Sunday, May 29, 2016

மௌனம் களவு படாமலேயே


ஓர் பெருத்த வெளியில்
அடர் மௌனத்தினூடே
என்னை அறுத்துக் கொண்டே வருகிறாய்
காற்றின் கரைச்சலில்
கலந்து போகும் ஒலிகளிலும்
காதுகளை ரணப்படுத்தும் இரைச்சல்களிலும்
என் மௌனம் களவு படாமலேயே
இருக்கிறது ....

தூரங்களில் மேயும்
என் பார்வைகள்
வெறும் வெறுமைக்கே உணவாகின்றன
எந்தச் சிறு தூண்டல்களிலும்
நான் துலங்க முடியாமல்
பெருத்த ஒரு வெளியில்
என்னைத் தேடிக் கொண்டே
வருகிறேன்.....
சுற்றிச் சுற்றி அலசும் விழிகளில்
நான் 
வேற்றுலகவாசியாகத் தெரியலாம்..
அவர்களின் மொழிகளில் 
நான் ஏதோ ஒருவகையில்
விமர்சிக்கப்படலாம்....

இருந்துவிட்டுப் போகட்டுமே..
செவிகளைச் செவிடாக்கும் ஒலிகளிலும்
காற்றைக் களங்கமாக்கும் புகைகளிலும்
அவையாவது கலந்து போகட்டும் ..

என் மௌனம் உடைபடாதவரை
நானும் கிரகவாசியாகவே!

*
முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment