Friday, February 5, 2016

இன்னும் களவாகாத சாரல்கள்


கொட்டிவிட்டுப் போன மேகங்களைத் தேடி
இன்னுமோர் மழை வரலாம்…
கதிரவனின் காதலில்
கடலுக்குள் நுழைந்து நீரை உறிஞ்சி
வேறொரு மேகங்களுக்குள் செலுத்தி
கருமையாக்கிக் காத்திருக்கும் நிலையில்
இன்னுமோர் மழை வரலாம்..
உதிர்ந்து திரியும் மழைத்திட்டுக்களிலோ
இன்னும்
கவரப்படாமல் இருக்கும்
ஏதாவதொரு தொட்டியிலோ
அந்த மழைகளின் எச்சம் மீந்திருக்கலாம்….
வெள்ளமாய் பாய்ந்து
ஏதோ ஒரு நதியிலோ … ஓடையிலோ
கலந்து போயிருக்கும் ஒரு சில 
துளிகளைத் தேடியும்
அந்த மழை மீண்டும் வரலாம்…
விட்டுப் போன அந்த மழையைத் 
தேடி…..
கண்ணாடிச் சாளர ஓரங்களில்
மௌனமாகவே அமர்ந்திருக்கிறேன்…
என் சாரல்கள் களவுபடாத வரை
எந்த மழையும் கறையற்றதே!
--- முனியாண்டி ராஜ்.


1 comment: