Friday, February 10, 2017

அதுவரை .....


அதுவரை .....
===•••===•••
அதுவரை
அந்த மழை பிடித்திருந்தது
ஓர் இளங்குளிரை மெதுவாக 
உடலுக்குள் நுழைத்து
இதமான ஒரு சாரலில்
உடலின் ஓரங்கள் மட்டும் நனைத்து
கள்ளமில்லா ஓர் உறக்கத்திற்கு
கண்களை அழைத்து
அதைவிட....
காதலற்ற ஓர் உரசலில்
உன்னுடன் நடக்க வைத்து
முரண்டு பிடிக்கும் ஓர் வரியை
கவிதைக்குள் இழுத்து வைத்ததுபோல்!

அதுவரை
அந்த மழை பிடித்திருந்தது..
சூரியப் பார்வையின் மத்தியில்
திடீரெனப் பெய்து
குடை நோக்கிப் பாயும்
கூட்டம் நடுவே
உன் விழி நோக்கி நகர்ந்த
இதயத்தினூடே....
ஒற்றைக் குடையில் உடலிடுக்கி
யாரோ ஒருவருடன்
நீ நடந்து போகும் வரை!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment