Friday, May 13, 2016

ஊடல்


இறுகிய அந்த இரவினில்
ஜன்னலைத் தாண்டி
அறைக்குள் பெய்து கொண்டிருந்தது
அந்த ஊமை மழை
எதிரெதிர் திசைகளில் பார்வைகளைப் ...
பதித்துவிட்டு
கோபங்களை மட்டுமே
மென்று கொண்டிருந்தோம்

நாம் உடைத்து வீசிய
வார்த்தைகள்
கட்டிலைச் சுற்றியும் சிதறிக் கிடந்தன
கூட்டிப் பெருக்க மனமின்றி
நீயும்
எடுத்துக் கோர்க்க விருப்பமின்றி
நானும்
ஒரு தலைகனத்துக்குள்
மனதைச் செருகியிருந்தோம்..

எட்டி எட்டி
எதையோ கூற வந்த
துண்டு நிலாவும்...
அப்படியே முகம் புதைத்து மறைந்தது
இருட்டு மேகத்துள்...

ஏதோ முனகியபடி !!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment