Thursday, November 10, 2016



முழுமை பெறாமலேயே...
===•••===•••===•••===
முழுமை பெறாத ஏதோவொன்று
இந்தத் திருகு வெட்டுப்புதிரில்
விடுபட்டது போலவே உள்ளது
பல சாலை வளைவுகளிலும்
முக்கோண நாற்கோணச் சந்திப்புகளிலும்
கடந்து போகும் எந்த முகமும்
இதில்
பொருந்தாமலேயே கனவைக் கொல்கிறது
ஒரு முதல் தொடுதலில்
சட்டென விரலிழுத்ததில்
கண்ணின் ஓரம்வழிந்த
அந்த ஒருதுளி நாணத்தின் சாரலா
கவிதையென நாலுவரிக் கிறுக்கலில்
உன் மௌனத்தை ஒளித்த
அந்தக் கடைசி வினாடிகளின் சலனங்களா
ஒரு கடிதம் கொடுக்கவும்
விரல்முதல் விழிவரை வியர்த்திருந்த
அந்தத் துளிகளில் ஏதேனும் ஒன்றா..
அவசர அவசரமாக எதையோ கூற
ஓடிவந்து...
படிக்கட்டுகளில் பதுங்கிக் கொண்டாயே..
பிறந்த நாள் வாழ்த்துகள் எனும்
சொற்கள்கூட பாதியில் மறைந்தே அதுவா..
அதில் ஏதேனும்..
உன் விழிகளோரம் ஓடியோடி அலைந்த
எனது நிழல்களின் எச்சங்களாக கூட..
உன் முகவரி தேடி களைத்தாகிவிட்டது
கூகுளும் அலசி ஓய்ந்து விட்டது
அந்த ஒரு வெட்டுத்துண்டுக்காக
என் திருகுவெட்டுப் புதிர்
இன்னும்
பூர்த்தியாகாமலேயே போகிறது...

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment