Friday, February 10, 2017

சாமிகளில் ஆசாமிகள்

சாமிகளில் ஆசாமிகள்
===•••===•••===•••
சாமி கண்ணைக் குத்தும்
தொட்டுக் கும்பிட்டுக்கோ என்றபடியே
தாத்தா
கடவுளைக் கண்ணுக்குள் வைத்து மிரட்டினார்
இன்றும்
தாள்கள் மிதிபடும்போதெல்லாம்
கண்ணில் ஒற்றிக் கொண்டு
கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்
வாசலில் உண்டியலோடும்
கடவுள் படத்தோடும் நிற்கும் போதெல்லாம்
காணிக்கையைத் தவறாமல்
போட்டு விடுகிறேன்
சாமியேதும் கண்ணைக் குத்துமோ
என்ற அச்சத்தில்
கோவில்களைக் கடக்கும் போதெல்லாம்
கைகள் கன்னம் ஒத்திப் போகின்றன
திருவிழா கூட்டங்களிலும்
சாமியிறக்கி ஆடுபவரையும்
தயக்கத்துடன் வழிபடவே முயல்கிறேன்
காளான்களென பூத்துவரும்
சிறுசிறு தெய்வங்களுக்கும்
சேர வேண்டியவை சரியாகவே
பொருந்தி விடுகிறது
சாமி கண்ணைக் குத்தும்யா
கண்ணில் ஒத்திக்கோ என்ற
என்னைப் பார்த்து
மகன் கேட்கிறான்
கோடிக் கோடியாய் கோவில் பணத்தில்
வாழ்பவனையும்
கடவுள் காணிக்கைகளில்
குளிர்க் காய்பவனையும்
சாமி நகைகளில்
சம்சாரத்தை அலங்கரிப்பவனையும்
ஏம்பா .....
சாமி கண்ணைக் குத்தவில்லை...

No comments:

Post a Comment