Friday, May 13, 2016

உனக்கான அந்தப் பொழுதுகள்


அதிகாலை தேவதைகள் அணைக்க
வரும் தருணம்..
அலறம் ஒரு தடவை அலறி
அமைதிக்குள் அடங்கும்....
நுனிக்கால்கள் போர்வைக்குள்...
மெல்ல பதுங்கும் கணங்களில்
எழ வைக்க விரும்பாமல்
என்னை உனக்குள்ளே வைத்திருக்க
முயல்கிறாய் ..

இரவின் இம்சை இனிப்புகள்
இன்னும் ஆங்காங்கே விரலோரம்
அமர்ந்திருக்கின்றன..
என்னை இழுத்துச் சேர்த்த படி
இன்னொரு கவிதையைக் கேட்கிறாய்..
கவிதைகள் வார்த்தைகளால் மட்டுமே
கூறமுடியுமென்ற வட்டத்தை எனக்கு
உடைத்துக் காட்டியவள் நீ..

என் கனவுச் சுவர்களில்
உன்னைவிட இவ்வளவு அழகாக யாரும்
வண்ணமிட இயலாது..
இரவு கலந்த மெல்லிய வெளிச்சத்தில்
வண்ண பிம்பத்தில்
நீ அழகாகவே சிரித்துக் கொண்டிருக்கிறாய்
ஆண்டுகள் பல கிழிக்கப்படா
நாள்காட்டி அருகில் !

காலை இருட்டை விரட்டியெழும்
என்னால்..
நீ விட்டுச் சென்ற கருக்கலிலிருந்து
இன்னும் வெளிவர முடியாமலேயே...

இன்றும் !!!

*முனியாண்டி ராஜ்.*
See more

No comments:

Post a Comment