ஒரு புன்முறுவலில் சில சமயம்
இறுகிய பாறைபோல் சில சமயம்
அங்கிகள் நிறைய வைத்திருக்கிறான்
ஒவ்வொரு தடவையும் ஒவ்வோர் அங்கி
தேவைப்படுகிறது அவனுக்கு
என் வளையங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்
ஏனோ அவன் மட்டுமே
வளையங்களுக்கு வெளியே உள்ளதுபோல்
மிதிவண்டி கடந்த ஆண்டுகளின் நாளொன்றில்
ஒரு காரின் கறுப்புக்கண்ணாடிகளுக்குள்
ஒளிந்தவாறே கடக்கிறேன் அவனை
கார் கண்ணாடிகளின் கறுப்பு அவனைப்
போர்த்திக்கொள்ள
பரவெளியெங்கும் வெளுமையாகிறது
24062019
========================================================


===========================================================

===•••===•••===•••===•••===•
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள்
கலைக்கப்படாமல் இருக்கின்றன
குப்பைகளின்றி வரவேற்பறை
தூய்மையாகவே இருக்கிறது
காற்று கொண்டுவந்து சேர்த்த தூசுகளும்
ஊதுவத்தியின் சாம்பல் துகள்களும் தவிர!
தனக்குப் பிடித்த வகையில்
சிரித்து பேசி அழுது கொண்டிருக்கிறது
தொலைக்காட்சி
கேலிச்சித்திர அலைவரிசைகளின் எண்களும்
மறந்தாகி விட்டது
அளவுமாறிய ஆடைகளும்
அடங்கிப்போய் கிடக்கின்றன
அலமாரிகளுக்குள்..
மூன்றாவது அறைக்குள்
முடங்கிப் போய் கிடக்கின்றன
தலையாட்டி பொம்மைகளுடன்
தொலையியக்கி வாகனங்களும்..!!
பிரித்துப் போட்ட படியே இருக்கின்றன
கட்டி முடிக்கபடாத கட்டடங்களில்
லோகோக்களும்
அழிக்கப்படாத வெண்பலகையின்
அரிச்சுவடிகளும்..!!
ஆங்காங்கே பிரிந்து கிடக்கும்
உள்ளங்கையளவு காலணிகளும்!
தேடிப்பிடித்து வாங்கிய
இயந்திர மனிதன் பொம்மை
கையொடைந்து கிடக்கிறான் மூலையில்
அவனின் ஒரு கண்ணையும்
நீதான் நோண்டியெடுத்திருந்தாய்
உனக்காக வாங்கப்பட்ட
திறன்பேசி மாதிரிகளும்
நிறமாறி போய் விட்டன
முகம் மாறிப்போன முயல்பொம்மைகளில்
நீ பிடித்துத் தூக்கிய காதுகளைத்
தூக்கிப் பார்த்து
மார்போடு அணைத்துக் கொள்கிறேன்
இந்த விடுமுறையிலும்
நீ .....
வரவில்லை!
==============================================================

 ===============================================================

 =========================================================
=============================================================
==••==••==••==••==••==
வார்த்தைகளை வீசி விளையாடுகிறார்கள்
வார்த்தைகள் அழகானவை
பூக்களாய் வீசப்படும்போது
மென்மையாய் மனதைத் தழுவும்
அவை
மலைச்சாரலொன்றின் உச்சியில்
மெலிதாய் இறங்கும் மழைபோல
வார்த்தைகள் வீசி விளையாடுகிறார்கள்
வார்த்தைகள் வலிமையானவை
ஆயுதமேதுமின்றி யானையின் தந்தத்தை
அறுத்து வீசி விடுகின்றன
உள்ளங்களை அறுத்து கூறுபோட்டு
கிழித்து விடுகின்றன
வார்த்தைகளை வீசி விளையாடுகிறார்கள்
வார்த்தைகள் அன்பானவை
அழுகைகளை அவை துடைத்து விடுகின்றன
கண்ணீரிலும் அவை கவிதை செய்யலாம்
உடைசல்களையும் ஒட்டி விடலாம்
உங்களின் இன்னோர் உறவுக்கு
உத்தரவாதம் தருகின்றன
கவனமாக வீசுங்கள்
உங்கள் வார்த்தைகள்
காணொலிகளிலும் குரல் பதிவுகளிலும்
ஆவணங்களாகும்போது
உங்கள் குரல்கூட
உங்கள் குரல்வளைகளை நெரிக்கலாம்
17062019
=======================================================
==================================================

=======================================================

வரைபடங்களுக்குள்
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
எல்லைகளற்ற ஒரு தேசத்தில்
நீயென்னை
மறைத்து வைத்திருப்பதாகச் சொல்லியே
கடப்பிதழ் இன்றி
வான்வெளிகளுக்கு வெளியே
உலாவிக் கொண்டிருக்கிறாய்
16062019
===========================================================

காலம் கடந்த மனிதர்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கடந்து கொண்டே போகிறார்கள்
முன்னும் பின்னும்
வலதும் இடதும்
முகங்கொடுத்தும் கொடுக்காமலும்
ஏதாவது ஓர் அவசரத்தில்.....
மனிதர்கள் இல்லா உலகம்போல்
வெறுமனே நகர்கிறது
காலையும் மாலையும்
உணவென்று ஒன்று
எப்படியோ வயிற்றில் விழுந்து
ஆசன வாயில்களில்
வெளியேறி விடுகிறது......
அனைத்தும் கழிந்து
அடங்கி ஒடுங்கி...
மனிதம் தேடும் நேரம்
காலம் இலக்கவியலில்
புதைந்து போகிறது...
======================================================

==••==••==••==••==
மரங்களில் பின்னிக் கொண்டிருக்கும் கொடிகளை
வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிகிறார்கள்
பூமியிலிருந்து துரத்தியடிக்கப்படும் வேர்களில்
பச்சையங்களில் கலந்து ஓடுகின்றன செவ்வாறுகள்
உச்சாணிக் கொம்பொன்றில் குரங்கொன்று
குட்டிகளோடு நிலைகுத்திப் போயிருக்கிறது
புதுமனை புகுவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்தவாறே
வனங்களின் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது வன்முறை
அகன்ற கைகளுடன் அரக்கனொருவன் அடவி நுழைகிறான்
கைகளுக்கெட்டியதும் கால்களுக்கெட்டியதும்
பச்சை நிறங்களில் சகதி கலக்கின்றன
ஏதுமறியா பறவைக் குடும்பமொன்று
கூட்டைத் தேடிவாறு வியப்போடு பறக்கிறது
பறக்கவும் ஓடவும் திராணியற்ற வனக்குழந்தைகள்
இருப்புச் சக்கரங்களில் இரையாகிப் புதைகின்றன
நெடுதுயர்ந்த மரங்கள் வானத்திற்குக்
கண்ணீருடன் விடை கொடுத்து தலை சாய்கின்றன
ஏரிகளை விட்டு வெளியேற இயலாமல்
மரணித்து போகின்றன ஓடைகள்
குனிந்த மரமொன்றின் நிழலில்
செடிகளுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கும்
மனிதனில்
மௌனமாக அழுகின்றது மனம்
12062019
======================================================


==========================================================
==••==••==••==••==••==••==•
தகரக் கூரைகளில் தடதடவென
இறங்கி ஓடும் மழையோசைகளை
இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை
எப்படித்தான் அடைத்தும்
ஏதேனும் ஓர் ஓட்டைவழி எட்டிப்பார்க்கும்
கதிர்களின் திருட்டுப் பார்வைகளை மறந்தும் நாளாயிற்று
படபடவென பலகை சன்னல்களை
அறைந்து செல்லும் காற்றின் கரங்களும் மடிந்துவிட்டன
இளகிய குளிர்களை முதுகெலும்புகளில் செருகிய
இரவுநேர நிலாக்கள் தெரியவில்லை
அத்தனை வீட்டுக் கதைகளையும்
அலசியெடுத்த ஐந்தடிகள் குறுகிவிட்டன
ஒற்றை பாய்தனில் கால்கள் பின்ன
படுத்துறங்கிய நட்பின் உறக்கங்களும் கலைந்துவிட்டன
நடுநிசியில் குதிரைமேல்
காவல் தெய்வம் உலாவரும் என்ற பயங்களின் சொற்களும் மறந்துவிட்டன
பால்யங்களைத் தொட்டுப் பேச
அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில்
மீண்டும் நடந்துவிடுகிறோம் செம்மண் சாலைகளில்
03062019
=============================================================

=======================================================

=========================================================

=====================================================























==••==••==••==••==••==••==••=
இப்போது ஏதேனும்
மலை பிரதேசமொன்றில் அது அடங்கியிருக்கலாம்
மரமேதுமற்ற ஒரு வனந்தேடி சிறகுகள் உடைய பறக்கும்
அந்தப் பறவையைத்தான் நானும் தேடுகிறேன்
பறவையிட்ட எச்சம் காரின் கண்ணாடியில்
வழிந்தபடி இருக்கிறது
கிடைச்சிச்சுனா எனக் கோபத்தில் கொந்தளித்த சொற்கள்
கொஞ்சம் அடங்கி சிந்தனைப் பாதைகளை அகலத் திறந்து விட்டிருக்கிறது
எழுந்து அச்சமுறுத்தும் அடுக்குக் கட்டங்களில்
அவை தவறவிட்ட மரங்கள்
கொஞ்சம் கண்முன் வந்து போகின்றன
எழும்பியபடி விரிந்திருக்கும் எஃகு விரல்களின் 4ஜி கதிர்களில்
உயிரிழந்த அவற்றின் துணையொன்றும்
புலப்படுவதுபோல் உணர்கிறேன்
ஒரு மென்தாளின் துடைத்தலில்
காணாமல் போகின்றது காரில் விழுந்த எச்சம்
மிச்சங்களைத் தேடிப் பறக்கும்
பறவைகளின் சிறகசைப்பு ஏதோ ஒன்றைச்
சொல்லிச் செல்வதுபோல்
செவிகளை மூடிக்கொண்டு விழிகளுக்குள் கேட்க முயலும்
ஒரு கையாலாகாதவனாய்
தலைக்குமேல் வட்டமிட்டு சிரித்துக் கொண்டே பறக்கிறது
இன்னொரு பறவை
===============================================================

முதல் பக்கத்தோடு தடுமாறுகிறது
என் வாசிப்பு
தொடரும் என்ற வார்த்தைகளூடே
தள்ளாடிக் கொண்டிருக்கிறேன் நான்
வழமைப் பார்வைகளில்
விரலிடுக்கில் வழுக்கிக் கொண்டே நகர்கிறாய்
22052019
===========================================================
==••==••==
பத்திரமாக வைத்துக்கொள்
மீண்டும் தேவைப்படும்போது
அணிந்துகொள்ள வேண்டியிருக்கும்
உன்னிடம் கழட்டிக் கொடுத்தவர்கள் பற்றி
கவலை தேவையில்லை உனக்கு
தோலின் உயிர் மரித்தவனுக்கு
இதுவொன்றும் புதிதல்ல....
பாதைகள் பரவலாக விரிந்திருக்கின்றன
நீ கோரும் பலிகடா வரும்போது
புலியாக அணிந்துகொள்
ஏணிகள் பிடித்து ஏறும்போதோ
இழுத்துவிடும் போதே
கரங்கள் புதிதாய்த் தோன்றலாம்
பத்திரப்படுத்திக் கொள்
சவாரி என்பது
அடுத்தவன் முதுகு தேயும்வரைதான்
============================================================
 ============================================================
 ============================================================
=============================================================


=========================================================

==••==••==••==••==
அது பூப்பதுபோல் இருக்கிறது
மீண்டும் என்ற வார்த்தையைத்
தேடித் தேடித் எடுத்து வைத்தபோது
இலையுதிர்ந்த ஒரு கிளை மறைவினில்
உன் முகத்தை ஒளித்திருந்தாய்
இலைகளை இழந்து நிர்வாணம் காத்த
கிளைகளின் மீது
கொஞ்சக் கோபம் மீதமிருந்தது
இலைகளைத் தின்ற புழுக்களெல்லாம்
பட்டாம்பூச்சிகளாய் பறந்து கொண்டிருக்க
நீ புழுவாய் நெளிந்து கொண்டிருந்தாய்
உன்னருகில் இயலாத ஒன்றை இறக்கி வைத்துவிட்டு
வேகமாய் நடந்து கொண்டிருந்தேன்
கிளைகளில் ஏதோ மாட்டியதாய் ஓருணர்வு
கறுப்பு நினைவுகளில்
சிவப்பாய் ஒன்று ஊர்ந்துவர
பூமியை விட்டு அப்போதுதான்
எழத் தொடங்கியிருந்தது மழை!
16052019
===============================================================
====================================================

====================================================

#நீயற்ற_நாள் (அன்னையர் நாள் வாழ்த்துகள்)
==••==••==••
அவசர அவசரமாக கிளம்பி வருகையில்
காலுறை ஒன்று
நிறமாறி இருப்பதுபோல்
சலவை செய்யப்படாத சட்டையின் கோடுகள்
மனதோரம் நெளிகின்றன
மூக்கடைப்புக்கு இந்நேரம்
வேது பிடித்திருக்க வேண்டும்
தலைவலிக்கு மாத்திரை ஏதேனும்
எடுத்து வைத்திருக்க வேண்டும்
தூசடைந்த அறைகள்
ஒவ்வாமை ஏற்படுத்தி இருக்கலாம்
சாப்பிடலயா என்ற குரல்
திடீரெனக் கேட்பதுபோல் இருக்கிறது
நேற்று இரவு சாப்பிடாமல் படுத்ததால்
வயிற்றில் கொஞ்சம் எரிச்சல்
நெஞ்சுவரை ஏறிய காற்று
பயமுறுத்திக் கொண்டே வருகிறது
மௌனியாய் கிடக்கும் கைப்பேசியை
வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
துண்டிக்கப்பட்ட அழைப்புகளுக்காக
தண்டிப்பதுபோல் இருக்கின்றன அவை
தகவல் அறைகள்
வாழ்த்துகளால் நிரம்பி வழிகின்றன
யாருக்கு அனுப்பலாம்
சிந்தித்துச் சிந்தித்து அனுப்புகிறேன்
இன்றும் மதியம்
எங்கு என்ன சாப்பிடலாமெனச்
சிந்தித்தவாறே நகர்த்துகிறேன் பெருஞ்சோகமொன்றை
வெறுமைகளால் சூழப்பட்டிருக்கும் வரவேற்புக் கூடத்தில்
மாட்டப்பட்டிருக்கும் ஒளிபடத்தில்
அம்மாவும் நகர்த்திக் கொண்டிருக்கலாம்
எனக்கான கண்ணீர்த் துளிகளை!
12052019
=========================================================
 ===========================================================
==========================================================

==========================================================

===•••===•••===•••===•••==
பிஞ்சுகளின் தோள்களில் ஏற்றப் பட்டிருக்கின்றன
உர மூட்டைகள்
ஓடியாடிய நீரில் அமிந்து விட்டன
கார் கழுவியவனின் விரல்களும் பாதங்களும்
சாலையோரத்தில் காலணிகளின் கறுப்பை
மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன
சிறுவர்களின் கண்கள்
காரின் கண்ணாடிகளைத் தட்டி
கை நீட்டுகின்றன உழைப்பின் மிச்சங்கள்
தோளிலும் மடியிலும்
ஏதோ ஒரு குழந்தையைச் சார்த்தி
பிச்சைகளுக்கு நகருகின்றன பாவங்கள்
பதின்மம் தொடா சிறுமியொருத்தி
அறைக்குள் தள்ளப் படுகிறாள்
எச்சமொன்றின் இச்சை போக்க
பள்ளிக்கூடங்களைப் பார்த்தவாறே நகரும்
பசங்களின் பாவனைகளூடே
இன்றும் ஏதோ ஒரு மூலையில்
விரல் நசுங்கியோ
விழி பிதுங்கியோ
உயிர் கசிந்தோ
மண் தொடும் மனங்களுக்காக
நாமும் சொல்லிக் கொள்வோம்
இன்றைக்கான வார்த்தைகளை
தொழிலாளர் நாள் வாழ்த்துகள்
01052019
============================================================

===•••===•••===•••===•••
முதலில்
அது கடவுள் அமர்ந்திருந்த இடம் என்றார்கள்
ஒரு மரத்தடி நிழலில்
மௌனமாய் வீற்றிருந்தார் கடவுள்

கடவுச்சொல்லின்றி நுழைந்தவர்கள்
ஒரு கட்டமைப்புக்குள் மாறி
மரம் வண்ணம் புகத் தொடங்கிய பொழுது
வசதிகளுக்குள் கைதாகிப் போனதாக
கடவுள்மேல் விழுந்த குற்றச்சாட்டுகளின் போது அமைதியாகவே இருந்தார் அவர்

வண்ணத் துணிகளிலும் கொடிகளிலும்
கொஞ்சங் கொஞ்சமாக
கடவுள் கரையத் தொடங்கிய போது
தூதர்களின் போதனைகளில்
கடவுளைக் காண்பிப்பதாகச் சொன்னவர்கள்
பின்னால் கூட்டங்கள் கூட

கடவுள் அமர்ந்திருந்த இடம்
அமர்த்தியபடியே இருக்கிறது இன்னும்!
======================================================




நிறங்கள் மங்கிய ஓவியங்களில்..
===•••===•••===•••===•••=
வருடங்கள் மறந்த
ஒரு பேருந்து பயணத்தில்
சில கவிதைகளுடன் நீ
அருகருகே இருக்கைகளில் ஏதோ ஒன்றை
முணுமுணுத்தபடி நெஞ்சில் சாய்ந்து
அண்ணாந்து பார்க்கிறாய்
கண்களுக்குள் நுழைந்து
இதயம் விதானங்களில்
ஓவியங்கள் வரைந்தவாறே...
என்னைக் கடந்து ஓடும் இருள்கவிழ்ந்த மரங்களிலும் செடிகளிலும்
முடிவு பெறாத தேடல்களில்
மனம் மௌனித்துப் பயணிக்கிறது
இருள்கவிழ்ந்து கிடக்கிறது
உள்ளும் புறமும்!

குளிரை ஆவேசமாய்த் துப்பும்
பேருந்தின் சீற்றத்தில்
பக்கத்திருக்கை அரமற்று கிடக்கிறது
சில வார்த்தைகளை உதிர்க்க முயன்று
உதடுகளுக்குள் ஒளித்துக் கிடக்கிறேன்
நீ முணுமுணுத்த வார்த்தைகளைப்
இருக்கைகள் எங்கும் தேடுகிறேன்
இன்றும் கடந்தோடுகின்றன
இரவுகள் அணிந்த மலைகளும் மரங்களும்
என் பார்வைகள் பொருட்டன்றி!
நிறம் மங்கினும்
நீ வரைந்த ஓவியங்கள் மட்டும்
இதய விதானங்களில்..
எதையோ கூற முயன்று!
======================================================






====================================================

============================================================




கறுப்பு_வெள்ளையிலான வண்ணங்கள்
===•••===•••===•••===•••===•••
அவளைப்
பழைய நாட்குறிப்புப் புத்தகங்களில் தேடிக் கொண்டிருக்கிறான்
ஏதாவது ஒரு பக்கத்தில்
அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்பதில்
அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு

அவனுக்கு முன்னே பறந்து கொண்டிருக்கும்
அத்தனை தாள்களும்
நாட்குறிப்புகள் என நினைப்பதிலிருந்தே தொடங்குகிறது
அவற்றுக்கான சிக்கல்
வண்ணங்களாய் வாழ்க்கை மாறிய பிறகு
இன்னும்
கறுப்பு வெள்ளைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
அவனைப் பார்த்து
உங்களைப் போலவே நானும்தான்
சிரித்துக் கொண்டே கடக்கிறேன்
நினைவுகளின் அழகிய ஓவியங்களை
மனநலம் குன்றியவனின் பிதற்றலென
விரைவாகக் கடந்தோடுகின்றன நடைபாதைகள்
08042019
=======================================================



================================================
























இன்று
ஒரு மழை
தாமரை இலையில் நனைவதைக் கண்டேன்
வெள்ளத்தனைய மலர்நீட்டத்தில்
மழை நாணப்பட்டு நடந்ததை
நீங்களும் கண்டிருக்க வேண்டும்
கற்பனைகளைச் சுமந்து சென்ற
கொள்கலப் படகுகளில்
கொஞ்சம் குளிரும் நிறைய துளிகளும்
பயணித்துக் கொண்டிருந்ததை
என்னைப் போலவே நீங்களும் தவற விட்டிருப்பின்..
பார்த்திருப்பீர்கள்...
மழையை விடாது நனைத்துக் கொண்டிருக்கும்
ஒரு சிறு மேகத்தை....
பாறை மேல்!
02042019
=======================================================
==••==••==••==••==••==
என் பொழுதுகளைத் தேடி நடக்கிறேன்
நடிக்கிறேன் எனவே வைத்துக் கொள்ளுங்கள்
நிலைப்பேழைகளின் உள்ளேயும்
வெளியேயும் நாக்குகளை நீட்டும் நூல்கள்
வேண்டிய போதெல்லாம் வாங்கியவை
உறக்கத்தில் எழுப்பப்படாமல்
விரல்களும் விழிகளும் தடம் மாறிய வனங்களில்
நுழைந்து நுழைந்து செல்கிறேன்
என் பாதங்களை
கட்டாயமாக இழுத்துச் செல்லும் இணைய வெளிகளில்
முழுவதுமாக மூழ்கியிருப்பதாக அறிவு தட்டுகிறது
ஒரு மிகப் பெரிய போருக்குப் பின்
விடுவித்துக் கொண்டோடுகிறேன்
வேட்டை நாய்களாய் துரத்தும் மின்வெளிகளில்
கூனிக்குறுகி ஒளிகிறேன்
கைகளுக்குள் அடங்கிப் போன
விந்தை உலகத்தை
குரலடக்கி முடக்கிப் போடுகிறேன்
நேற்றைய நாளிதழின் இரண்டாம் பக்கம் நகர்கையில்
விழிகளும் விரல்களும் வேகமாய் ஓடுகின்றன
புலனத்திலோ ...
முகநூலிலோ ...
ஏதாவது தகவல் வந்திருக்கலாம்
நாளிதழின் சிதைந்த பக்கங்கள்
சிறு புன்னகையினூடே
காற்றில் படபடத்துக் தேடுகின்றன
மீண்டும் என்னை!
01042019
=======================================================


====================================================
=====================================================


=================================================

கனவுகள்_கனவுகளாகவே_இருக்கட்டும்
===•••===•••===•••===•••===•••==
முன்னர் எப்போதும் இல்லாத வகையில்
அந்த நிலவு சாளரவோரம் விழுந்திருந்தது
அறைக்குள்ளிருந்து ஓடிச் சென்ற விழிகள்
திரும்பவும் வந்து முகத்தில் ஒட்டிக் கொண்டன
இரவை இழுத்துக் கொண்டிருந்த உறக்கம்
சற்று நிதானித்து ஓர் ஓய்வை வேண்டிக் கொண்டிருக்கிறது
தூரத்தில் வானத்தின் கோடியில்
யாரோ தாளமற்ற பாடலை பாடிக் கொண்டிருக்க
சோம்பேறித்தனமான நடனக் கலைஞன் ஒருவனின் நடனமாய்
மனம் அடிகள் எண்ணிக் கொண்டிருக்க....
மீண்டும் என் உறக்கத்திற்கே திரும்ப எண்ணுகிறேன்
வீசியெறிந்த பூக்களை மீண்டும் கோர்த்துப் பார்க்க
ஏனோ இப்போது விரும்பவில்லை
உடைந்து கிடக்கும் வரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நீ இருந்தாலும்!
25032019
================================================

இறந்தவனின் ஆவி
==••==••==••==
முதலில் அவன் என்பதா
அது என்பதா
புகையின் அருவங்களில் எழுவதால்
அவை என்பதா..
நண்பன் என்பதால் அவனென்றே அழைக்க
அத்துணை ஆனந்தம் அவனுக்கு
தோளில் கைபோட முயன்று
சட்டென இழுத்துக் கொண்டான்
வாழ்பவர் குறை பேசத் தொடங்க
முகம் கோணலாகி மறுப்புகள் காட்டினான்
கடந்து போன எதிர்மறைகளை
நேர்மறையாக்குவோம் என்று சிரித்தான்
முதுகில் குத்தியவர்கள் பற்றி எழ
முகமுள்ளவர்களுக்கு முதுகெதற்கு என்றான்
மெய்ம்மை கடந்து வந்ததாய்
புன்னகை மட்டும் பேசென்றான்
வன்முறையற்ற உலகம் அழகென்று
கொஞ்சம் மௌனம் காத்தான்
காதல்களைக் கடந்த பரவசம்
அவன் பார்வைகளிலிருந்தது
சேமித்த பொருள்களில் அவன் இல்லையென்பதில்
இரு கை விரித்து நின்றான்
கண்ணுக்குத் தெரியா நண்பர்களைக் காட்டினான்
கிளைகளில், இலைகளில், உச்சாணிகளில், தரைகளில்
பல நிறங்களில், வடிவங்களில்
மொழியற்று, மதமற்று, இனமற்று, மொழியற்று
மனிதர்களாய் உருமாறிக் கொண்டிருப்பதாய்க் கூற
சட்டென மறித்தேன்
நீங்கள் ஆவிகளில்லையா என..
ஒரு பெருங்கோபத்துடன்
புகையாய் காற்றில் கலக்க
நீங்களே மனிதர்களாக இருந்து விடுங்கள்
எனும் குரல்
காற்றின் மடிப்பில் கேட்டுக் கொண்டே வருகிறது
22032019
======================================================


====================

#வேர்த்திரள் ( இது போட்டிக்கானதல்ல)
===•••===•••===•••===•••===•••==
உச்சியெரிக்கும் இரசாயண வெப்பப் பகலொன்றில்
குளிரை இறைக்கும்
கண்ணாடி அரண்களில் என்னைப் பதுக்கிக் கொண்டே
அடர் கட்டிடக் காடுகளில் பார்வைகளை
ஓட விடுகிறேன்
மழை மரித்துப் போன காரணங்கள் குறித்தாராய
வட்ட மேசை பேச்சுகளுக்கு
இன்னும் சில நிமிடங்கள் இருக்கின்றன
நேற்றுகூட தடம்தவறி ஊருக்குள் நுழைந்த
களிறுக் கூட்டமொன்றை விரட்டியிருந்தேன்
யாரோ பாகனொருவன்
தொலைந்து போன யானைத் தடங்களோடு
மழை வளங்களையும் உயிர்வளிகளையும்
கடத்திக் கொண்டு போய் விட்டதாய்
சுழலிக்குள் உடல் கொதித்தவாறே சொன்னார் தாத்தா
செயற்கை காற்றுக்குள் அவரும் மரித்திருந்தார்
65 ஆவது மாடியெங்கும் குளிர் உறைந்திருக்க
வெயிலுக்குள் உருகி விழாதபடி
குடைக்குள் சிக்கி ஓடி வருகிறார் தலைவர்
வேர்த்திரள்களுக்குள் களவாகிப் போன
நிறைய மழை மேகங்களையும்
கொஞ்சம் இயற்கைக் குளிரோடு உயிர்வளியையும்
மீண்டும் உயிர்த்தெழெச் செய்ய வேண்டுமாம்
==================================================
===================================================


===•••===•••===•••===•••===•••===
கொஞ்சம் வானமும்
மீதமிருந்த உடைந்த நிலாவின்
ஒரு பாகமும் மீதமிருந்ததாய்
சொன்னார்கள்
நிலங்களெல்லாம் கூறுபோட்டு
விற்றுத் தீர்த்த பின்னும்
ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும்
முள்வேலிகள் அமைத்த பின்னும்
மலைகளுக்கும் மடுக்களுக்கும்
உரிமை மாற்றிய பின்னும்
கடலின் சில பாகங்கள் மட்டும்
விலைக்கு இருப்பதாக
அவர்கள்தான் சொன்னார்கள்
பாதைகளில் வரிகள் கட்டிவிட்டு
கடலுக்குள் இறங்க நினைத்தவர்களுக்கு
அலைகளின் விலைகள்கூட
கொஞ்சம் அநியாயமாய்தான் பட்டது
கரையில் கால்வைத்து
கட்டணம் மறந்தவர்கள் கழுத்துக்கும்
கயிறு தயாராகவே இருந்தது
நசுங்கிக் கடந்த பொதுவுடமையின்
முதுகில்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது
முதலாளித்துவம்....
கண்கள் மறைக்கப்பட்ட மனிதம்
மட்டும்...
தடுமாறி... தடுமாறி...
சே..
எச்சரிக்கைப் பலகையைப்
பார்த்து விட்டாவது உள்நுழைந்திருக்கலாம்!
=======================================================

===•••===•••===•••===
இவற்றை மௌனம் என்றே
நீ கடந்து செல்கிறாய்
கொதிக்கும் வார்த்தைகளை விழியோரம் வைத்திருக்கிறேன்
ஒரு துளி கண்ணீருடன் திரையிட்டு
அழுகைகளில் சோகம் கரையுமென
நமட்டுச் சிரிப்பில் கீறிச்செல்கிறாய்
உன்னைச் சுற்றி நீ அமைந்திருக்கும் அரணில்
அவ்வளவு நம்பிக்கை உனக்கு
என் ஓலங்கள்
காற்றில் கிழிபடும் மென்தாள்கள் என்கிறாய்
எனக்காக எழும் எழுத்துகளில்
உன் நகங்களின் வக்கிரம் புரிகிறது
என் அடங்களிலிருந்து சிலர்
எழத் துடிக்கிறார்கள் அவர்களுக்காக
என் மரணமென்பது
வஞ்சிக்கப்பட்டோரின் எழுச்சியாய் பரவும்போது
உனக்கும் தெரிய வரலாம்
மௌனம் என்பது உறங்கும் எரிமலையென!
13032019
=======================================================
இசையற்ற வரிகளாய்...
===•••===•••===•••===
ஒரு செந்தூராவின் துணையுடன்
தனியனாய் ஒரு
இரவு நேர தூரப் பயணத்தில்
நாழிகை கடக்கும் பயணங்களில்
திடீரென அலை மாறிய செந்தூரன்
ஜன்னல் விலகிய திரைச்சீலைகளின்
கொடையில்
தூரத்து வெளிச்சத்தின் நிழலில்
மௌனங்கள் கடந்து செல்கிறாய்
கனங்களை என்னுள் இறக்கிவிட்டு
எஞ்சிய காப்பியின் காய்ந்த சாயல்களில்
எதையோ வரைந்து வைத்தது போல்
ஒழுகலும் ஓவியமாய் தெரிய..
நீ
வரைந்திருக்க நியாயமில்லை என
உள்மனதோரம் முனகும் குரல்
ஒவ்வொரு அலையாய் தாவியும்
எதிலும் இருப்புக் கொள்ளாமல்
தூரங்களில் வீசியெறியப்படும் தொலையியக்கியாய்
வண்ணம் தொலைத்த ஓவியம் போல்தான்
மனமும்
கனவை விலக்கி வைத்து விட்டு
கதவைத் திறக்கையில்
விரிந்து கிடக்கும் செவ்வானத்தில்
செந்தூரா மீண்டும் மிதந்து வருகிறது
இசையாய்!
===========================================================
=========================================================
===•••===•••===•••===•••===•••==
சிறகுகள் முறிந்து விழும்
பறவைகளில் சமாதானம் பார்க்கிறோம்
வானளாவிகள் என்று புறாக்களை விடுத்து
வானலியில் சமையல் குறிப்புகளைச் சரி பார்க்கும்
அமைதிக் குழுக்களில் இன்னும் நம்பிக்கையிருப்பதாய் சொல்கிறீர்கள்
குலுக்கிச் செல்லும் கைகளில்
குருதிக் கறை கழுவப்படாமலேயே இருக்கிறது
துமுக்கிகள் துப்பிய ரவைகளின் வாடை
இன்னும் நாசியை எச்சில் படுத்திக் கொண்டே வருகின்றன
எங்கோ வெடித்த ஒரு வெடியில்
செவிகளைச் செவிடாக்கிக் கொண்டே
கூண்டுகளைத் திறக்கிறோம்
பறப்பதற்கு பறவைகள் நிறைய மீந்திருக்கின்றன
வண்ண வண்ணக் கொடிகளில்
எங்கள் வெண்புறாக்கள் சிறைபட்டிருக்கின்றன
மேடைகளில் முழங்கும் குரல்களை ஈரப்படுத்த
புறாக்கள் விருந்துகளாக தட்டில் படுத்திருக்கின்றன
புறாக்கறி என ஒருவன் இளக்காரமாகக் கூறிப் போகிறான்
அவன் கைகளிலும் ஓரிரு புறாக்கள்
பறப்பதற்கு சிறகுகளை விரித்த படியே!
05032019
=============================================


ஒரு மழைக்குளிரின்
சில்லென்ற இரவுப் பயணத்தில்
சட்டென அறுந்து விழுகின்றன
கண்களின் எச்சத் துளிகள்
கரும் உருவங்களாய்
சீறி மறையும் மரங்களிலும் பாறைகளிலும்
கவனம் அவ்வப்போது பாயும்போதும்
முகங்களில் அறையும் எதிர்வரிசைகளில்..
உன் எச்சரிக்கைகளின் எதிரொலிகளில்
விழிகள் விரிந்து கொண்டே
தூக்கத்தைக் கடக்கும் இரவுகள்

==================================================












No comments:

Post a Comment