Sunday, April 2, 2017

#இருக்கைகள்_அற்ற_கணங்கள்

#இருக்கைகள்_அற்ற_கணங்கள்
===•••===•••===•••===•••
எனக்குப் போதுமான உணவு கிடைக்கிறது
என் தட்டில் உணவு பத்திரமாக இருக்கிறது
அவ்வப்போது எனக்கு
இறைச்சித் துண்டுகள் வீசப்படுகின்றன
என் தட்டில் வீழும் மீன்கள்
புதியதாக இருக்கின்றன

மற்றவர் சுவைகளுக்காக
என் நா மரிக்க வேண்டியதில்லை
மற்றவரின் பழைய சாதங்களுக்காக
என் அரிசிகள் உதிரத்
தேவையில்லை
அவர்களின் தாகங்களுக்கு
என் கனிம நீர் புட்டிகள்
ஆடை களையத் தேவையில்லை
ஆற்றுநீரும் குளத்து நீரும்
போதும் அவர்களுக்கு

மற்றவர் உலைகளில் கொதிக்கும்
குழும்புகளில்
என் மனம் திரும்புவதில்லை
தற்சமயம்
என் நாற்காலியின் நான்கு கால்களும்
பெயரின் ஒவ்வொரு எழுத்துகளும்
உறுதியாகவே இருக்கின்றன
ஆட்டம் காணும் நிலைகளில்
அவைகளை வைத்திருக்கப் போவதில்லை
அவசியங்களற்ற பொழுதுகளில்
ஆடைகள் களையப் போவதுமில்லை
அதற்கு நீங்களாகவே
எனக்கொரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள்

அரசியலற்ற ஒரு விடியலில்
நானும்
உங்கள் வாசல் வரலாம்

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment