Friday, February 10, 2017

#அன்பெனும்_அப்பா







#அன்பெனும்_அப்பா

தூக்கம் மறந்து
நீ துக்கம் சுமந்ததாய் சொன்னார்கள்
தூக்கிப் போட்டுக் கொஞ்சும்
வேளைகளிலும்
உன் இமைகளை என்
முதுகில் பதித்திருந்ததாக கூறினார்கள்
உன் தோள்மீது அமர்ந்துதான்
உலகத்தையே முதன்முதலில் பார்த்ததாக
உடனிருந்தவர்கள் பகன்றார்கள்
காலணி மறந்த உன் கால்கள்தாம்
என் காலணிகளாக மாறினயெனவும்
அன்பாக எடுத்துரைத்தார்கள்
கண்டிப்பு என்ற பெயரில்
கதவுகளுக்குப் பின்னால்
உன் கண்கள் சிந்திய
கண்ணீரின் மீதத்துளிகளைக் காட்டினார்கள்
இடுப்புயர வளர்ந்த பின்னும்
என் முதுகெலும்பாக நீ
உடன்வந்ததைக் கதையாகவே கூறினார்கள்
புள்ளிகள் பார்த்த கல்வியில்
நீ
என் புரிதலை மட்டுமே கண்டதாக
ஆசிரியர்களும் கேலி செய்தனர்
திருமணம் உன் தேர்வென
தேர்வெழுத என்னையே முன்னிறுத்தியாக
உறவுகள் பொறாமையாகப் பார்த்தனர்
தோளுயரம் வளர்ந்துயர்ந்த
ஒரு புரிதலுக்குப் பின்
நீ எங்கேயெனத் தேடுகிறேன்
என் அன்பெனும் அப்பா..

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment