Friday, February 10, 2017

பிரிவு என்பது எளிதல்ல...



பிரிவு என்பது எளிதல்ல...
===•••===•••===•••==
ஒரு கடுந்தவத்திற்குப் பின்
உன் பிரிவினைச் சுமக்கும் கனத்தில்
மனதைத் தேற்றி வருகிறேன் 
கிளையிலிருந்து உதிரும்
இலை போலன்றி..
நீரினை நீங்கும் நுரை போலன்றி..
மலையினின்று நழுவும் அருவிகள் போலன்றி..
இருளில் மறையும் நிழல் போலன்றி
அவ்வளவு எளிதாக
அது இருப்பதில்லை போலும்..

சட்டெனத் திரும்பும் மனவெளிகளில்
உன்னை வெறுமையில் காண்பதும்
சாலைகளில் சறுக்கும் மரங்களைப் போல்
நீ மறைந்தோடுவதும்
கவிதைகளில் ஏதோ ஒருவரியில்
நீ கடந்து செல்வதும்
சட்டைப் பொத்தான்களில் ஏதோவொன்றில்
நீ சிக்கிக் கொண்டிருப்பதும்
இரவின் கனத்த மௌனங்களில்
அறியாமல் விழிகள் கரைவதும்
இப்படி...
நீண்டு கொண்டே போகும் பட்டியலில்
கொஞ்சம் விடுபட முயன்று

பிரிவுகளின் விளிம்புகளில்
சில கணம் நிதானித்துத் திரும்புகையில்
பிரிவு என்பது எழுதுவதுபோல் அல்ல
என.......
.............. உரக்கச் சொல்கிறாய் நீ
தூரமிருந்து!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment