Thursday, November 10, 2016

உயிர்பெறும் வடுக்கள் ...


உயிர்பெறும் வடுக்கள் ...
===•••===•••===•••==
வழக்கம் போலவே
மண்டையில் கொட்டிவிட்டுச் செல்கிறது
இந்த ஐப்பசியின் ஒருநாள்
விசையுந்திலிருந்து
உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு
தள்ளிப்போய் நின்றது அந்தக் கனவுந்து
இரத்த வெள்ளத்தில் நீயும்
கண்ணீர் வெள்ளத்தில் நானும்!
திடீரென வறண்டுபோனது
தொண்டை மட்டுமல்ல..!!!
சிலைபோல் நின்றவனை
யாராவது உசுப்பி விட்டிருக்க வேண்டும்
சுற்றியிருந்த கூட்டத்தில்
வேற்றுக்கிரகவாசியாய் வேறான பிறகு
என்ன செய்ய..!!
சுற்றியிருந்த நாளிதழ்களால்
உன் முகத்தை மூடிவிட்டு
நீ
இறந்து விட்டதாய் உறுதி செய்திருந்தார்கள்
யாரோ.......
கவான்?* ... என்ற வார்த்தைகள்
உடலை மட்டுமல்ல
உயிரையும் உலுக்கிச் சென்றன...
அவசர ஊர்தியில்
நீ கொண்டு செல்லப்படும்போது
நான் மட்டும் அப்படியே..!
கூட்டம் கலைந்த பின்னும்
தனித்த ஒருவனாய்
அந்தப் பகலும்
இரவில் கரைந்து போகும்வரை......!!!

வழக்கம்போலவே
தலையில் கொட்டிவிட்டுப் போகிறது
இந்த ஐப்பசிகளில் ஒருநாள்
கையாலாகாதவனுக்காக....!!

(*கவான் - நண்பன்)

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment