Tuesday, February 23, 2016

ஒரு போர்வீரனின் வாக்குமூலம் .. பாகம் 01



விழிகளிலிருந்து
ஒவ்வொரு மனிதராய் நழுவ...
வெளிச்சம் மெல்ல மெல்ல
இமைகளுக்கு வெளியே!
இந்த இரவு
மீள முடியாத்தாக இருக்கலாம்!
நாளைய வெளிச்சம்
எனக்கு மட்டும்
கிட்டாமல் போகலாம்!

அதோ
என் பாதங்களின்
ஒவ்வொரு சுவடுகளிலும்
வெளிச்சத்தின் எச்சங்கள்
தீக்குழந்தைகளாய்!
எனது விரல்களின் நுனிகளால்
இன்னும் இருக்கின்றன...
கவிதைகளாய்
நாளைய தேசிய கீதங்கள்!

அதிகாரங்களும் ஆயுதங்களும்
என் உடலை எரிக்கலாம்..
எரியும் தீ நாக்குகளில்
பேசப்படாத பிரகடனங்கள்
எந்தச் செவியிலும்
விழாமல் போகலாம்...
இந்தப் பிரகடனங்கள் நாளைக்கே
புதிய தேசத்தின்
திக்கெங்கும் ஒலிக்கலாம்!

பூமியில் புதைக்கப்படும்
ஒவ்வொரு கவிதையும்
பூகம்பமாய் வெளியேறும் போது
புரிய
.....வரும்.............
ஒரு
வரலாற்றின் தொடக்கம்!

--முனியாண்டி ராஜ்............

No comments:

Post a Comment