Friday, February 10, 2017

ஒரே வரியில் நீ



ஒரே வரியில் நீ..
===•••===•••===
வரிகள் கிடைக்காமல் 
அந்த வார்த்தைகள்அலைந்த போதுதான்
நீ வந்து சேர்ந்தாய்
உன்னை எங்கே வைப்பது
எதுகையிலா மோனையிலா
சந்தத்திலா சீரின் வரிசைகளிலா
புதிய குழப்பத்தில்
வரிகள் வாதங்கள் புரியத் தொடங்கின

முடிவுகள் முடிக்கப்பட்டு
எழுகின்ற தருணத்தில்
அந்த ஒரு வார்த்தை
பல வார்த்தைகளைப் பிரசவிக்கத் தொடங்கியது
உன் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்
ஊறியெழுந்த வார்த்தைகளும்
உன் உதடு உடைக்கா மௌனத்தை
மொழி பெயர்த்த காற்றும்
உன் பாதங்களின் அச்சுகளை
அளவெடுத்துப் பார்த்த நிலமும்
உன் விழிகளுக்குள் குளித்தெழுந்த
மெல்லிய சிறு குளிரும்
வெவ்வேறு மொழிகளை
என்னுள் திணிக்கும் வேகத்தில் இறங்க

சலசலப்பேதுமின்றி..
ஒரே வரியில் உன்னை எழுதி நிமிர்ந்தேன்

ஒரு கவிதை
வார்த்தைகளுக்குள் அடங்க மறுக்கிறதென்று!


FEB 14... VALENTINE DAY


No comments:

Post a Comment