Sunday, May 29, 2016

மழை விட்டும் தூவானமாய்


ஓர் உறக்கத்தின் உளைச்சலாக
தொடர்ந்து கொண்டே இருக்கிறாய் ..
இமைகளை இழுத்தறுக்கும் விரல்களின்வழி
நினைவுச்சரங்களைத் தொடுத்துக்கொண்டே
வருகிறாய்!

நாள்காட்டிகளின் அவசர நகரல்களில்
நகராமலேயே அடம் பிடிக்கும் 
உன் நாணக் குறியீடுகள்!
அவ்வப்போது அழுத்தும் 
அலுப்புகளின் அவசரங்களில்
கொஞ்சம் திருடித் தூங்கினும்
திடீரென விழிக்கும் நாழிகைகளில்
உன் கனவு ஊர்வலங்கள் ...

மழை விட்டும் தூவானமாய்
மனதின் விளிம்புகளில் ஒட்டியிருக்கும்
நம் நாள்களின் வனப்பில்
பயணித்துக் கொண்டே இரசிக்கிறேன்...

களவாடப்படும்
மீந்திருக்கும் கொஞ்சம் உறக்கங்களையும்!

^^
முனியாண்டி ராஜ்^^

No comments:

Post a Comment